1982. ஒரு தமிழகக் கிராமம். ஒரு ஸ்டுடியோவில் போட்டோ எடுக்க ஒருவர் வருகிறார். அவரைக் கேமிரா முன்பு நிற்கவைத்துவிட்டு கேமிராவைத் தயார் செய்கிறார் போட்டோகிராஃபரான நம் ஹீரோ. தயார் செய்துவிட்டுத் திரும்பிப் பார்க்கிறார், அதிர்ச்சியடைகிறார். என்னவென்று பார்த்தால் அந்த ஒருவரோடு இன்னும் நால்வர் நிற்கிறார்கள். அதாவது பேமிலி போட்டோ எடுக்க வந்தார்களாம். இது நகைச்சுவை, இதற்கு நாம் சிரிக்கவேண்டும். அடுத்து அவர்களை போட்டோ எடுக்க வாகாக நீண்டநேரம் முன்பின்னாக, இடவலமாக நகர்த்திக் கொண்டேயிருக்கிறார் ஹீரோ. அதுவும் நகைச்சுவையாம். அதற்கும் நாம் சிரிக்கவேண்டும். அதன் பின் போட்டோ எடுக்கும் முன், வாசலில் நிற்கும் நண்பர் அழைக்க வெளியே செல்லும் ஹீரோ மறந்துபோய் சினிமாவுக்குப் போய்விட்டு இரவு ஸ்டுடியோ திரும்புகிறார். இந்த குடும்பம் இன்னும் காமிரா முன்பு நின்றுகொண்டிருக்கிறது. இதுவும் நகைச்சுவை, இதற்கும் நாம் சிரிக்கவேண்டும். இன்னும்.. சலிப்பூட்டும் கண்டதும் காதல், முதியவர் மரணிப்பதற்கு முன்பே போட்டோகிராஃபர்களை வரவழைப்பது, இவர்களும் நாட்கணக்கில் தங்குவது, மெதுவாக செல்லும் பைக் என பிரச்சினைகள் ஏராளம். இப்படி எரிச்சலைக் கிளப்பும் ஓவர் சினிமாடிக் நகைச்சுவைகளுடன் துவங்கும் படம், ஒரு கட்டத்தில் எழுந்து ஓடிவிடலாமா என்ற எண்ணம் தோன்றும் தருவாயில்தான் சற்று திசைதிரும்பி சுவாரசியம் பிடிக்கிறது.
சில படங்களுக்கு முதல் 10 நிமிடங்களைத் தவறவிடாதீர்கள் என அறிவிப்பு செய்வார்கள். இந்தப் படத்துக்கு முதல் 30 நிமிடங்களைத் தயவு செய்து தவறவிடுங்கள் என அறிவிப்புச் செய்யலாம்!
சில படங்களுக்கு முதல் 10 நிமிடங்களைத் தவறவிடாதீர்கள் என அறிவிப்பு செய்வார்கள். இந்தப் படத்துக்கு முதல் 30 நிமிடங்களைத் தயவு செய்து தவறவிடுங்கள் என அறிவிப்புச் செய்யலாம்!
சாணியள்ளி 5 ரூபாய் பணம் சம்பாதித்துக்கொண்டு போட்டோ எடுத்துக்கொள்ள முனீஸ்காந்த் எனும் காரெக்டர் மீண்டும் வரும் இடத்திலிருந்துதான் கதை துவங்குகிறது, படமும் பிக்கப் ஆகிறது. விஷ்ணுவை விட காளியே அந்த ஹீரோ காரக்டரைச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இடைவேளைக்குப் பிறகு அதுவும் குறிப்பாக இறுதிக்காட்சிகளில் சுவாரசியம் கூடிவர, நகைச்சுவையில் படம் அதகளம் செய்கிறது.
ஹீரோ விஷ்ணுவின் நண்பர் பாத்திரத்தில் வரும் காளி வெங்கட்டும், அவரின் இயல்பான டயலாக்குகளும், முனீஸ்காந்த் பாத்திரத்தில் முற்றிலும் எதிர்பாராத விருந்தை அளித்த நடிகர் ராம்தாஸும்தான் படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள் என்றால் அது மிகையில்லை. அதிலும் முகபாவங்கள், தனித்துவமான குரல், திறமைக்குத் தீனி போடும் அட்டகாசமான கதாபாத்திரம் என ராம்தாஸ் ஜொலிக்கிறார். இத்தனை நாட்கள் எங்கு ஒளிந்திருந்தீர்கள் ராம்தாஸ்? நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு படத்தை இரண்டாம் முறையும் காணவேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது. அதற்கு ஒரே காரணம் ராம்தாஸ். குறிப்பாக விஷ்ணுவை அடித்து, அடிவாங்கும் காட்சியில் மனிதர் காட்டும் பரிதவிப்பு, கலக்கல் ரகம்! நீண்டநாட்களுக்குப் பின்னர் ஆனந்தராஜ், அவரது டிபிகல் மேனரிசத்தில் தோன்றுவது அழகு.
வானமுனி கல்லை அதுவும் கிளைமாக்ஸில் அலட்சியமாக பயன்படுத்திய விதம், சாமியார் காரெக்டரின் பேக்ட்ராப் (வரம்பு மீறும் அந்த ஏ ஜோக் தவிர்த்து), பாஸ்மார்க் வாங்கும் 1982 பீரியட் ஆர்ட், விறுவிறுப்பான கடைசி அரைமணி நேரம், வசனம், பாடல்களை அளந்து பயன்படுத்தியது என பல விஷயங்களால் புதிய அலை இயக்குனர்கள் வரிசையில் ராம்குமாருக்கும் நிச்சயம் இடம் தரலாம். பார்க்கவேண்டிய படம்!