படத்தைத் நிச்சயமாக பார்த்தே ஆகவேண்டும் என ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். ஆனால், சந்தானத்துக்காக அல்ல! சந்தானத்தின் கலாய்த்தல் ஜோக்ஸெல்லாம் எப்போதோ போரடிக்கத் துவங்கிவிட்டன. பிறகேன்? படம் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தெலுங்கில் மெகா ஹிட்டான, எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘மரியாத ராமண்ணா’ படத்தின் ரீமேக் என்பதால் மட்டுமே அந்த முடிவு!
ராஜமௌலி ஒரு சுவாரசியமான மனிதர். இவர் கமர்ஷியல் படங்களைப் பின்னும் அழகே தனிதான். மாஸ் ஹீரோக்களை வைத்து பிளாக் பஸ்டர்களைத் தந்தவருக்கு, திடீரென, தன் படங்கள் ஹிட்டாவதற்கு ஹீரோக்கள் மட்டுமே காரணமில்லை என்று நிரூபிக்க ஆசை வந்ததோ என்னவோ தெலுங்கில் பிரபலமான சுனில் எனும் காமெடியனை வைத்து இந்த மெகா ஹிட்டைத் தந்தார். (பிற்பாடு, இப்படி காமெடியன் கூட தேவையில்லை என்று ஒரு ஈயை ஹீரோவாக்கி பாக்ஸ் ஆஃபீஸை அடித்து நொறுக்கியதெல்லாம்தான் நீங்கள் அறிவீர்களே!) அப்படிப்பட்டவரின் படம் எப்படி இருக்கும் என்று காண ஆசையிருக்காதா எனக்கு? இவர்கள் ரீமேக் செய்த அழகில், எப்படியும் கோக்குமாக்குகள் இருக்கத்தான் செய்யும் எனினும், தெலுங்குப் படம் பார்க்காத நமக்கு ஒப்பிட்டுப் பார்க்கும் அந்தப் பிரச்சினை கிடையாது. மேலும் மினிமம் சுவாரசியம் நிச்சயம் என்ற நம்பிக்கையிருந்தது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.
இப்படி ஒரு படம் திட்டமிட்ட பிறகு ராஜமௌலியின் முன்னால் என்னென்ன தேவையெல்லாம் இருந்திருக்கும்? காமெடியனை வைத்து ஃபுல் லெங்க்த் காமெடி படம் பண்ண ராஜமௌலி தேவையில்லை. அதே நேரம் ஆக்ஷன் மசாலாவும் பண்ணமுடியாது. இங்குதான் அவரது பலமான கதை முக்கியத்துவம் பெறுகிறது.
வழக்கம்போல ஒரு தெலுங்கு கிராமத்து பண்ணையார். அவர்தான் வில்லன். என்ன பிரச்சினையோ தெரியவில்லை, அவரது தம்பிக்கும், தங்கையின் கணவருக்கும் வெட்டுகுத்து பகை. இருவரும் வெட்டிக்கொண்டு இறந்துபோகிறார்கள். தம்பியை கொன்றவன் இறந்து போய்விட்டாலும், மிச்சமிருக்கும் தங்கையையும், தங்கை குழந்தையையும் கொன்றே தீருவேன் என்று கொந்தளிக்கிறார் பண்ணையார். தங்கையோ, குழந்தையோடு சென்னைக்குத் தப்பிவிடுகிறார். அந்தக் குழந்தைதான் ஹீரோ! என்னடா இது இவன் கதை சொல்லி ஸ்பாய்ல் செய்கிறானே என்றெல்லாம் நினைக்கவேண்டாம். இந்தக் கதையெல்லாம் டைட்டில் போடுவதற்கு முன்னமே சொல்லிவிடுகிறார்கள்.
அப்புறம்?
25 வருடங்களுக்குப் பின்னரும், அந்தப் பண்ணையாருக்கும், அவர்தம் இரண்டு கிங்கரர்கள் போலிருக்கும் பிள்ளைகளுக்கும் முகம் தெரியாத ஹீரோ மீது இன்னும் கொலை வெறி! இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு விநோத வழக்கம் இருக்கிறது. இவர்கள் தாம் வாழும் இல்லத்தை ஒரு கோயிலைப்போல மதிக்கிறார்கள். தம்மை லைட்டாக கிண்டல் பண்ணினால் கூட வெட்டி வீசத் தயங்காத இவர்கள் அந்தத் தவறை தம் வீட்டுக்குள் வைத்து மட்டும் செய்வதில்லை.
இப்போது புரிந்திருக்கும் ராஜமௌலியின் கதை சொல்லும் அழகு! சந்தானம் மீண்டும் கிராமத்துக்கு ஏன் வருகிறார்? எதற்கு அந்த வீட்டுக்குள் செல்கிறார்? இவர்தான் அவர்கள் தேடிக்கொண்டிருந்த நபர் என்பதை அவர்கள் அப்படி உணர்ந்தார்கள்? சற்று நேரத்திலேயே, இந்த வீட்டின் வாயில்படியைத் தாண்டினால் வெட்டி வீழ்த்தப்படுவோம் என்பதை சந்தானம் எப்படி உணர்ந்தார்? அரிவாட்களோடு வாயிலில் ஆட்கள், நடுக்கத்தோடு வீட்டுக்குள் சந்தானம்.. அதன் பிறகு நிகழ்ந்ததென்ன?
விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்குமா என்ன? இப்போ தெரியுதா இந்த சோப்பை நான் ஏன் வாங்கினேன்னு?
Srinath
இந்தப்படத்தை இயக்கியிருப்பது எனக்குப் பிடித்த காமெடியன் ஸ்ரீநாத். அதான் சந்தோஷ் சுப்பிரமணியத்தில் ஜெயம் ரவி நண்பர்களில் ஒருவராக வருவாரே அவர்தான். நன்றாகத்தான் செய்திருக்கிறார். ஆனால், இந்தப் படம் அப்பட்டமான ராஜமௌலி படம். சுவாரசியத்துக்காக நிச்சயம் ஹிட்டாகத்தான் செய்யும். இதுதாண்டா சாக்கு, இனி நானும்தாண்டா ஹீரோனு சந்தானமும் குத்து சாங், டூயட், பல்லி சண்டைனு கிளம்பிடுவாரோனுதான் கொஞ்சம் பயம்மா இருக்கு!
.
14.05.14
https://www.youtube.com/watch?v=47yq9XTbDNY&app=desktop
பஸ்டர் கீட்டன் எனும் சார்லி சாப்ளினின் சம காலத்தைய ஜீனியஸின் 'அவர் ஹாஸ்பிடாலிடி'(1923) எனும் படத்தின் அப்பட்டமான தழுவலே மேற்சொன்ன படம் என்பது நண்பர்கள் மூலமாக தெரியவருகிறது. பாராட்டுகள் ராஜமௌலியைச் சேரவேண்டியவை அல்ல!
.