Quantcast
Channel: புலம்பல்கள்!
Viewing all articles
Browse latest Browse all 108

விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ‘ஒளி எனும் மொழி’

$
0
0

இந்த வலைப்பூவில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவருவதன் பின்விளைவுகளில் ஒன்றுதான் அவ்வப்போது கிடைக்கும் சினிமா/ எழுத்து சார்ந்து இயங்கும் நண்பர்களின் நட்பு. இது உண்மையில் மகிழ்வுக்குரிய செய்திதானா அல்லது, சம்பந்தப்பட்ட எனக்கும், அந்த நபருக்குமான சோதனையான செய்தியா என்பதை உணரும் பக்குவம் இன்னும் வாய்க்காததால்தான் இப்படி பொதுவாகப் பின்விளைவுகள் என்று குறிப்பிட்டிருக்கிறேன். எனக்கு மட்டுமல்லாது இது இன்னும் பலருக்கும் நிகழக்கூடிய நிகழ்வுதான்.

எழுத்துக்களில் முதிர்ச்சியும், நற்சிந்தனையுமாய் இருக்கும் எழுத்தாளர்களைக் கண்டு வியந்திருப்போம் நாம். அதிற்பலவும் நம் சிந்தனையையேச் சமைக்கும்/ மாற்றும் சக்தி வாய்ந்தவையாகவும் இருந்திருக்கும். அத்தகைய எழுத்துக்களுக்குச் சொந்தமானவர்கள் நிச்சயம் பெருந்தன்மையும், அன்பும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூட நாம் எண்ணலாம். ஆனால் முதலில் சொன்ன குணநலன்களுக்கும், இரண்டாவது சொல்லப்பட்ட குணநலன்களுக்கும் பெரும்பாலும் சம்பந்தம் இருப்பதில்லை. அது சரி, ஒரு எழுத்தாளனிடம் அன்பை எதிர்பார்ப்பது ஒரு வாசகனின் முதிர்ச்சிக்குறைவுதான் இல்லையா? ஆனால் இன்னொரு சிக்கலும் இருக்கத்தான் செய்கிறது. முதிர்ச்சி, வளர்ச்சி என்பது ஒரு தொடர் ஓட்டம் போன்றதாகும். ஒரு எழுத்தாளன் நம்மில் உண்டுசெய்த ஒரு சிந்தனை, நம் அனுபவங்கள் மற்றும் நமது சிந்தனையோட்டத்தில் அதன் அடுத்த பரிமாணத்தைத் தொட்டிருக்கும். அதை அந்த எழுத்தாளனுடனேயே வாதிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா என்பது அந்தந்த எழுத்தாளனின் முதிர்ச்சியையும், எதையும் தாங்கும் நமது இதயத்தையும் பொறுத்தது.

சரி அதை விடுங்க, உங்க அனுபவம் எப்படினு கேட்கிறீங்களா? அதானே! ம்ஹூம்! மூச்!! நோ கமெண்ட்ஸ்!

இப்படியெல்லாம் சொல்ல அவசியப்பட்டிராத ஓரிருவரில் ஒருவர்தான் விஜய் ஆம்ஸ்ட்ராங். உண்மையில் அவருடைய ஒளிப்பதிவைப் பார்த்து மயங்கி, கிடைத்தால் இவர் நட்புதான் வேண்டும் என்று விரும்பியெல்லாம் நட்புக் கொள்ளவில்லை நான். அவருக்கு என் எழுத்தில் எதுவோ பிடித்திருக்க, எனக்கு அவர் எழுத்தில் எதுவோ பிடித்திருக்க இருவரும் ஒரு நாள் சந்தித்தித்துக்கொண்டோம். முதல் சந்திப்பே அப்படியொன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரி எல்லாம் இல்லை. அது தொடர்ந்திருக்கவெல்லாம் வாய்ப்பு மிகக்குறைவாகத்தான் இருந்தது. ஆயினும் தொடர்ந்தது. அதன் பின்புதான் ’நீர் நிலைக்குத்தான்..’ என்பது போல ஒருவரையொருவர் உணர்ந்துகொண்டோம். இருவருக்குமான இடமும், நட்பும், தேவையும் எங்கள் இருவரிடமும் இருந்தது.

அலைபாயும் மனிதர்களின் அவஸ்தைகள், அடிப்படை நேர்மை கொண்ட மனிதர்களின் அவஸ்தைகள், கற்றலில் ஒரு நிறைவில்லா மனிதர்களின் அவஸ்தைகள் என எங்கள் ஒவ்வொரு சந்திப்பிலும் பேசுவதற்கான பாடுபொருட்கள் நிறைய இருந்தன, இன்னும் இருக்கின்றன.
வெற்றி என்பதை இரண்டாம் பட்சமாக எண்ணுகின்ற, ஆனால், ஒரு அங்கீகாரத்துக்காக போராடும் கலைஞனாக விஜய் ஆம்ஸ்ட்ராங்கை எனக்கு நன்றாகவே தெரியும். சுய முன்னிறுத்தல் குறித்த விவாதம் அடிக்கடி எங்களுக்குள் வரும். சுய முன்னிறுத்தலும், சுய மரியாதையும் எதிரெதிரான சங்கதிகள். இன்றைய போட்டி நிறைந்த உலகில் சுய முன்னிறுத்தலின் அவசியத்தை இருவரும் விவாதித்துக்கொண்டாலும், இறுதியில் கடையோரத்தில் புன்னகையுடன் விவாதத்தை முடித்துக்கொள்வோம். அங்கே எங்கள் சுய மரியாதைதான் ஜெயித்திருக்கும். ஆயினும் பல்வேறு வகைகளிலும் புத்தகமாக்கும் அவசியமும், தகுதியும் கொண்ட ஒரு கட்டுரைத் தொகுப்பை புத்தகமாக்கும் முயற்சியைக் கூட சுய முன்னிறுத்தலாகக் கருதினால் என்னதான் செய்வது? அதைச்செய்ய ஒரு ஆதிமூலகிருஷ்ணனும், தமிழ் ஸ்டுடியோ அருணும்தான் வரவேண்டியிருக்கிறது.


கடந்த சில ஆண்டுகளில் சினிமா மற்றும் ஒளிப்பதிவு சார்ந்து விஜய் ஆம்ஸ்ட்ராங் அவரது வலைப்பூவில் (http://blog.vijayarmstrong.com/2015/01/blog-post.html) எழுதிய கட்டுரைகள் ஒரு கோர்வையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தேவைப்படும் பகுதிகள் புதிதாக எழுதி இணைக்கப்பட்டு ஒரு முழுமையான புத்தகமாக உருப்பெற்றுள்ளன. அவரது திரைமொழி முழுமை பெற்றிருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. அதில் இன்னும் பல கலைஞர்களின் ஒத்துழைப்பு அவசியப்படுகிறது. ஆனால் அவருக்கென ஒரு எழுத்து வசப்பட்டிருக்கிறது என்பதை துவக்கத்திலிருந்தே கவனித்துவரும் வாசகனாக நானறிவேன். என்னைப் போலல்லாது நல்ல தமிழில் எழுத விருப்பம் கொண்டவர். வாசிப்பதிலும், தொடர்ந்து கற்பதிலும் ஆர்வம் கொண்டவர். இந்தப் புத்தகம் முழுக்க சினிமா சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்த விரிவான அறிமுகம் எனினும் அவரது பிற சினிமா கட்டுரைகளுக்கும் நான் ரசிகனாவேன். சினிமா மட்டுமல்லாது அனைத்திலும் ஒரு பொறுப்புள்ள அணுகுமுறை கொண்டவர். எங்களை இணைக்கும் கயிறுகளில் பிரதானமானது நகைச்சுவை உணர்வு. அவரது சூழல் சார்ந்து நிகழும் நிகழ்வுகள், மனிதர்களைப் பற்றி அவர் பகிர்ந்துகொள்ளும் செய்திகளில் மிகுந்த நகைச்சுவையும், அடிச்சரடாக தொழில்சார்ந்த ஒரு அக்கறையும் இருக்கும்.

தமிழ் ஸ்டுடியோ, நல்ல சினிமாவுக்காக தன்முனைப்போடு இயங்கிவரும் ஒரு இயக்கமாகும். அப்படி ஒரு இயக்கத்தின் ‘பேசாமொழி’ பதிப்பகத்திலிருந்து வருவதிலிருந்தும், காட்சிமொழி வசப்பெற்ற கலைஞரான மிஷ்கின் அணிந்துரை தந்திருப்பதிலிருந்துமே ‘ஒளி எனும் மொழி’யின் முக்கியத்துவத்தையும், தரத்தையும் நாம் அறியமுடியும்.
’ஒளி எனும் மொழி’, முதலில் ஒரு தொழில்நுட்பமாக ஒளிப்பதிவை அணுகுமாறுதான் வடிவமைக்கப்பட்டது. அதன் பின்பு முன்னதாக ஒளிப்பதிவுக்கருவிகள், இன்றைய டிஜிடல் சினிமா, அதற்கும் முன்னதாக சினிமா எனும் ஒரு பிராஜக்டின் பல்வேறு நிலைகள், செயல்பாடுகள் இவற்றைப் பற்றியெல்லாம் ஒரு விரிவான அறிமுகம் தேவைப்படுவதை உணர்ந்தோம். அதன் பின்னர் புத்தகம் இப்போதைய இந்த வடிவத்தைப் பெற்றது. ஆக, ஒளிப்பதிவுத் தொழில்நுட்பம் இப்புத்தகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது எனினும் அது இன்னும் விரிவாக எழுதப்படவேண்டிய ஒன்றாக உணர்ந்தோம். குறிப்பாக 5C’s எனும் பகுதி ஒரு சிற்றறிமுகமாக மட்டுமே உள்ளது. இந்தப் புத்தகத்திற்கான வரவேற்பே இதன் தொடர்ச்சிகளுக்கு வழிவகுக்கும்.

இந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரை, முதல் வாசகன் எனும் பொறுப்பையும், மீச்சிறு பங்களிப்புகளையும் செய்திருக்கிறேன். ஆக, இக்கட்டுரை புத்தகம் குறித்த ஒரு அறிமுகம்தானே தவிர விமர்சனமல்ல. அது உங்களிடமிருந்து வரவேண்டியது. அதற்காக மிக ஆவலுடன் காத்திருப்பேன். இந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழ்க்காணும் அரங்குகளில் ’ஒளி எனும் மொழி’ கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. தவிர, எப்போதும் டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும்.

460: பரிசல்புத்தகநிலையம்
588: டிஸ்கவரிபுக்பேலஸ்
577: பனுவல்விற்பனைநிலையும்
583: வம்சிபுக்ஸ்
519 A: பூவுலகின்நண்பர்கள்
*
ஒளி எனும் மொழி
விஜய் ஆம்ஸ்ட்ராங்
288 பக்கங்கள்
250 ரூபாய்
பேசாமொழி பதிப்பகம்

.

Viewing all articles
Browse latest Browse all 108

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!