Quantcast
Channel: புலம்பல்கள்!
Viewing all 108 articles
Browse latest View live

கலைஞர் 90 - தொடரும் சில கேள்விகள்

$
0
0

முந்தைய‘கலைஞர் 90’ பதிவைப் படித்த நண்பர்களில் இரண்டு பேரிடமிருந்து அழைப்புகள். எங்கோ துவங்கி, பேச்சு வேறெங்கோ சென்றாலும் அவர்களின் அழைப்பின் நோக்கம் ஒன்றுதான். ’உங்களைப் போன்ற பொதுவான நண்பர்கள் ஏன் இது போன்ற சாயங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்? தவிர்த்திருக்கலாமே.. அதோடு கலைஞர் இப்படியான புகழுக்குத் தகுந்த நபர்தானா?’ -என்பதுதான் அது.

எனது ரசனையின் தளம் விரிவானது என நம்பிக்கொண்டிருக்கிறேன். நான் பல்வேறு விஷயங்களையும் துய்க்க விரும்புகிறேன், பகிர விரும்புகிறேன். ஆகவே, எனக்கு இது போன்ற குழு அடையாளங்களுக்குள் சிக்கிக்கொள்வதில் எப்போதும் விருப்பமிருந்ததில்லை. அதனால்தான் அரசியல் கட்சி சார்ந்து விரிவான எனது கருத்துகளை, ஏற்புகளை, மறுப்புகளை நான் பொதுவில் பேசியதில்லை. பேச விரும்புவதுமில்லை, அது என் தனிப்பட்ட விஷயம். ஆயினும் அதற்காக என்னால் முற்றிலுமான ஒரு முகமூடியை அணிந்துகொள்ள முடியாது. இந்த எண்ணம்தான், ஆங்காங்கே பெரியார் மீதான, கலைஞர் மீதான எனது எண்ணங்கள் இயல்பாக வெளியாவதை வலுவில் தடுக்காமல் செய்கிறது.

‘ட்டாக்டர் க்கலைஞர்.. வாழ்க!’ என தொண்டை வறளக் கத்தப்படும் கோஷ ஒலியாக என் குரல் இருப்பதை எப்போதும் நான் விரும்பியதில்லை. அந்தக் கட்டுரை கலைஞர் எனும் தனிப்பட்ட மனிதர் மீதான, அவரது தமிழ் எனக்குள் ஏற்படுத்திய ஆர்வத்தின் காரணமாக எழுந்த அன்பில் விளைந்த ஒன்றே! அந்தக் கட்டுரையில் கூட சமூக விழிப்புணர்வு, மறுமலர்ச்சி, தமிழியக்கம் போன்ற பாராட்டப்படவேண்டிய விஷயங்களுக்கு தனி மனிதராக அவரை மட்டுமே முழு காரணகர்த்தாவாக்கிவிடாமல், அதற்குக் காரணமான அண்ணன்மார்களில் முக்கியமான ஒருவராகவே அவரைக் குறிப்பிட்டு வாழ்த்தியிருக்கிறேன். அவரை விடவும் கருத்துச்செறிவும், சமூக அக்கறையும், தமிழுணர்வும் மிக்க படைப்புகளை தர இங்கு ஆளேயில்லை என்பது அறிவீனமாகும். ஆயினும், கலைஞர் மீது நான் கொண்டது, பசுமரத்தாணி போல இளமையில் ஏற்பட்ட உணர்வு. அப்போது, அது.. எனக்குக் கிடைத்தது, நாணயம் சுண்டப்பட்டபோது பூ விழுந்தது, அவ்வளவே! இதில் வியக்க ஒன்றுமில்லை. அதனால் எல்லாம் அவரின் அரசியலை எந்த எதிர் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ளும் மடமையை பெரியாரோ, தி.மு.கவோ எனக்குக் கற்பிக்கவில்லை.

தனியொருவர் என்ற முறையில் பார்த்தால், 1950களில் துவங்கி சமீப காலம் வரை, தமிழகம் கலைஞரின் பேச்சுக்கும், எழுத்துக்கும், நாடகம், சினிமா முதலான கலைப்படைப்புகளுக்கும் கட்டுண்டு, மயங்கியிருந்தது. இந்தக் கட்டுண்டிருந்தது, மயங்கிக்கிடந்தது என்பதே ஒரு அலங்காரம் கருதி எழுதப்படும் பிழைதான். அவரின் பேச்சும், எழுத்தும் சமூகத்தின் மொத்த சிந்தனையை பீடித்திருந்த தளையை உடைக்க உதவின என்றுதான் கூறவேண்டும். ஆகவேதான் ஆட்சிக்கட்டிலில் அவரை தமிழகம் அமரவைத்தது என நான் எண்ணுகிறேன். தனி மனிதனாகச் சரி, ஒரு ஆட்சியாளராக கலைஞர் எவ்வாறானவர்? அதைப் பற்றி உன் கருத்தென்ன? சரி, ஒரு நீண்ட விமர்சனத்தைத்தான் வைப்போமே, வேண்டாம் எனினும் தொலைபேசியில் அழைத்தாவது ’அதைப்பேசினால், இதையும்தான் பேசவேண்டும்’ என்று குட்டுகிறார்களே என இதை எழுதத் துவங்குகிறேன். யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களில்லை, கலைஞருக்கு மட்டும் என்ன விதிவிலக்கு?


எதையெதையெல்லாம் எழுதவேண்டும்? எங்கு துவங்கலாம்?

முதல் கேள்வி, கலைஞரின் பேச்சும், எழுத்தும், படைப்புகளும் தமிழ்ச்சமூகத்தின் மொத்த சிந்தனையை பீடித்திருந்த தளைகளை உடைத்தனவா? இல்லையா? அதற்கான பரிசுதான் மக்கள் அவரை ஆட்சி பீடத்தில் அமர்த்தி அழகு பார்த்ததா? இல்லை, பின்பு எம்.ஜி.ஆர் நிகழ்த்தியதைப் போன்ற ஒரு கவர்ச்சி, மாய பிம்பத்தைத்தான் அப்போதைய அவரின் பேச்சும், எழுத்தும் மக்களிடையே அவருக்கு உருவாக்கித்தந்ததா? அந்த விஷயத்திலும் எம்.ஜி.ஆரின் முன்னோடிதான் கலைஞரா? அதற்காகத்தான் எம்.ஜி.ஆரைப் போலவே அவருக்கும் ஆட்சி வாய்ப்பு எனும் மரியாதை வழங்கப்பட்டதா? கலைஞரின் எழுத்தும், பேச்சும் மக்களைக் கவர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் மட்டுமே உருவானதா? அல்லது அதில் சமூக விழிப்புணர்வும், விடுதலையும், வளமான எதிர்காலம் நோக்கிய கனவும் மட்டுமே நோக்கமாக இருந்ததா? அல்லது இரண்டுமேவா? எது சரி? ஆட்சி வாய்ப்பு வழங்கப்பட்டதும் சுயமரியாதை மிக்க, வளமான தமிழ்ச்சமூகம் என்ற கொள்கை அவருக்குப் முக்கியமாக இருந்ததா? இல்லையா? அல்லது முதலில் இருந்து பின்னர் தேய்ந்ததா? இருந்ததாயின், இன மான உணர்வையே நோக்கமென கொண்ட அவரை இலவச தொலைக்காட்சிப்பெட்டிகளை வழங்கச்செய்து, தமிழரின் மானத்தை விலைபேசச் செய்த காரணி எது? இதெல்லாம் இல்லை, அவரது நோக்கம் கடல் கடந்தும் கடாரம் வென்ற பழம் சக்கரவர்த்திகளுக்கு இணையாக, பன்னெடுங்காலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, புகழ் குன்றாமல் வாழ்ந்த செங்கோலன் எனும் பெயர் மட்டுமேதான் எனலாமா? அது சரியா? சரியெனின், வரலாறெங்கும் அவ்வாறான தலைவர்கள் இருந்திருக்க, அந்த எண்ணம் முற்றிலும் தவறானதா? தமிழ்ச்சூழலில் நல்லாட்சி என்பதென்ன? அதை எப்படியெல்லாம் வரையறுக்கலாம்? இந்திய மேலாண்மையின் ஒரு பகுதியான மாநிலத்தின் ஒரு முதல்வர் என்னென்னவெல்லாம் செய்யமுடியும்?

உண்மையான விவசாய மலர்ச்சி, உட்கட்டமைப்புப் பெருக்கம், அறிவியலோடு இயைந்த வளர்ச்சி, தொழில்வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்புப் பெருக்கம், உற்பத்திப்பெருக்கம், கட்டுக்குள்ளிருக்கும் விலைவாசி, மக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அண்டை மாநிலங்களோடு நல்லுறவு, மத்திய அரசோடு நல்லுறவு, நீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய வளங்களைப் பேணுதல் மற்றும் அவற்றை தடையறத்தருதல்.. இவை முதலாக இன்னும் நீளும் ஓர் பட்டியலைத் தயார் செய்யலாமா? இதைக் கலைஞர் அரசு கசடறச் செய்ததா? இல்லையா? அல்லது பின் வந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அரசுகளாவது செய்தனவா?

முதல் கேள்வியில் தளைகள் எனப்பட்ட சாதி முன்னிறுத்தும் ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மலிந்த மூடநம்பிக்கைகள், முதலாளித்துவம், கல்வியின்மை போன்ற காலத்தால் முந்தைய முக்கியப் பிரச்சினைகளுக்காக போராடியவர்கள் யாவர்? அவர்களுள் கலைஞரின் பங்கு யாது? அவரைப் பாராட்டுகையில் அதை எந்த அளவில் கருத்தில் கொள்ளவேண்டும்? அப்படியான விஷயங்களைக் காலத்தால் முந்தைய அவலங்கள் என நான் குறிப்பிடுவதைப் பார்த்து, ‘அடேடே.. அப்படி இல்லை தம்பி!’ என என்னை நோக்கிச் சிரிப்பவர்கள் யாரார்? நன்மை செய்யாவிட்டாலும் தவறில்லை, அமைதியாகவேனும் இருக்கலாமே என்று கூட இல்லாமல் அவ்வாறான சாத்தானின் குட்டிகளை மரணிக்கவிடாமல் பேணிப் பாதுகாத்து, அவற்றுக்கு அவர்கள் மட்டுமின்றி, நம்மையும் நாளை துடிக்கத் துடிக்க உணவாகத் தரக் காத்திருப்போர் யாரார்?

தவிர, இலவசங்கள், மது விற்பனையெனும் ஆட்சியின் ஆதாரம், மலிந்து பெருகிய ஊழல் போன்ற அருவருப்பான விஷயங்கள் தமிழகத்தில் எப்போது துவங்கின? எப்போது பெருகின? அதில் கலைஞருக்கு பங்கு இருக்கிறதா? இல்லையா?

கலைஞர் அவர்தம் குடும்பத்தினருக்கு ஏற்படுத்தித்தந்த அரசியல் வாய்ப்புகள் தவறானதா? எது வரையில்?

அவருக்கிருந்த வாய்ப்புகளிலிருந்து கலைஞர் இது வரை தந்த ஆட்சியிலிருந்து, முற்றிலும் வேறான நல்லாட்சியை வழங்கியிருக்க முடியுமா? அல்லது, அதே வாய்ப்புகளால் முற்றிலும் மோசமான ஆட்சியைக் கூட வழங்கியிருக்கக் கூடுமோ? போராடித்தான் அதைத் தவிர்த்தாரா? அல்லது, அவருக்கிருந்த கவர்ச்சிகரமான போட்டிகளை சமாளிப்பதிலேயே கணிசமான காலத்தை இழந்தாரா?

தமிழகம் இங்கே இத்தனை விஷயங்களுக்காகக் காத்திருக்க, அதனூடே நம் தலைவர்கள், ஈழத்துக்கு எதிரான இந்தியத்திருநாட்டின் பகுதியினராய் இருந்துகொண்டு, அருகிருந்தும் அந்நியமாகிப்போன நம் ஈழத்துக்காக என்னென்னவெல்லாம் செய்திருக்க முடியும்? யாரெல்லாம் என்னென்ன செய்தனர்? கலைஞர் செய்தது என்ன? அது போதுமானதா?

காமராசரைப்போல ஒரு சுயநலமில்லா முதல்வர் இனி சாத்தியமா? கலைஞரின் ஆளுமையோடு, அவ்வாறான சுயநலமின்மையும் இருந்திருந்தால் தமிழகம் இன்று சுபிட்ச பூமியாக இருந்திருக்குமா? அல்லது அதற்காக கலைஞரையும் நாம் காணாமல் போகச்செய்திருப்போமா? சமூக நன்மைக்காக அப்படிக் காணாமல் போனாலும் துன்பமில்லை என்பதுதானே தர்மம்? அந்த தர்மம் இன்று சாத்தியமான ஒன்றா? அல்லது எத்தனை தூரம் அதற்கு அருகில் ஒரு நிஜ முதல்வர் செல்ல இயலும்? ஒருவேளை கலைஞர் இருந்திருக்காவிட்டால், அந்த இடத்திற்கு, அப்படியான ஒரு தேவதூதனைக் நாம் கண்டடைந்திருப்போமா?

விமர்சனம் எழுத அமர்ந்தால் என்ன இது, இத்தனைக் கேள்விகள் எழுகின்றன? பலவற்றுக்கு பதில் தெரியவில்லை, சிலவற்றுக்காவது எனது எண்ணங்களைப் பதிலாக எழுத முடியுமாயினும் அது முழுமையாக இராது என இப்போது தோன்றுகிறது. அத்தகைய ஒரு நீண்ட கட்டுரையை தகுந்த தரவுகளோடு எழுத எனது வாசிப்பனுபவத்தால் நிச்சயம் இயலாது. பெரிய வாசிப்பு மட்டுமின்றி, அரை நூற்றாண்டுக்கும் மேலான தமிழகத்தை அருகிருந்து அக்கறையுடன் பார்த்த அனுபவம், பொறுப்புணர்வு, சமூக நோக்கு, நல்லெண்ணம், ஆய்வறிவு, வரலாற்றறிவு, உளவியல் ஞானம், மொழியுணர்வு போன்ற பல்வேறு குணங்களும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு அறிஞர்தான் இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் பதிலான கலைஞர் மீதான விமர்சனத்தை சரியான முறையில் வைக்கமுடியும் என நினைக்கிறேன்!

நிச்சயம் கலைஞர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரில்லைதான், ஏற்கனவே சொன்னது போல.. ஆனால் அதைச்செய்ய நான் சரியானவனில்லை என்பதுதான் என்னுள் தோன்றிய இத்தனைக் கேள்விகள் சொல்கின்றன!
எந்த ஒரு சாமானியனுக்குமே அவனளவில் யார் மீதும், எதன் மீதும் விமர்சனம் என்ற ஒன்றுண்டு. அதைப் பகிராமல், ஒரு வியப்பை ஏற்படுத்தித் தப்பித்துக்கொள்ளும் மனோபாவம் இக்கட்டுரையின் நோக்கமில்லை. நிஜமாகவே ஏதோ ஒரு போதாமை எனைத் தடுக்கிறது என அந்த தொலைபேசி நண்பர்களும், அதே போன்ற ஒத்த சிந்தனை கொண்டவர்களும் நம்பினால் போதும்.

நன்றி.
.

மரியான் - விமர்சனம்

$
0
0
கடலை நேசிக்கும், கடலிலேயே வாழும் ஒரு கடற்புறத்து இளைஞன். அவனக்கொரு அழகிய காதலி. அவளது கடனுக்காக, கடலைப் பிரிய மனமில்லாது இரண்டாண்டுகள் தூரதேசம் போகவேண்டிய சூழல். அந்த தேசத்தில் உள்நாட்டு தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு, காதலியை அடைய அவன் மேற்கொள்ளும் போராட்டம். இறுதியில் அவளை அடைகிறான்.

இந்தக் கதை, படிக்கிறப்போ எவ்வளவு அழகா இருக்குல்ல.. ஆனால் கதறக்கதற மொக்கை போட்டு அனுப்புகிறார் இயக்குனர் பரத்பாலா. பரத்பாலாவின் துவக்க கால விடியோ ஆல்பங்களை எல்லாம் பார்த்துவிட்டு, இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் ஏன் சினிமாவுக்கு வருவதில்லை என எண்ணியது இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

இது மரியானுக்கும், பனிக்கும் இடையிலான காதல் கதையா? சூடான் தேசத்தின் உள்நாட்டு போராட்டத்தின் கதையா? என்பதிலேயே இயக்குனருக்கு தெளிவில்லை போலிருக்கிறது. இது காதல் கதைதான். ஆனால் இடைவேளை வரை நீளும் காதல் காட்சிகளில் அழுத்தமான காதல் இல்லை. இது சூடான் தீவிரவாதக் கதை இல்லைதான். ஆனால் இரண்டாம் பகுதி முழுக்க டுப்டுப் என துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இலக்கில்லாமல் ஜீப்பில் அலையும் தீவிரவாதிகள்தான்.



ஹீரோயிஸம் இல்லாத இலக்கியக்கதை போலிருக்கு, அதான் உதை வாங்கிக்கொண்டு அடைந்தே கிடக்கிறார் மரியான் என்றால், அதுவும் இல்லை, கிளைமாக்ஸ் வரும் வரை சும்மா இருந்துவிட்டு பின்பு, ஒண்டிக்கு ஒண்டி சண்டை போட்டுதான் தப்பிவருகிறார். அதெப்படி தீவிரவாதிகளுடன் ஒண்டிக்கு ஒண்டி? அதெல்லாம் நீட்டி முழக்கிச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது, அது அப்படித்தான்!

சிறுத்தைகள் கற்பனை, மீன் குழம்பு கற்பனை, தீவிரவாதிகள் கட்டாயப்படுத்தி மரியானை ஆடிப்பாட வைக்கும் பாடல் (?! நீங்கள் திருதிருவென முழிப்பது தெரிகிறது) என உணர்வுப்பிரவாகமாக இருக்கும் என இயக்குனர் நினைத்த காட்சிகளெல்லாம் படத்தில் காமெடிக் காட்சிகள் இல்லாத குறையைத் தீர்ப்பதாக அமைந்தது பரிதாபம்.

பாடல்களெல்லாம் பொருத்தமில்லாத இடங்களில் வந்து மிக செயற்கையான ஒரு உணர்வைத் தருகின்றன. நிகழ்வுகள் இம்பாக்ட் செய்யாத போது பின்னணி இசையும் பொருந்தாமல் நெளியச்செய்கிறது. தனுஷ், பார்வதியின் நடிப்பு, பரத்பாலா என்றால் விஷுவல்ஸ் என்ற எதிர்பார்ப்பை வீணடிக்காத அற்புதமாக விஷுவல்ஸ் மற்றும் அதன் ஒளிப்பதிவு என எல்லாமே விழலுக்கிறைத்த நன்னீராய்ப் போகின்றன.

குறிப்பாக பார்வதியின் அழகும், நடிப்பும் தனிப்பட்ட முறையில் என்னை அசத்திய விஷயங்கள். அவ்வளவு எக்ஸ்ப்ரஸிவான முகம், உணர்வுகளைக் கடத்தும் கண்கள் என அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போன்ற உணர்வு. (இதுக்குப் பேர்தான் ஜொள்ளா?) அதுவும் அழுத்தமில்லாக் காட்சிகளில் பொருந்தாமல் வீணாய்ப்போவது சோகம்!

மரியானை, சமீபத்திய பெரிய ஏமாற்றம் என்றுதான் சொல்லவேண்டும்!

லிம்போ

$
0
0

ரொம்பவே நாட்களாகின்றன, ஒரு விறுவிறுப்பான கம்ப்யூட்டர் கேமை விளையாடி.! தற்போதைய வேலை, குடும்பச் சூழலுக்கு கம்ப்யூட்டர் கேமை நிறையவே மிஸ் செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆயினும் அவ்வப்போது அவற்றை நலம் விசாரித்துக்கொள்வதுண்டு. 

ஒரு கேம் பிடித்துப்போவதும், பிடிக்காமல் போவதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ரசனை சார்ந்த விஷயம். டாப் செல்லராக, மிக பாப்புலராக இருக்கும் பல கேம்கள் எனக்குப் பிடிப்பதில்லை. கணினி வரைகலையின் வீச்சு, கதையம்சம், நிகழ்வுகள், கண்ட்ரோல்களின் பயன்பாடு என ஏராளமான அம்சங்கள் அதன் காரணமாக அமைகின்றன. எனது தேர்வு எப்போதும் கால் ஆஃப் ட்யூட்டி (Call of Duty), டோம்ப் ரைடர் (Tomb Raider), மெடல் ஆஃப் ஹானர் (Medal of Honor) போன்ற ஹை-எண்ட் கம்ப்யூட்டர் கேம்களாகவே இருக்கும். இவையே பிற அமசங்களை விட, அதிகபட்ச கிராஃபிகல் நுணுக்கங்களை துய்க்க விரும்பும் என்னைப்போன்ற ரசிகர்களின் பெரும்பாலான தேர்வாக அமைகின்றன. இந்த அனுபவத்தை எளிய வகை கேம்களான ப்ளாட்பார்ம் கேம்கள் தருவது சிரமமான விஷயம், அதை அங்கே எதிர்பார்ப்பதுமே கூட தவறான ஒன்றே! 

ஆனால், மிராக்கிள்ஸும் எப்போதாவது நிகழத்தானே செய்கின்றன..

180 MB அளவே உள்ள ஒரு சிறிய ப்ளாட்ஃபார்ம் வகை கேம் உங்களை வியக்கச்செய்ய முடியுமா? ஆக்‌ஷன், அட்வென்சர், ஸ்டன்னிங் கிராஃபிக்ஸ், எளிமை, நுணுக்கமான ஸ்ட்ராடஜியை, சிந்தனையைக் கோரும் சவால்கள், மிக எளிமையான கண்ட்ரோல்கள், ஒரு அழகான கதையம்சம், அதற்கொரு க்யூட்டான முடிவு என, நீண்டகால பசிக்கு ஒரு பெரிய விருந்தாகவே அந்த கேம் அமைந்தது எனக்கு.

அது லிம்போ (Limbo).



பொதுவாக சிறிய வகை/போர்ட்/ப்ளாட்ஃபார்ம் வகை கேம்கள் குழந்தைகள் விளையாடத்தகுந்தவை என்ற என் எண்ணத்தையும் இது சிதறடித்தது. வெளியாகி இரண்டாண்டுகளுக்கு மேலாகியும், சமீபத்தில்தான் இதைக் கண்டெடுத்தேன். இவ்வளவுக்கும் இது ஒன்றும் இந்தத்துறை சார்ந்த லெஜண்ட் கம்பெனிகளுள் ஒன்றின் தயாரிப்பு அல்ல, டென்மார்க்கைச் சேர்ந்த புதிய குழுவின் (Independent Game Developers) தயாரிப்பு என்பது இன்னுமொரு ஆச்சரியம். இதன் வடிவமைப்பும், கேம் நிகழ்வுகளும், அந்த க்யூட் முடிவும் ஒன்றும் கேம் உலகுக்கு முற்றிலும் புதிதானவை அல்லதான். ஆயினும் அந்த பழகிய விஷயங்களுக்கு இவர்கள் தந்திருக்கும் முற்றிலும் புதிய பரிமாணம் நிச்சயம் ஒரு புதிய அனுபவம்தான். அதில்தான் லிம்போ டெவலப்பர்களின் புத்திசாலித்தனமும், தனித்துவமும் அடங்கியிருக்கிறது. ஆக, லிம்போ ரசிகர்களின் ஏகபோக வரவேற்பையும், கேம்களுக்கான ஏராளமான பரிசுகளையும், விருதுகளையும் அள்ளிக்கொண்டதில் எந்த வியப்பும் இல்லை.

ஹை-எண்ட் கேம்கள் விளையாட அவசியமான, காஸ்ட்லியான, மேம்படுத்தப்பட்ட கணினி உட்கட்டமைப்புகள் இதற்குத் தேவையில்லை என்பதால் எளிய கம்யூட்டர்களிலும் கூட விளையாட முடியும் என்பது சிறப்பு. வழக்கம்போல Xbox, PS வெர்ஷன்களும் இருக்குன்றன. ஆனால், இது குழந்தைகளுக்கானது அல்ல, கொஞ்சம் ஹாரர் எஃபெக்டும் நிகழ்வுகளில் இருக்கிறது.

கேம்களில் ஆர்வமும், அதே நேரம் சில பல காரணங்களால் தயக்கமும்,சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் துவங்க வேண்டியது இங்கேதான், லிம்போவில் உங்களோடு பயணிக்கக் காத்திருக்கிறான் குட்டிப்பயல்!

----------

எக்ஸ்ட்ரா:

பெரியவர்களுக்காக மட்டுமின்றி என்னைப்போன்ற குட்டிப்பசங்கள் ரசிக்கிற மாதிரி வேற குட்டி கேம்ஸ் எதுவும் இருக்கிறதா என்று கேட்டால், சமீபத்தில் கொஞ்ச நாட்கள் என்னை அடிக்ட் செய்த இன்னொன்றை சஜஸ்ட் செய்கிறேன். ரொம்பவே பிளானிங் தேவைப்படுகிற கலர்ஃபுல் அட்வென்சர் இது, குட்டீஸ்க்காக!


கார்டன் ரெஸ்க்யூ (Garden Rescue2 CE)

*

ஆதலால் காதல் செய்வீர் – விமர்சனம்

$
0
0

நன்றாக ஞாபகமிருக்கிறது, ’நாத்திகம் காத்தல்’என்ற ஒரு கட்டுரை இந்தத் தளத்திலேயே மிக அதிக பார்வைகளைப் பெற்ற ஒன்றாகும். மிக அதிக விமர்சனங்களையும், பின்னூட்ட விவாதங்களைப் பெற்றதும் கூட அதுவே. அந்த இடுகைக்குப்பின் என் மனதைப் பாதித்த இன்னொரு பொருள் குறித்து ‘கன்னிமை காத்தல்’ என்ற தலைப்பில் நீண்டதொரு பத்தியை எழுதி, திருப்தியின்றி, நீண்ட நாட்கள் ட்ராஃப்டிலேயே வைத்திருந்து பின்பொரு நாள் அழித்திடவும் செய்தேன்.

சுசீந்திரனின் ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற இந்தப் படத்தைப் பார்த்தபோது அந்த அழிக்கப்பட்ட கட்டுரைதான் ஞாபகம் வந்தது. அஃதொன்றும் பிரமாதமாக எழுதப்பட்ட கட்டுரை இல்லையாயினும், இந்தப் படம் அந்தப்பொருளைப் பற்றி ஆணித்தரமாக பேசும் ஒரு பிரமாதமான படமாக அமைந்துவிட்டது.


ஆண், பெண் பழக்கங்கள், பாலின ஈர்ப்பை காதலாகக் கொள்ளும் அவசரம், நற்காதலேயாயினும் கூட காமத்துக்கான காத்திருப்பின்மை, அதிலும் கூட பொறுப்பின்மை, அதனால் தொடரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதம் என இன்றைய இளைஞர்களின் போக்கைப் பார்க்க நேர்கையில், நட்பு வட்டாரங்களில் நிறைய கதைகளைக் கேட்க நேர்கையில், சமீப வருடங்களில் ஒரு பெரிய கலாச்சார மாற்றமே நிகழ்ந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. ’கிழ போல்டு’ என என்னை நீங்கள் கருதினாலும் பரவாயில்லை, இந்தக் கலாச்சாரத்தின் மீது கொஞ்சம் வருத்தமும், அதிர்ச்சியும் கூட இருக்கிறது எனக்கு.

முன்னெப்போதையும் விட (முன்பு வெளியே தெரியாதிருந்தது, இப்போதைய அவசர உலகில் விஷயம் வெளியே தெரிகிறது, எப்போதும் இதன் விகிதம் ஒன்றுதான் என்ற மாற்றுக்கருத்தும் உலவுகிறது. நான் அதை ஏற்கவில்லை) இப்போது உடலுறவு என்பது மிக எளிதில் நிகழ்ந்துவிடுகிறது. கல்யாணம் வரை காத்திருக்கும் பொறுமையும் கூட காதலர்களுக்குள் இல்லை. அது கட்டுப் பெட்டித்தனமாகவும் கூட பார்க்கப்படுகிறது. திருமணத்துக்கு வெளியேயான, திருமணத்துக்கு முன்னதான உடலுறவுகள், தோழமைக்குள்ளே நிகழும் உடலுறவுகள் என மிக அதிகம் கேள்விப்பட நேர்கிறது.

செக்‌ஷுவல் சுதந்திரம் என்பது என்ன? எது வரையில் அது இருக்கலாம்? அது எல்லை மீறும் போது இச்சமூகத்தில் நிகழப்போவதென்ன? என்றெல்லாம் ஆய்வுக்குள் செல்ல நான் விரும்பவில்லை, அதற்கான மேதைமையும் எனக்கில்லை. ஆனால், காதலுணர்வைப்போல, காம உணர்வையும் ஒரு அழகியலாக நான் காண்கிறேன். அன்பைப்போல அதைக் கைக்கொள்ளவும் ஒரு அடிப்படை நேர்மையும், ரசனையும் வேண்டும் என எண்ணுகிறேன். மரத்திலேயே கனியும் கனியைப்போன்றது அது! அப்படியான உறவுக்குப் பின்னால் கிடைக்கும் நிறைவு என்பதே ‘நிறைவு’!

சில காலம் முன்பு வரை, இருக்கிறது என நான் உணர்ந்த ‘கன்னிமை காத்தல்’ இன்றைய இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் ‘அவுட் ஆஃப் ஃபேஷன்’ ஆகிவிட்டதா? என நான் எண்ணியதுண்டு.

‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற இந்தப்படமும் இதைச்சார்ந்த ஒரு கதையைத்தான் பேசுகிறது.

நான் மகான் அல்ல’என்றொரு படம். காதல், ஃபேமிலி செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த ஒரு கமர்ஷியல் கதைதான். ஆனால் அதில் கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், இயல்புத்தன்மையும் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு, அப்படியொரு கமர்ஷியல் படத்துக்கு அழகியதொரு கலைத்தன்மை தரப்பட்டிருந்தது. பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் இயல்புக்கு மிக அருகில் இருந்தார்கள். அதைச் செய்தது சுசீந்திரன். அதுவே ஒரு படத்தின் அழகியலை நிர்ணயிக்கிறது என நான் நினைக்கிறேன்.
அதை விடவும் ஒரு பங்கு அதிகச் சிறப்புடன், ’ஆதலால் காதல் செய்வீரின்’ கதாப்பாத்திரங்களைப் புனைந்திருக்கிறார் சுசீந்திரன். இயல்பும், நேர்மையும், சமூகப்பொறுப்பும் கொண்ட ஒரு திரைக்கதை மற்றும் இயக்கம். இன்றைய சூழலில் பேசப்பட வேண்டிய ஒரு பொருள்!

சினிமா ஒரு பொழுதுபோக்கு ஊடகம் என்றே நம்புகிறேன் நான். இங்கே சமூகத்தை மாற்றும், திருத்தும், உட்கார வைத்து ’உழக்கு நிறைய’ அறிவுரை கூறும் வேலைகளுக்கெல்லாம் இடமில்லை என்றும் கருதுகிறேன். ஆனால் நல்ல கதைகள் வாசகனுடன், ரசிகனுடன் பகிர்ந்துகொள்ள எப்போதும் தன்னகத்தே ஒரு செய்தியை, உணர்வை பொதிந்து வைத்திருக்கின்றன. அத்தகைய ’ஸ்டஃப்’ இல்லாத கதைகள் வெற்று ஜிகினாக்களாகவே மதிக்கப்படும், மறக்கப்படும். இந்தப்படமும் அத்தகைய ஒரு உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. உடலுறவைத் துச்சமாகக் கருதுபவர்களின் மனதில் ஒரு விநாடியாவது இந்தப்படம், ஒரு தயக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஒரு கல்லூரியின் மாணவ, மாணவிகள், பாலின ஈர்ப்புகள், எந்நேரமும் அவர்களின் பேச்சுக்குள், நடவடிக்கைகளுக்குள் நிறைந்திருக்கும் காதல், கலகலப்பு. அவர்களுக்குள் ஒரு காதல் ஜோடி, அவர்களின் குடும்பங்கள் எனத்துவங்கும் கதை, அவர்களுக்குள் நிகழும் எல்லை மீறல், அதன் பின் விளைவுகள், கதாப்பாத்திரங்களின் எதிர்வினைகள் என விரிகிறது. நல்ல படமா? போச்சுடா மெதுவே நகரும் சோகப்படமாக இருக்குமோ.. என்று நினைத்துவிடாதீர்கள்.. இந்தக் கதை சுவாரசியம் குன்றாமலும், இறுதி வரை விறுவிறுப்பாகவும் இந்தக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. இறுதியில் அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று கைத்தட்டி தம் பாராட்டைத் தெரிவித்த நிகழ்வே இதன் சாட்சி!நிதர்சனமான, நெஞ்சைக் கனக்கச்செய்யும் முடிவு பலதரப்பட்ட எண்ணங்களை நமக்குள் ஏற்படுத்தி சலனப்படுத்துகிறது.

சிறந்த திரைக்கதை, இயக்கம். ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை, பாடல்கள், நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு என ஒவ்வொன்றும் நிறைவு. நடிக, நடிகையரின் பங்களிப்பை குறிப்பிட்டுப் பாராட்டத்தோன்றுகிறது, கதாநாயக, நாயகியரின் பெற்றோராக வரும் நான்கு கதாப்பாத்திரங்களையும் ஏற்றிருக்கும் நடிகர்களின் பங்கு அற்புதமானது. இன்னும் விளக்கிக்கொண்டு போனால், அது ஸ்பாயிலராக அமைந்துவிடுமென்பதால் முடித்துக்கொள்கிறேன். கூடுதலாக முடிவுக்குப் பின்னுமொரு முடிவாய் வரும் கடைசிப் பாடலும், அதன் படமாக்கலும் ஏற்படுத்திய இம்பாக்ட் எதிர்பாராத ஒன்று, அதிரச்செய்யும் ஒன்று.

ஆக, ‘ஆதலால் காதல் செய்வீர்’தவறவிடக்கூடாதவொரு படம்.

’ராஜபாட்டை’க்கு நான் எழுதிய காட்டமான விமர்சனத்தில் மாற்றமில்லை எனினும், அந்த ஒரு படத்துக்காக சுசீந்திரனின் திறனையே சந்தேகித்து நான் எழுதியமைக்காக, அன்கண்டிஷனல் வருத்தத்தை இங்கே பதிவு செய்வதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை. ஸாரி சுசி!
.

தங்க மீன்கள் -விமர்சனம்

$
0
0

சரியாகப்படிக்காமல், பணம்சம்பாதிக்கத்துப்பில்லாமல், எதையும்முகத்துக்குநேராகவும், நேர்மையாகவும்பேசக்கூடிய, மெல்லியகுணங்களைமதிக்கும், செம்புக்கலக்காததங்கத்தைப்போலிருக்கும்(இவ்வளவுநீட்டிமுழக்காமல்பிலோஆவரேஜ்னுசிம்பிளாசொன்னாஈஸியாபுரிஞ்சிப்பீங்களே..) கல்யாணிஎனும்ஒருவன். அவனைப்போலவேஇருக்கும்அவனதுசெல்லமகள்செல்லம்மா! இவர்கள்இருவருக்குமிடையேஇருக்கும்பாசப்பிணைப்பைச்சொல்லமுயல்கிறதுஇந்தத்தங்கமீன்கள்’.

படத்தில்வரும்ஒவ்வொருகாரெக்டர்களும்இயல்பைஒட்டிநிற்பதுஅழகு. மகனின்குணத்தைமுழுதும்புரிந்துவைத்துக்கொண்டுஉள்ளுக்குள்பாசமும், வெளியில்கண்டிப்புமாய்பரிதவிக்கும்தந்தை, போலவேஒருதாய், காதல்மனைவி, அவர்களுக்கிடையேயானஅன்பும், மோதலுமானஅழகியஇயல்பானஉறவு. சற்றுநேரமேவந்தாலும்அண்ணன்மீதும், மருமகள்மீதும்பாசம்கொண்டதங்கை, இயல்புமீறாமல்வந்துபோகும்செல்லம்மாவின்சின்னத்தோழிநித்யஸ்ரீ, செல்லம்மாவின்எவிட்டாமிஸ்எனஅத்தனைகாரெக்டர்களும்நிறைவாகசெதுக்கப்பட்டுள்ளன. அதிலும்இரண்டு, மூன்றுகாட்சிகளில்மட்டுமேதலைகாட்டும்எவிட்டாமிஸ்ஸின்நெகிழ்வானபின்னணிக்கதை, திரையில்எங்குமேசொல்லப்படாமல், நாமேகற்பனைசெய்துகொள்ளும்படிசொல்லப்பட்டிருப்பதுக்யூட்! அவ்வப்போதுமனைவிக்கேயுரியவிதங்களில்கோபம்கொண்டாலும், 12ம்வகுப்புபடிக்கும்போதேகாதலன்அழைத்தான்என்பதற்காகஓடிவந்துகல்யாணம்செய்துகொண்டவடிவு, தன்காதல்கணவன்மீதுகொண்டுள்ளதொருகுறைவில்லாக்காதலும்மெனெக்கெட்டுக்காட்சிப்படுத்தாமலேநமக்குச்சொல்லப்படுகிறது. குட்டிப்பெண்நித்யஸ்ரீயின்தற்கொலைசெய்துகொள்ளுமளவுக்கானஒருசோகமும், அதை, அவள்செய்யாமலிருப்பதற்கானகாரணமும்ஒருக்யூட்கவிதை!!



ஆனால், இப்படிஒவ்வொருகதாபாத்திரங்களும், குணநலன்களும்செவ்வனேசெதுக்கப்பட்டிருக்க, படத்தின்ஆதாரபாத்திரங்களானசெல்லம்மா, மற்றும்அவளதுஅப்பாகல்யாணியின்பாத்திரங்கள்? இங்குதான்சறுக்குகிறார்ராம்.

செல்லம்மா, சமயங்களில்புத்திசாலிக்குழந்தையாகவும், சமயங்களில்நெகிழ்வைஉண்டுபண்ணவேண்டும்என்பதற்காகவேமண்டாகவும்இருக்கிறாள். படிப்பின்மை, குழந்தைமீதானபாசம், எல்லாம்ஒருபுறம்இருந்தாலும்குழந்தைக்குஅந்தவயதின்குழந்தைமைகிடைக்கவேண்டும்என்றஉயரியஎண்ணம், படிக்காதவன், சம்பாதிக்காதவன்ஒன்றும்முட்டாளல்லஎன்பதானதெளிவுஎனசமயங்களில்தெளிவாகஇருக்கும்கல்யாணி, குறைந்தபட்சவருமானத்துக்குக்கூடவழியறியாதுநிற்பது, அப்பாவோடுபுரிதலில்லாமல்இருப்பது, பெரும்பணவரவுஇல்லாதநிலையிலும்பிள்ளையைப்பிரிந்துதூரம்செல்வதுஎன்பதெல்லாம்சிம்பதிநோக்கத்துக்கானகாட்சியமைப்புகளாவேஇருக்கின்றன. அதுவும்பழம்பொருள்ஒன்றைத்தேடும்கிளைக்கதையெல்லாம்அவசியமில்லாதஇணைப்பாகவேஇருக்கிறது. அதிலும், அதைப்பற்றிவிசாரிக்கும்பொறுமைகூடஇல்லாமல், லாப்டாப்பைஅவன்தூக்கிக்கொண்டுஓடுவதெல்லாம்அபத்தம். கதையோடு, உணர்வுகளோடுஒன்றவிடாமல்நம்மைத்தள்ளிவிடும்காட்சிகள்இவை.

போலவே, படத்தின்ஆதாரக்கதையும்நிலையாகஇல்லை, அல்லதுஉறுதியாகவடிவமைக்கப்படவில்லை. இருவரின்பிலோஆவரேஜ்அறிவும், அதனால்அவர்கள்சகமனிதர்களிடையேஅடையும்இன்னலும்என்றுபுரிந்துகொள்வதா? தனியார்பள்ளிகளுக்கும், அரசுப்பள்ளிகளுக்குமிடையேயானசாதகபாதகங்களைஅலசுகிறதுஎனக்கொள்வதா? அன்புக்குழந்தையைச்சூழல்காரணமாகப்பிரியும்தகப்பன், குழந்தைஅறியாமையில்கேட்கும்ஒருபரிசினைத்தரமேற்கொள்ளும்போராட்டமெனக்கொள்வதா? என.. நிறையக்கேள்விகள்!

நல்லபடங்கள்மீதுதான்நமக்குவிமர்சனங்களும்அதிகமாகஇருக்கின்றன. ஏனெனில்தப்பானவிஷயங்கள்சரியாசெய்யப்பட்டிருந்தால்என்ன? தப்புத்தப்பாகசெய்யப்பட்டிருந்தால்என்ன? எல்லாம்ஒன்றுதான். நல்லவிஷயங்கள்தப்புத்தப்பாகசெய்யப்படும்போதுதான்சிக்கலே. இதன்பின்விளைவுகளோ, பொருளாதாரத்தோல்விகளோஇதைப்போன்றபின்தொடரும்நல்முயற்சிகளைஎப்போதும்பாதிப்பதாகவேஇருக்கும். எனவேராம்போன்றவர்களுக்கானபொறுப்பு, மற்றவர்களைவிடகொஞ்சம்அதிகமே!

இதெல்லாவற்றையும்தாண்டிபடம், அச்சுப்பிச்சுவில்லன்கள், நச்சுக்குத்துப்பாடல்கள்எனஅபத்தங்களின்மீதுநம்பிக்கையில்லாதஒருஇயக்குநரின்ஆர்வத்தையும், அழகுணர்ச்சியையும்காட்டுகிறது. மெல்லியஉணர்வுகளைப்பேசுகிறது. அழகியபாடல்கள், அருமையானஒளிப்பதிவு, நல்லநடிப்புஎனடெக்னீஷியன்களின், நடிகர்களின்நிறைவானபங்களிப்புகள். அதுவும்லொகேஷன்கள்படத்தின்மிகப்பெரியப்ளஸ்! நிச்சயம்வரவேற்கப்படவேண்டியமுயற்சி.

தவறவிடக்கூடாதஒருபடம், இந்தத்தங்கமீன்கள்’!

.

பழிவாங்கும் பேய்

$
0
0
உங்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்தானே.. கவிதை, கட்டுரை, கதை என்று எழுத்தின் எல்லா வடிவங்களையும் சோதித்துப் (ஆமாம், அவற்றுக்கே சோதனை ஏற்படுத்துவதுதான்) பார்க்கும் பன்முகம் கொண்டவன் என்று!

அதில் மிச்சம் இருந்தது மொழிபெயர்ப்பு, அதையேன் விட்டுவைக்க வேண்டும்? சோதனை பண்ணிவிடுவதுதானே முறை.. ஹிஹி! அதுவும் ஒரு காமிக்ஸுக்கான மொழிபெயர்ப்பு என்பது இன்னும் ஸ்பெஷல். முத்து காமிக்ஸ் தளத்தில் நடத்தப்பெற்ற சிறு போட்டிக்காக எழுதப்பட்டு முதலிடம் வென்ற Payment in Full எனும் ஒரு காமிக்ஸ் திகில் சிறுகதையின் எனது மொழியாக்கம் ‘பழிவாங்கும் பேய்’ உங்கள் பார்வைக்காக.

சில கணினி விளையாட்டுகளில் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருக்கும், ’ப்ளே லைக் எ சைல்ட்’ என. காமிக்ஸ் குழந்தைகள் விஷயம் இல்லை எனினும் இந்தக் கதைக்கு மட்டும் அது பொருந்தலாம். ‘ரீட் லைக் எ சைல்ட்’!





கதையின் தொடர்ச்சியைக் காண முத்து காமிக்ஸ் தளத்துக்குச் செல்லலாம்.

இந்நேரத்தில், சென்னையில் பகுதி விநியோகம் கொண்ட ’சென்னை அவென்யூ’ எனும் டேப்லாய்ட் வாரப் பத்திரிகையில், வாரம் தவறாது இந்தத் தளத்தில் எழுதப்பட்ட ஓரிரு படைப்புகளை இடம்பெறச்செய்யும் நண்பர் சுகுமார் சுவாமிநாதனுக்கு அன்பைம், நன்றியையும் இங்கே பதிவுசெய்கிறேன்!

இன்றைய இதழின் பக்கங்கள்..


*

மூடர் கூடம் - விமர்சனம்

$
0
0
எந்த சமயமும் புதிய அலை ஓய்ந்துவிடும், ஏனெனில் ஓகே ஓகே ராஜேஷ் போன்றோர்களின் அசுர பலத்தின் முன்னால் புதியவர்கள் நிலைபெறுவது கடினம்தான் என்ற அவநம்பிக்கை எனக்கு இன்னும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதைக் குறைக்க, நல்ரசனையை நம்பி இன்னுமொரு சினிமா தமிழில் வெளியாகியிருக்கிறது. நவீன் எனும் ஒரு புதிய இயக்குனர் நாளைய நம்பிக்கைக்குரிய வரிசையில் வந்தமர்ந்திருக்கிறார்.

மிக எளிமையான கதையும், பலமான திரைக்கதையும், இயல்பை ஒட்டிய அட்டகாசமான கதாபாத்திர உருவாக்கமும் இவர்களது பலம். நவீனும் அதே பாதையில்.. வெற்றிகரமாக பயணித்திருக்கிறார்.

மூடர் கூடம்!


வெவ்வேறு பின்னணி கொண்ட, வாழ வழி தெரியாது அலையும் நால்வர் இணைந்து ஒரு வீட்டில் திருட திட்டமிடுகிறார்கள். அவர்கள், அந்த வீட்டிற்குள் சிறைபிடிக்கப்படும் நபர்கள், அவர்களோடு தொடர்புடைய வெளியாட்கள், நடக்கும் சம்பவங்களுக்கு ஒவ்வொருவரின் ரியாக்‌ஷன்ஸ், விதம் விதமான திருப்பங்கள் என மிக சுவாரசியமான சினிமா. அனேக இடங்களில் மனம்விட்டு சிரிக்கமுடிகிறது. மிகத் தேர்ந்த கதாபாத்திர உருவாக்கம் மற்றும் நடிப்பு. சின்னச்சின்ன காரெக்டர்களும் ரசனை. சிப்ஸு, ஐஸ்க்ரீம், லட்டு, பூரி என வாய் நிறைய பேசும் சிறுமி, திருடர்களிடம் கொஞ்சம் அடங்கி நடந்துகொண்டாலும், அலட்சியமாக வாடா, போடா என விரட்டும் ஓவியா, தாவூதின் சென்னை கிளையின் லீடர், ஆட்டோ குமாரு, சேட்டு மற்றும் அவரது தமிழ் என ஒவ்வொரு காரெக்டர்களும் ரசித்துச் செதுக்கப்பட்டிருக்கின்றன. எந்தக்காட்சியை எடுத்துக்கூறினாலும் படம் பார்க்கும் சுவாரசியம் தடைபடக்கூடும். ஆக, கட்டாயம் இந்தப்படத்தை தவறவிடாமல் பார்த்துவிடுங்கள்.

தமிழில் அரிதாக இருக்கும் மெச்சூர்டு நகைச்சுவை வகை படம் இது. காட்சிகள், வசனங்கள், ஒளிப்பதிவு என அத்தனையும் அதனதன் சிறப்பான உயரத்தில் இருக்கின்றன. (துவக்கக்காட்சிகளில் வரும் சில அநாவசிய வசனங்கள் தவிர, அவை அந்த காரெக்டருக்கான இயல்பு என்ற போதும்). நவீன் எனும் காரெக்டரில் நடித்திருக்கும் இயக்குனர் நவீன் நிறைய பேசுகிறார். சமூகம், அதன் ஏற்றத்தாழ்வுகள் குறித்த தன் கருத்துகளை நிறைய பேசுகிறார். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் போயிருந்தால் ஆபத்தான அளவைத் தொட்டிருக்க்கும். அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் கட்டுப்பாடோடு அவர் இருப்பது நமக்கு நன்மை பயக்கும். குறிப்பாக பின்னணி இசை மிகவும் ரசித்துச் செய்யப்பட்டிருக்கிறது. சில பெரிய படங்களுக்கு ஏனோ தானோவென்று இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் இதைக் கவனிக்கலாம். இசையின் முக்கியத்துவத்தைக் கொஞ்சம் மதிக்கலாம்.

நவீனுக்குத் தருவோம் ஒரு வார்ம் வெல்கம்!!

டிஜிடல் மயமும், புதியவர்களின் வருகையும் ஒரு புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. இந்தப் புதிய வரவுகளின் அடுத்தடுத்த படங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வெற்று சினிமாக்களை தகர்த்தெறியும், தமிழ் சினிமாவைத் திசை திருப்பும்  மிகப்பெரிய பொறுப்பு அவற்றுக்கு இருப்பதாக நினைக்கிறேன். உங்களைப்போன்றே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் நம்பிக்கையோடு.

*

வித்யா போஷக்

$
0
0
வித்யாபோஷக்கிற்காக இயங்கும் அன்பு நண்பர் திரு.வெங்கடேசனின் வேண்டுகோள் கீழிருக்கும் செய்தி. நண்பர்களே, இயன்றவர்கள் தவறாது டொனேட் செய்யுங்கள், செய்தியை ஊடகங்களில் பகிர்ந்து தகவல் பரவச்செய்யுங்கள். நன்றி.

 
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

வித்யா போஷக் தொண்டு நிறுவனத்திற்கு உங்கள் ஆதரவை நாடுகிறேன். 'Give India Challenge'போட்டியில் வித்யா போஷக் பங்கெடுத்துள்ளது. இப்போட்டியில் இருநூறு தனிப்பட்ட நன்கொடைகளை  முதலாவதாக நாங்கள் பெற்று விட்டால், ரூ.2,00,000.00 வெல்லும் வாய்ப்புக்கிட்டும்.

ரூ.100 அளவிலான உங்கள் ஒவ்வொருவரின் எளிய நன்கொடையானது  502 பட்டதாரி, கிராமப்புற  மாணவர்களை வேலைக்கான தகுதியுள்ளவர்களாக மாற்றும் வல்லமையை எங்களுக்குத் தரக்கூடியது. எங்கள் பயிற்சி குறித்த மேலதிக விவரங்களை இணைத்துள்ள கோப்பில் பார்க்கலாம்.

தற்போது வித்யா போஷக் இப்போட்டியில் 48 தனிப்பட்ட நன்கொடைகளுடன் முதலாவது இடத்தில உள்ளது. நாங்கள் ஊக்கதொகையான ரூ 2,00,000.00 வெல்ல இன்னும் 152 பங்களிப்பாளர்கள் கூடுமானவரை விரைவாக வித்யா போஷக் நிறுவனத்துக்கு வழங்க வேண்டுகிறேன்.

உங்கள் பங்களிப்பு ரூ. 100 முதலானதாக இருக்கலாம்..கீழ்க்கண்ட தொடுப்புகள் மூலம், நெட் பாங்கிங், கடன் அட்டை அல்லது டெபிட் கார்டு வாயிலாக   உங்கள் பங்களிப்பை வழங்க இயலும். http://www.giveindia.org/iGive-NurtureMerit

இத்தகவலை உங்கள் நண்பர்களிடமும், இணையத்திலும் பகிர வேண்டுகிறேன். கீழ்க்கண்ட இணைப்பின் வாயிலாக Give India Challenge'போட்டியில் எங்கள் தற்போதைய நிலையைக்காணலாம்.   http://www.giveindia.org/t-india-giving-challenge-2013-league-standings-challengers-overall.aspx

வித்யா போஷக் குறித்த தகவல்களுக்கு: http://vidyaposhak.org/

*

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்- ஒரு பார்வை

$
0
0

விறுவிறுப்பு, ஆக்‌ஷனுக்குப் பஞ்சமில்லாத கச்சிதமான ஒரு கிரைம் த்ரில்லர். இந்தத் த்ரில்லர் சினிமாவை, ‘ஒரு சாதாரண த்ரில்லர்’ என்பதைத்தாண்டியும் ஒரு உயர்வான இடத்துக்குக் கொண்டுசென்ற விதத்தில்தான் மிஷ்கின் வேறு படுகிறார். இரண்டு காரணங்கள். ஒன்று, மிஷ்கினின் பிரத்யேக கதை சொல்லும் பாணி. இரண்டு, வணிக சமரசங்கள் ஏதுமில்லாத மிஷ்கினின் துணிச்சல். இவற்றால் இந்தப் படம் தமிழின் முக்கியமான படங்களின் வரிசையில் ஓரிடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டது.

பொதுவாகவே விமர்சனம் என்ற பெயரில் கதையைக் கொஞ்சம் சொன்னால் அது ஸ்பாயிலராக அமைந்துவிடும். அதிலும் த்ரில்லர் படங்களுக்குக் கேட்கவே வேண்டாம். ஆக, திரையரங்குகளிலிருந்து இந்தப் படம் ஓடிவிடும் முன்பு, தவறவிடாமல் உடனே ஓடிப்போயாவது பார்த்துவிடுங்கள் என்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன்.

மிக அரிதான சந்தர்ப்பங்கள் தவிர்த்து, சினிமாவில் குத்துப் பாடல்கள் மட்டுமின்றி எல்லாவிதமான பாடல்களையுமே நான் வெறுக்கிறேன். அவை சினிமா அனுபவத்தை குலைக்கின்றன என்பது என் தனிப்பட்ட கருத்து. இந்தப் படத்திலும் பாடல்கள் இல்லை, நகைச்சுவை என்ற பெயரில் வெறுப்பேற்றும் காட்சிகள் இல்லை. மிஷ்கினின் பிரத்யேக கிளிஷேக்கள், அவ்வளவு ஆர்வமான காத்திருப்புக்குப் பின்பான பின்கதை போதாமை, கிளைமாக்ஸ் நிஞ்சா ஃபைட் போன்ற சிற்சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆயினும் இளையராஜாவின் இசை, மிஷ்கினின் தனித்துவமான காட்சியமைப்புகள், நேர்த்தியான காரெக்டர்கள் வடிவமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, ஃபிளாஷ்பேக் உத்தி போன்ற புதுமைகள், நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு போன்றன அவற்றின் உச்சத்திலிருப்பதால் இந்தப் படம் ஒரு சிறப்பான உயரத்தை அடைந்திருக்கிறது.

மிஷ்கின், ஸ்ரீ, ஷாஜி போன்றோரின் காரெக்டர்கள் சிறப்பானவை. மிஷ்கினைத் துரத்தும் ஷாஜியின் தீவிரத்தையும், சலிப்பையும் மிகவும் ரசிக்கமுடிகிறது.

ராஜசுந்தர்ராஜன் ஐயா, மற்றும் அவர்தம் சீடர்கள் கண்டுணர்ந்து தரும் பின்னவீனத்துவ குறியீடுகளை உணரும் திறமையெல்லாம் எனக்கு இல்லை. முதல் காட்சியின் முதல் ஷாட்டிலேயே கதையைத் துவக்கிவிடும் கச்சிதமும், அந்த ஷாட்டின் அழகுணர்ச்சியும் எனக்கு மிகவும் பிடித்திருந்ததுதான், ஆனால் ராஜசுந்தர்ராஜன் அந்த ஷாட்டிலிருக்கும் குறியீடாக அவர் உணர்ந்ததைச் சொன்னபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதெல்லாம் மிஷ்கினுக்குத் தெரியுமா? என்று நகைச்சுவையாக நான் சிந்தித்த போது.. மிஷ்கினே ஒரு விழாவில்.. ‘ஸ்ரீ ஏன் மிஷ்கினை முதுகில் தூக்கிக்கொண்டு அலைகிறான் தெரியுமா? சிலுவைய்ய்ய்யா அது. சிலுவையை சுமக்கிறான் அவன்’ என்று முழங்கினார். இப்படியெல்லாம் குறியீடுகளைக் கண்டுணர்ந்து உய்க்கும் திறன் இருந்தால் மிகவும் மகிழ்ச்சி...

இல்லாதவர்களுக்கு இது ஒரு நீட் அண்ட் க்ளீன் எண்டெர்டெயினர்!!


பின்னிணைப்பு:

சென்ற ஞாயிறு மாலை, சென்னையில் ’டயலாக்’ என்ற அமைப்பின் சார்பில் எழுத்தாளர் பவா.செல்லத்துரை மற்றும் அவரது நண்பர்களால் இப்படம் குறித்த ஒரு உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அன்று காலைதான் படத்தைப் பார்த்திருந்தேன். நிச்சயம் பாராட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவருக்கான வாழ்த்தைப் பதிவு செய்யவேண்டியது அவசியம் என்று தோன்றியதால், அவ்வாறே எண்ணம் கொண்டிருந்த நண்பர்கள் இருவருடன் சென்றிருந்தேன். நிகழ்வு உரையாடல் என்று சொல்லப்பட்டு, பாராட்டுவிழாவாக மட்டுமே அமைந்தது. அதிலும் தவறில்லை. விமர்சனம், மாற்றுக்கருத்து, விவாதம் என்பதையெல்லாம் தாண்டி நல்ல முயற்சி செய்யும் கலைஞர்களை முதலில் மனம் திறந்து பாராட்டிவிடுவது முக்கியம்தான்.


ரசிகர்கள் பக்கமிருந்தும், கலைஞர்கள் பக்கமிருந்தும் ஏராளமானோர் மேடையேறி மிஷ்கினை மனம் திறந்து பாராட்டினார்கள். வழக்கம் போல ரசிகர்கள் பக்கமிருந்து சில ஓவர் டோஸ் உரைகளும் இருந்தன. இதுவும் இணைய உலகில் தவிர்க்கமுடியாததுதான். இணையப் பயனர்கள் என்போர் சற்றே முதிர்வு குறைவான நம் சமூகத்தின் ஒரு மாதிரிதானே தவிர, அதனினும் சற்று மேம்பட்ட சிந்தனையாளர்களாக, படைப்பாளிகளுக்கு நிகரானவர்களாக நான் கருதவில்லை. (மீ ட்டூ.. :-))) ) ஆகவே பெரும்பாலும் சமூகத்தின் ரசனையைத்தான் இணையமும் பிரதிபலிக்கும்.

பின்னர் கடைசியாக மிஷ்கின் ஏற்புரையாற்ற வந்தார். துவக்கத்தில், தேர்தல் நேர அரசியல்வாதி போல அவ்வளவு கொதிப்பு பேச்சில். சிரித்தால் இறங்கி வந்து உதைப்பார் என்று தோன்றியதால் அடக்கிக்கொண்டேன். தொடர்ந்து கொஞ்சம் அமைதியடைந்து சில நல்ல கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். அதில், குறிப்பிடத் தகுந்த விஷயங்கள் பல இருந்தன.

”90 சதவீதத்துக்கும் அதிகமாக கமர்ஷியல் என்ற பெயரில் பொறுப்பற்ற குப்பைகள் வந்துகொண்டிருக்கும் ஒரு சூழலில், என்னைப் போல, தங்கமீன்கள் ராமைப் போல நல்ல முயற்சிகள் செய்பவர்களிடம் கொஞ்சம் பரிவோடு நடந்துகொள்ளுங்கள். இம்முயற்சிகளுக்கு மதிப்பளியுங்கள். நாங்கள் ஒன்றும் தவறிழைக்காத, முழுமையான மனிதர்கள் அல்லர். நாங்களும் உங்களைப்போலத்தான். எங்கள் படங்களிலும் சில தவறுகள் இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி எங்கள் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். எல்லா படைப்புகளும் விமர்சனங்களுக்குட்பட்டவைதான். ஆனால் விமர்சனம் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டு எழுதுங்கள். ஒரு படைப்பை நிதானமாக உள்வாங்கிக்கொண்டு சிந்தித்து எழுதுங்கள். முதல் நாளே, முதல் காட்சி முடிந்ததுமே எழுத அப்படி என்ன அவசரம்? எப்படி அந்தப் படைப்பை அதற்குள் எடைபோடமுடியும்? அரைகுறையாக, அவசரமாக எழுதி ஒரு படைப்பைக் குத்திக் கிழிக்காதீர்கள், படைப்பாளியைக் காயப்படுத்தாதீர்கள். விமர்சகர்களுக்கு மிகவும் பொறுப்பு இருக்கிறது. பார்க்கும் உங்களுக்கு இருக்கும் அறிவைப்போலவே, எங்களுக்கும் அறிவு இருக்கிறது என்பதை உணருங்கள். மதிப்பளியுங்கள். ஒரு காட்சியை உருவாக்கும் போது ஏராளமான சிந்தனைக்கும், தர்க்க விவாதங்களுக்கும், கற்றலுக்கும், உழைப்புக்கும் பின்னரே அதைச்செய்கிறோம் என்பதை நம்புங்கள்”

மிகவும் சரியான கருத்துகள்தான். கேடிபில்லா கில்லாடிரங்காவையும், தங்க மீன்களையும் ஒரே விமர்சனப் பார்வையோடு அணுகுவது மிகவும் தவறுதான். விமர்சனம் என்ற பெயரில் இணையத்தில் ‘இணையம் எனக்குப் பரிச்சயம்’ என்ற ஒரே காரணத்தினாலேயே விமர்சனம் எழுதும் நண்பர்கள் இவற்றை மனதில் கொள்வது நல்லது (யாருக்கு? யாருக்கோ! :-)) ).

ஆனால் பேச்சின் துவக்கத்தில், “என் படத்தையா குறை சொல்கிறாய்? விட்டேனா பார். என்ன அறிவு இருக்கிறது உனக்கு? நீ வந்து படத்தை எடுத்துப்பாருய்யா, அப்பதான் அதோட கஷ்டம் என்னான்னு உனக்குத் தெரியும். முடியுமா உன்னால? என்ன மாதிரி 90 கிலோ உடம்ப வைச்சுகிட்டு ஓடமுடியுமா உன்னால? என்னையவா விமர்சனம் பண்றே? ட்ரிபூட்னா என்னான்னு தெரியுமா? என்னையவா காப்பியடிச்சேனு சொல்றே? கதைனா என்னான்னு தெரியுமா? சினிமான்னா என்னான்னு தெரியுமா? புரட்யூஸர்னா யார்னு தெரியுமா? குத்துபாட்டு இல்லைனா என்னாகும்னு தெரியுமா? ஒரு சினிமா எடுக்குறதுக்கு முன்னால முப்பது புக்கு படிக்கிறேன், முன்னூறு சினிமா பார்க்கிறேன், சம்பந்தப்பட்டவங்ககிட்ட மூவாயிரம் தடவை டிஸ்கஸ் பண்றேன். யாருகிட்ட.? பிச்சி பிச்சி..” என்று வேட்டியை மடிச்சிக்கட்டிகிட்டு களத்தில் இறங்கிவிட்டார்.

இதற்கும் வரிக்கு வரி ஒரே அப்ளாஸ்!! நம்மாட்களைப் பற்றிதான் தெரியுமே! போட்டு உதைச்சாலும் சிரிச்சி, ரசிச்சி, என்ஜாய் பண்ணி மஸாஜ் மாதிரி ஏத்துப்பாங்களே.. :-)))

ஒரு நல்ல கலைஞனுக்கு ஏன் இந்தப் பேச்சு? ஒரு சினிமா எடுப்பதே கடினம்தான். மேலும், வர்த்தக சமரசங்கள் ஏதுமில்லாமல் எடுப்பது இன்னும் கடினமான பணிதான். அதனால்தான் ராஜேஷுக்கும், மிஷ்கினுக்கும் வேறு வேறு இடங்கள் தரப்பட்டிருக்கின்றன. அதனால்தான் இந்த பாராட்டுக்கூட்டத்தில் இருக்கை இல்லாவிடினும் பரவாயில்லை என இரண்டு மணி நேரம் நின்று, கைத்தட்டி வாழ்த்து, அன்பு, நன்றியெல்லாம் தெரிவிக்கப்படுகிறது. அப்படி அதைச் சாதித்தவன் இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்காமல் அமைதிகாப்பதுதான் அவனது மேன்மையை இன்னும் உயர்த்தும்.

இத்தருணத்தில் கமல்ஹாஸன் மீது இன்னும் கொஞ்சம் மரியாதை முகிழ்ப்பதைத் தவிர்க்க இயலவில்லை. கமல்ஹாஸனை, அவரது முயற்சிகளை நாம் எத்தனை தடவை தூக்கி எறிந்திருக்கிறோம். அதற்காகவெல்லாம் இப்படி அவர் பேசிக்கொண்டிருந்தால், அந்த உரைதான் எவ்வளவு நீண்டதாக இருந்திருக்கும்? :-)))

*

கிராவிட்டி (Gravity)

$
0
0
ஹாலிவுட் படங்கள் பார்க்கத்துவங்கிய காலத்திலெல்லாம் எல்லாப் படங்களும் பிரமிப்பாக இருக்கும். 1999ல் சென்னைக்கு வந்து, பின் தொடர்ந்த சில வருடங்களில், சம்பாதித்த கொஞ்ச பணத்தையும் ஹாலிவுட் படங்கள் பார்த்தே கரைத்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாக ரசிக்க, சப்-டைட்டில் வைத்துக்கொண்டு புரிதலோட பார்க்க டிவிடி கிடையாது, நினைத்த உடன் டவுன்லோட் பண்ணிப் பார்க்க டோரண்ட் கிடையாது. எல்லாம் தியேட்டர்தான். புரிந்தாலும், புரியாவிட்டாலும், பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவ்வளவுதான். சிக்ஸ்த் சென்ஸ், வெர்டிகல் லிமிட், தி மம்மி, மேட்ரிக்ஸ், க்ளாடியேட்டர், எக்ஸ்-மென் போன்ற படங்கள் எல்லாம் அந்தச் சமயங்களில் பார்த்த மறக்க முடியாத படங்கள்தான்.

சென்னை வந்ததே ஒரு துணிச்சலான காரியம் எனக்கு. இந்த அழகில் வந்த புதிதில், தேவி தியேட்டரில்தான் ஸ்பீஸிஸ் (எந்த பாகம்னு ஞாபகம் இல்லை) படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை. தேவி தியேட்டரில் அதுவரை படம் பார்த்ததில்லை. நான் அடம்பிடிக்க, ரூம் மேட்ஸ் ஒருவரும் உடன் வர ஒத்துக்கொள்ளவில்லை. தன்னந்தனியாக சென்று மாலைக் காட்சி பார்த்துவிட்டு, அதுவும் 70எம்.எம்மில் பார்த்த வியப்பில் திறந்த வாய்மூடாமல் அறைக்குத் திரும்பினேன். வழியை மறந்துவிடாமல் இரவு பத்திரமாக ஜாஃபர்கான்பேட்டையில் இருந்த ரூமுக்கு வந்து சேர்ந்ததெல்லாம் சாதனையாக்கும்!

வருடங்கள் செல்லச்செல்ல, அதுவும் இந்த டிவிடி வந்த பின்பு சகட்டுமேனிக்கு ஆசைப்பட்ட ஹாலிவுட் படங்களையெல்லாம் பார்க்கத்துவங்கினேன். அதுவும் போதாமல், டோரண்ட் வந்த பிறகு கெசபலான்கா, கிங்காங் (1933) வரைக்கும் பின்னோக்கிச் சென்றும் பார்த்தாயிற்று. முக்கியமான படம் என்று யாராவது சொன்னால்- பஸ்ஸில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் முதலாக- சொன்னா போதும், உடனே போடு டவுன்லோடை என்று ஆகிவிட்டது. என்ன.. கொஞ்சம் இலக்கியம் தூக்கலாக இருக்கும் படங்கள்தான் கொட்டாவி வரவைத்தன, அதனால் அப்படியான படங்கள் இருக்கும் பக்கம் மட்டும் போவதில்லை. மற்றபடி வியப்பெல்லாம் போய் ஒரு கட்டத்தில், ’யாரப்பா டைரக்டர்? கேமரூனா! நல்லா எடுப்பானே பையன், அவன் படம்னா தியேட்டருக்குதான் போகணும்’ என்கிற லெவலுக்கு வந்தாச்சு.

எல்லா இடங்களிலும் நம்மை மாதிரி மனிதர்கள்தானே இருக்கிறார்கள்.. ’போடுறா மொக்கையனு.. அங்கேயும் 2 விஜய், 4 பேரரசு, 8 சற்குணம்னு இருக்கத்தானே செய்வாங்க’ என்பது பின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்தது. வேறென்ன.. அனுபவம்தான். அதன் பின்பு கொஞ்சம் செக் பண்ணிவிட்டு, படம் பார்க்கும் வழக்கம் வந்தது. ஆனாலும் முன்பு போல பிரமிப்பூட்டும் படங்களைக் காண்பது என்பது மிக அரிதான ஒன்றுதான்!!

கிராவிடி பிரமிப்பூட்டும் ஒரு படம்!


நல்ல இயக்குனர்கள், குழுக்கள் ஒன்று சேரும் போது, டெக்னாலஜி, செய்நேர்த்தி ஆகியன உச்சம் தொடுகின்றன. அதையெல்லாம் விளக்க முடியாது. விளக்குவதற்கும் கொஞ்சம் விவரம் வேண்டுமே.. அதோடு விளக்குவதெல்லாம் போதாது, இந்தப் படத்தைப் பொறுத்தவரை இது அனுபவிக்கப்பட வேண்டிய விஷயம். சர்வதேச விண்வெளிக்கூடத்தில் நிகழும் ஒரு நிகழ்வையும், அதைத் தொடரும் சிக்கல்களுமே கதை. இவை படமாக்கப்பட்ட விதமெல்லாம் நிச்சயம் அந்தத் துறை சார்ந்த டெக்னீஷியன்களையே (அதாவது கலை ரசனை கொண்டவர்களை மட்டும்)  வியக்கச்செய்யும் என்பதில் ஐயமில்லை. கதைக் களத்துக்கே நம்மைக் கொண்டு செல்லும் 3டி நுட்பம் இந்தப் படத்திற்கு சாலவும் பொருத்தமானது.

ஸ்பேஸில் மிதந்து கொண்டிருக்கும் ஒரே ஒரு பிரதான கதாப்பாத்திரம், அதன் கூடவே தத்தளிக்கும் நாம். பூமி எத்தனை அரிய ஒரு வாழிடம் இந்த மனிதர்களுக்கு என்பது மண்டைக்கு உறைக்கிறது.

டிஸம்பரில் இங்கிருக்கும் டெல்லிக்கு சென்றால் கூட குளிரில் விரைத்துக்கொண்டு காது அடைத்துக்கொள்ளும் போது, போதும்டா சாமீ, எப்போது போவோம் ஊருக்கு? ஒரு ஐந்து நிமிடம் கிடைக்காதா எனது சொந்த ஊரின் காற்று என்று ஆகிவிடும். சமயங்களில் நேரும் தனிமை என்பது நமக்குள் பல்வேறு சிந்தனைகளை ஏற்படுத்தும். ஆழ்கடல் நீச்சல், நம் புவியை நீங்கிச்செல்லும் உணர்வை ஏற்படுத்தி, நமது அற்ப நிலையை உணர்த்தும் என்பார்கள். அதைப்போல பன்மடங்கு இந்த விண்வெளி ஏற்படுத்தும் என்பதை உணரமுடிகிறது. ஆனால், இதெல்லாம் புரிந்தும் கூடத்தான் இத்தனைப் போராட்டங்கள், சல்லித்தனங்கள் நம்மிடையே! இன்னும் இன்னுமென.. நிலவைத் தொடட்டுமா, செவ்வாய்க்குச் செல்லட்டுமா என விண்ணைத் தொடுகிறது மனிதனின் ஆசை!

நம் இருப்பிடத்தின் அரிதான தன்மையை, சக மனிதனின் அரிதான தன்மையை உணரச்செய்யும் ஒரு அற்புதமான படமாக மலர்ந்திருக்கிறது கிராவிடி! அதுவும் அந்த கிளைமாக்ஸ், முத்தாய்ப்பு!


இறுதியாக ஒன்று. அந்த பிரதான கதாபாத்திரத்தில் தோன்றும் சாண்ட்ரா புல்லக். இத்தனைப் பெரிய கதையை, கதாபாத்திரத்தைத் தாங்கி, மிளிரச் செய்யவேண்டுமானால் அதற்கு எத்தகைய திறனும், அனுபவமும் வேண்டும்.!? ஸ்பீட் படம் பார்த்ததிலிருந்து சாண்ட்ராவின் ரசிகன் நான். பெயரை நினைவில் கொள்ளுமளவு நான் ரசித்த முதல் ஹாலிவுட் நடிகை இவர். கொஞ்சம் ஆண்மை கலந்த சாண்ட்ரா, ஹிலாரி ஸ்வாங்க், ஏஞ்சலினா ஜோலி, மிஷெல் ரோட்ரிகெஸ் போன்றோர் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். சாண்ட்ராவின் திரைவாழ்வின் மிக முக்கியமான படம் இந்த கிராவிடி! தவற விடாதீர்கள் என்ற வழக்கமான சொல்லாடல் மிகக்குறைவு இந்தப் படத்துக்கு!


இரண்டாம் உலகம்

$
0
0

இரண்டாம் உலகம் தமிழில் அரிதாக அவ்வப்போது வரும் உலகப்படங்களில் ஒன்றாகும். இந்த வகைப்படங்களெல்லாம் சாதா ஆடியன்ஸுக்கு அவ்வளவாக புரியாது என்பதால், ஸ்பெஷல் சாதாவான நான் கொஞ்சம் சிரமம்பார்க்காமல் கதையை விளக்க முற்படுவது வழக்கம். குருவி, யாருக்கு யாரோ ஸ்டெப்னி, ஆழ்வார், நையாண்டி போன்ற முந்தைய உலகப்படங்களுக்கும் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிவீர்கள்தானே! ஆகவே இதுவரை படம் பார்க்காத, இனி பார்க்கும் எண்ணமுள்ளவர்கள், முன்னதாக சஸ்பென்ஸ் விடுபட விருப்பமில்லாதவர்கள், சொந்தமாக கதையைப் பார்த்துப் புரிந்துகொள்ளும் சக்தி படைத்தவர்கள் ஆகியோர் மேற்கொண்டு இதைத் தொடரவேண்டாம்.



முதலில் நம் உலகம், அதாவது பூமி. இங்கொரு ஆர்யா. மிக மிக நல்லவர். சாந்த சொரூபி. திடுமென விறுவிறுப்பாக ஓடியாடி வேலை செய்கிறார். திடுமென சொங்கி மாதிரி அமைதியாக இருக்கிறார். ஆனால், அனுஷ்கா காதலைச்சொல்ல வந்தால் பேந்தப் பேந்த விழிக்கிறார். அனுஷ்கா, பரவாயில்லை என்று சொல்லிவிட்டுப்போய் வேறு மாப்பிள்ளைக்கு ஓகே சொன்னவுடன் இவருக்கு காரணமே இல்லாமல் காதல் வந்துவிடுகிறது. அனுஷ்காவை ஃபாலோ செய்கிறார். அவர் ஒரு ஆணுடன் பேசிக்கொண்டிருக்கையில் பக்கத்தில் போய், ஒன்றும் பேசாமல் மண்டையை அங்குமிங்கும் திருப்பி லூசு மாதிரி நிலத்தை உற்றுப்பார்க்கிறார், பின் மூஞ்சியை உற்றுப் பார்க்கிறார். திடுமென, லவ்வர் பாயாக மாறி, பின்னாடியே போய் ஜாலியாக சீண்டி விளையாடுகிறார், மெடிகல் கேம்ப் எனப்படும் டூர் இந்தப்படத்திலும் வருகிறது. பாட்டுப்பாடுகிறார். ஒரு கட்டத்தில் அனுஷ்காவுக்கு மீண்டும் இவர் மீது காதல் வந்துவிட்டதோ, நாம் பிழைத்தோமா! அந்தோ பரிதாபம், அப்போதுதானா அனுஷ்கா கால் தடுக்கி விழுந்து மண்டையைப் போடவேண்டும்! ஸோ ஸேட்! 

மீண்டும் ஒரே திக்கையே வெறித்து உட்கார்ந்தவரை ஒரு நாய் வந்து எங்கோ கூட்டிப்போகிறது. பின்னவீனத்துவவாதிகளால் மாய யதார்த்த, இணைக்கனா, இச்சாலோகம், ஃபேண்டஸி என்றெல்லாம் கணிக்கப்படும் உலகுக்குள் போகப்போகிறோம் என கொஞ்சம் இடுப்புப் பெல்டை இறுக்கிக்கொண்டால் ஊஹூம், இல்லை. அதன்பின்பு, நோய்வாய்ப்பட்ட தந்தை ப்ரிஸ்க்காக ஸ்கூட்டரில் வந்து ’அனுஷ்கா எங்கும் போகவில்லை, இங்கேதான் இருக்கிறார், நன்றாகத் தேடு’ என்று குறியீடுகள் நிறைந்த ஒரு அறிவுரையைச் சொல்லும் போதாவது போய்விடுவோம் என்று பார்த்தால் அப்போதும் நிகழவில்லை. இப்படித்தான் சாதா ஆடியன்ஸ் எதிர்பார்க்கும் பல விஷயங்கள் இதில் நிகழ்வதே இல்லை. (இலக்கியப்படம், உலகப்படம், பின்னவீனத்துவபடம் போன்ற பல வார்த்தைகள் நினைவுக்கு வருமே உங்களுக்கு!). அதன்பின், பூகம்பம் போல ஏதோ ஒன்று வர, நல்ல மழையில் இவர் ஒரு காரை எடுத்துக்கொண்டு எதற்காகவோ, எங்கோ ஒரு மலையுச்சிக்குப் போகிறார்.

நிற்க.

அந்த இணையான இன்னோர் உலகம்! அப்படின்னா? ரொம்ப சிம்பிள்தான். இங்கு நம் உலகில் வானம் நீல நிறம், காடுகளும், மரங்களும் பச்சை நிறமாக இருக்கிறதல்லவா? அங்கு, இவையெல்லாமே ஜிங்குச்சா ஜிங்குச்சா மல்டி கலர். மஞ்சள், ஊதாப்பூ கலர்கள் சற்று தூக்கலாக இருக்கும், அவ்வளவுதான். அங்குமொரு ஆர்யாவும், அனுஷ்காவும் வாழ்கிறார்கள். கூடவே ஒரு ராஜா, மந்திரி, ஒரு இளம் சாமியாரிணி, கொஞ்சம் சிப்பாய்கள், ஒரு எதிரி ராஜா, அவருக்கும் கொஞ்சம் சிப்பாய்கள். மந்திரியின் மகன்தான் ஆர்யா. 

இனிமேல்தான் சிக்கலான இடம் வருகிறது, கதையைக் கவனமாகக் கேளுங்கள். அந்த ஊரில் காதல், அன்பு, பூக்கள் இவையெல்லாம் கிடையாது. இவையெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆக, இவையெல்லாம் நமக்கு மட்டும் எதற்கு என இயக்குனர், நம்மைப் பார்த்து ஒரு தத்துவார்த்த கேள்வியையும் எழுப்புகிறார் எனவும் கொள்ளலாம். சரி, இங்குள்ள இரண்டாம் ஆர்யாவுக்கு வருவோம். பார்க்க ஆஜானுபாகுவாக இருந்தாலும் அவர் ஒரு சொங்கி என அப்பா உட்பட, ஊருக்குள் ஒருவரும் மதிப்பதில்லை. அவருக்கோ, அனாதையாக சுற்றித்திரியும், ஆண்களை வெறுக்கும் அனுஷ்கா மீது மோகம். அடைய முயற்சிக்கிறார். முடியவில்லை. ஏனெனில் அவர் இவரைவிட ஆஜானுபாகுவாக இருப்பதாலும், சண்டைக்கலையில் தேர்ந்திருப்பதாலுமாகும். இந்த சமயத்தில் ராஜாவும், அனுஷ்காவைப் பார்த்து மையலாகிவிட அனுஷ்கா அதற்கும் ஒப்புக்கொள்ளாததால் சிறைப்படுகிறார். அவரை விடுவிக்க, ஆர்யா, யாருமே இதுவரை வென்றிராத, ஒரு பெரிய பறக்கும் சிங்கமொன்றை வேட்டையாடவேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. 

பிற உயிரினங்கள் என்று பார்த்தால், அந்த ஊரில் அந்த சிங்கத்தைத் தவிர லாங்ஷாட்டில் பறக்கும் சில டைனோ பறவைகள் மட்டும்தான் இருக்கின்றன. சரி, அந்த சிங்கத்தை வேட்டையாடுவது எப்படி? அதொன்றும் பிரச்சினை இல்லை, ஐந்து ஆனை பெரிசுக்கு, ஒரு டைனோசர் மாதிரி இருக்கும் அந்த சிங்கம், தவக்கா மாதிரி இங்குமங்கும் குதித்துக்கொண்டுதான் இருக்கும், கடிக்கவெல்லாம் செய்யாது. ஒரு குட்டிக் கத்தியை வைத்து அதை குத்திச் சாய்த்துவிடுகிறார் ஆர்யா. அனுஷ்கா விடுதலையாகிறார். அட, இன்னும் அனுஷ்காவுக்கு அவர் மீது அபிப்பிராயம் வந்தபாடில்லை, காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொள்கிறார். அதுவாவது பரவாயில்லை, அந்த ராஜாவுக்கும், மற்ற மக்களுக்கும் கூட இவர் வீரத்தின் மீது மரியாதை வந்ததா என்றால் அதுவுமில்லை. சில படைவீரர்கள், ஒரு பெரிய மலையைக் காட்டி இதுதான் சாமி மலை, இதன் மீது யாருமே இதுவரை ஏறியதில்லை, அதன் மீது ஏறினால்தான் நீ வீரன் என்று ஒப்புக்கொள்வோம் என்கின்றனர். அவரும் டக்கென்று ஏறிவிடுகிறார்.

நிற்க.

அந்த மலைதான், இந்த மலை. மலை மலை, மருத மலை! காரில் மலை மீது முதலில் ஏறிய முதல் ஆர்யா, மாய மனநிலையில் காரோடு மலை மீதிருந்து கீழே விழும் தருவாயில் இரண்டாமவர், அவரைக் காப்பாற்றி இரண்டாம் உலகுக்கு அழைத்துவருகிறார். (இப்போதாவது, மற்றவர்கள் இவரை வீரர் என்று ஒப்புக்கொண்டார்களா என்று ஞாபகமாக கேட்கிறீர்களா? அட போங்கங்க, உங்களுக்கு ரொம்பதான் ஞாபக சக்தி!). இரண்டாம் ஆர்யாவைப் பார்த்ததும் மனமகிழும் சாமியாரிணி, நம் உலகுக்கு காதல் எனும் உணர்வை ஒருவன் கொண்டுவந்துவிட்டான், பூக்கள் பூக்கப்போகின்றன, சற்று நாட்களில் முதல் காதல் மலரப்போகிறது என்கிறார். சொன்னபடியே, அவ்வளவு நாட்கள் மொட்டாக இருந்த பூக்கள் பூக்கின்றன. மக்கள் எல்லாம் தேமேவென அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது பார்த்து அந்த வில்லன் ராஜா, இந்த புனிதத் தன்மைகள் நிறைந்த சாமியாரிணியை கடத்திக்கொண்டு போக முயற்சிக்க, வழி மறிக்கும் ஆர்யா, சுமார் 50 பேர் கொண்ட அந்தப்படையை ஒற்றையாளாக, மதுவருந்தியபடியே, ஒற்றைக்கையால் துவைத்து எடுத்து சாமியாரிணியைக் காக்கிறார். (துணைக்கு காட்டிலிருந்து அனுஷ்காவும் வந்து சண்டை போட்டுவிட்டு மீண்டும் காட்டுக்குள் போய்விடுகிறார்). நம் ராஜாவும், படைவீரர்களும் தேமேவென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்பாடி, இப்போதாவது ஆர்யாவின் வீரத்தை எல்லோருக்கும் தெரிந்துகொள்ள சந்தர்ப்பம் வந்ததே என நாம் நினைத்தால், அடக்கடவுளே, இப்போதும் யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அதன்பின்பும் அவரைத் தூற்றுகிறார்கள். இரண்டாவது முயற்சியாகவும், பெரும்படையோடு அந்த வில்லன் கும்பல் வந்து சாமியாரிணியை கடத்திவிடுகிறார்கள். இந்த முறையும் ஆர்யா மட்டும் பின்னாடியே ஓடிப்போய் அவர்களிடம் மாட்டிக்கொள்கிறார். அவரை, குதிரையில் கயிறு கட்டித் தரதரவென இழுத்துப்போகிறார்கள். 

இரண்டாம் ஆர்யாவைப் பார்த்ததும், அனுஷ்காவுக்கும் உள்ளுக்குள் பூ ஏற்கனவே மலர்ந்துவிட்டிருந்தது. அதனால், அந்த ஆர்யா எஃபெக்டில், கொஞ்சம் லேட்டானாலும் அவரது இரண்டாம் உலக ஆர்யா மேல் ஒருவழியாக லவ் வந்துவிடுகிறதோ, கிளைமாக்ஸ் வந்துவிடுகிறதோ. நாம் பிழைத்தோம்! 

அவர்கள் ஆர்யாவையும் பிடித்துக்கொண்டு போய்விட்டதால், இப்போது அனுஷ்கா அவரை மீட்க கிளம்புகிறார். உடன் யாரும் வராததால், நம் ஆர்யா துணைக்குப் போகிறார். இவர்கள் பெரும் மலைக்காடுகள், பனிப்பிரதேசம் எல்லாம் கடந்து செல்வதற்குள், இரண்டாம் உலக ஆர்யா, சாமியாரிணியைக் காப்பாற்றிக்கொண்டு எதிரே வந்துவிடுகிறார். வேலை மிச்சம்! எப்படிக் காப்பாற்றினார் என்று கேட்கவில்லையே! அந்தம்மாவை அவர்கள் ஒரு அறையில் போட்டுவைத்திருக்க, வாசலில் ஒரு 50 பேர் காவல். ஆர்யாவை அவர்கள் எங்கும் போட்டு அடைத்துவைக்கவெல்லாம் இல்லை, சும்மாதான் திரிந்துகொண்டிருக்கிறார். இவர் அந்த அறைக்குப் பக்கத்தில் போகவும், வாசலில் இருந்த காவலாளிகள், ‘உங்கக்காவுக்கு உடம்பு சரியில்லைல்ல, வா, பாத்துட்டு வந்துடுவோம்’, ’வாயேன், ரெண்டு வடை தின்னுட்டு வருவோம்’, ‘உங்க மாமா ஊர்லயிருந்து வந்திருக்காரா? அவரப்பாத்து நாளாச்சே! வா போலாம்’ என்று சொல்லிவிட்டு வரிசையாக இரண்டிரண்டு பேராக கிளம்பிவிடுகின்றனர். சாமியாரிணி எஃபெக்ட் என நாம் நினைத்துக்கொள்ள வழியிருக்கிறது. ஆக, இவர் எளிதாக போய் கூப்பிட்டுக்கொண்டு வந்துவிடுகிறார். இதற்கு ஏன் இவர் வேலைமெனக்கெட்டு போகவேண்டும்? அவரேதான் வந்துவிடலாமே என்றெல்லாம் என்னைக் கேட்காதீர்கள். 

நால்வரும் ஒரு படகில் ஊருக்குத் திரும்புகையில், நமது ஆர்யா வில்லனின் ஆயுதம் பட்டு தொபுக்கடீர்னு தண்ணீருக்குள் விழுந்துவிடுகிறார். இரண்டாம் உலகத்து ஆர்யாவும், அனுஷ்காவும் துடிக்க, சாமியாரிணியம்மா அர்த்தபுஷ்டியோடு அவர்களைத் தடுக்கிறார். அதாவது தண்ணீருக்குள் போன ஆர்யா மூன்றாம் உலகத்துக்குப் போய்விடுகிறார். அங்கும் அன்பு, காதல் எல்லாவற்றையும் அறிமுகப்படுத்தவேண்டுமல்லவா? 

சுபம்! 

ஒருவேளை நமக்குதான் குறியீடுகள் புரியவில்லையோ, அன்புக்கு வரும் சோதனைகளையும், அன்பே உலகை ஆளும் என்ற தத்துவார்த்தத்தையும்தான் இரண்டாம் உலகத்து மனிதர்களின் ஒவ்வொரு டைப் டைப்பான நடவடிக்கைகளும் குறிப்பால் உணர்த்துகின்றனவோ என்றும் நாம் சந்தேகிக்கலாம். ஆனாலும். ஆர்யா, ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையே முழுசா ஒரு நிமிஷம் கேப் எடுத்துகொண்டு வசனம் பேசுவதையெல்லாம் எந்த பின்னவீனத்துவ வகையில் சேர்ப்பது என்றுதான் எனக்குப் புரியவில்லை. ஒரு 10 மணி நேர படத்தை 2.30 மணி நேரத்துக்கு கண்டமேனிக்கு கத்தரித்துக் கோர்த்தால் எப்படியிருக்குமோ, அப்படி இருந்தது எனக்கு. ஒரு கச்சிதமான படத்தின் எந்த ஒரு காட்சியை உருவினாலும், படம் அர்த்தமிழந்துபோகும் என்பார்கள். இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியாக, எந்தக் காட்சியை எடுத்தாலும் படத்தைப் புரிந்துகொள்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஏனெனில் ஏற்கனவே ஏதாவது புரிந்திருந்தால்தானே பிரச்சினை? உலகே ஒரு வெங்காயம் என்பது மாதிரி என்ற தத்துவத்தையும் நாம் இந்த எடிடிங் மூலமாக அறியலாம்.

பர்சனலாக எனக்குப் பிடிக்கவில்லை எனினும், முதல் படி இருந்தால்தானே அடுத்த படியில் கால்வைக்க முடியும்? இந்த சிஜி ஒர்க்கெல்லாம், தமிழில் நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான். அடுத்து அனுஷ்கா. வயது முதிர்ச்சியடைந்தாலும், சிலரின் க்யூட்னெஸுக்கு முதிர்ச்சியே கிடையாது. அதன்பின் ராம்ஜி. அற்புதமான ஒளிப்பதிவு. 

சமீபத்தில் முத்து காமிக்ஸ் தளத்தில் ஒரு விவாதம் நடந்தது. ஆக்‌ஷன், அட்வென்சர், காமெடி காமிக்ஸுகளுக்கு நடுவே, கிராஃபிக் நாவல் எனும் பெயரில், ஓரிரு வரலாற்றுப் பின்னணி கொண்ட சீரியஸ் காமிக்ஸ் புத்தகங்கள் சமீபத்தில் வெளியாயின. நமக்குக் கிடைக்கிற காமிக்ஸே கொஞ்சூண்டுதான். இதில் ஏன்யா எங்களை சீரியஸ் கதை சொல்லி அழவைக்கிறீங்க, எங்களுக்கு கமர்ஷியல் கதைகளே போதும் என ஒரு பக்கத்து வாசகர்கள் போர்க்கொடியெழுப்பினார்கள். அடப்பாவிகளா, உங்களுக்குப் புரியலைன்னா போச்சா, அற்புதம்யா அவை, ஆக, சீரியஸ் கதைகளும் வேண்டும் என இன்னொரு பக்கத்து வாசகர்கள் எதிர்விவாதம் செய்தனர். இரண்டாவது கோஷ்டியில் நான் இருந்தேன். அதை சற்றே இங்கும் நாம் பொருத்திப்பார்க்கலாம். உனக்குப் புரியலைன்னா போச்சா? எங்களுக்கு பல உள்ளீடுகள் புரிகின்றன ஐயா, நாங்கள் ரசிக்கிறோமே என்று ஒருசாரார் சொன்னால் அதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது? 

சரிதான், ஒரு சாராருக்குப் புரியாத, இன்னொரு சாரார் உணர்ந்து அனுபவிக்கிற பின்னவீனத்துவம் என்று ஒன்று இருக்கிறதுதான். ஆனால், பின்னவீனத்துவமும், போலி பின்னவீனத்துவமும் பார்ப்பதற்கு ஒன்றுபோலவேதான் இருக்கும். எங்களுக்கு இரண்டுமே தெரியப்போவதில்லை, அதனால் பிரச்சினையில்லை. நீங்கள்தான் பாவம், பச்சைத் தண்ணீரைக்குடித்துவிட்டு பாயசம் குடித்ததாய் நினைத்துக்கொள்ள நேரிடும், ஜாக்கிரதையாக இருந்துகொள்ளுங்கள்! வாழ்த்துகள்!

$
0
0
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கவிதை ஒன்று:


வானேகுதல்

தங்கக் கூண்டிலிருந்து விடுபடுகிறது
சிறு பறவையொன்று
இனி இரைக்கு போட்டியிருக்கலாம்
இருப்பே கேள்வியாகலாம்
ஆயினும்
அது
தன் சின்னஞ்சிறு சிறகுகளால்
அளைந்துகொண்டிருப்பது வானை.

*

இன்று எழுதிய அந்தக்கவிதையின் தொடர்ச்சி:



வசப்படாத வானத்தின் துளிகள் 
தங்கிவிட்ட சிறகுகளோடு
கூண்டுக்குத் திரும்புகிறது
சிறு பறவையொன்று
இரை இனி தேடிவரும்தான்
இருப்பும் ஊஞ்சலில்தான்
ஆயினும்
அது காத்திருக்கும்
மீண்டும் நிகழப்போகும்
அந்த வானேகுதலுக்காக! 

*






















Photograph courtesy: Vijay Armstrong

*

தத்வமஸி

$
0
0

அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, காதலி, நண்பர்கள் என எத்தனை உறவுகள் அவனுக்கு, நம்மைப் போலவே. எனக்கு சில மாதங்களாகத்தான் தெரியும் அவனை. அவனைப்போல ஒரு வேலையாள் கிடைப்பது அரிதிலும் அரிது. சொன்ன வேலையை கச்சிதமாக, விரைவாக முடிப்பான். அதுவும் எங்கள் வேலையோ திட்டமிட்டபடி செய்யப்படும் வேலையாக இல்லாமல், நேரும் விதம்விதமான சிக்கல்களை சமயோஜிதமாக சமாளித்து, கிடைக்கும் விதம் விதமாக சூழலைப் பொறுத்துக்கொண்டு, இருப்பதைக்கொண்டு முடிக்கவேண்டிய அவசியம் உள்ள பணி. அதில் இப்படியொரு கச்சிதமான ஒரு நபரை இந்த 15 ஆண்டுகால என் அனுபவத்தில் நான் பார்த்ததேயில்லை.

ஓரிரு தடவைகள் வெளியூர் பணிகளில் அவனோடு பணியாற்றும் வாய்ப்புக்கிடைத்த போது அவன் இன்னும் என் மனதுக்கு நெருக்கமாகிப்போனான். பணியைத் தாண்டியும் அவன் ஒரு சுவாரசியமான ஆளாக இருந்தான். நிறைய சினிமா பார்ப்பான். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இரவுகளில் வாக்கிங் போகலாம் சார் என நச்சரிப்பான். அவன் மொழியில் வாக்கிங் என்பது மதுவருந்தச்செல்வது. குடித்தால் நிறைய பேசுவான். நானும்தான். அதிலிருந்து என் மீது இன்னும் அதிக மரியாதையைக் காட்டினான்.

அந்த நீண்ட சாலையில் தனியே நின்றுகொண்டிருந்தான் அவன்.

"என்ன சார் முழிக்கிறீங்க.. அந்த 2 எச்பி மோட்டார் போர் பண்றதுக்குள்ள முக்கியிருக்குமே.. நாந்தான் சொன்னேன்ல.."

நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். நான் முன்னாடி போறேன். நீங்க ஆபீஸ் வேலையை முடிச்சிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு கிளம்பினான். அவன் போகும் போது காற்றில் புகை கலைவதைப் போல அவன் உருவமே மெல்ல மெல்ல கரைந்து காணாமல் போனது.

அதிர்ந்து விழித்தெழுந்தேன்.

சில நாட்களுக்கு முன்பு அவன், சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, வழுக்கி, அருகே சென்றுகொண்டிருந்த பஸ்ஸின் சக்கரங்களில் சிக்கி ஒரு சில நொடிகளில் இறந்துபோய்விட்டான்.

நெருங்கிய ஒரு உறவு இறந்ததைப் போல நொறுங்கிப்போனேன். மனித உடல் இரும்பிலே செய்யப்படவில்லை. உயிருக்கு இன்னொரு வாய்ப்பே கிடையாது. ஒரு கொசு இறந்துபோவதைப் போல மனிதன் ஒரு நொடியில் இறந்துபோவான் என்ற உண்மை என் மனதை மிகவும் படுத்திக்கொண்டிருக்கிறது.

அவன் பாதி திறந்துபோட்டிருந்த அந்த 2 எச்பி மோட்டாரின் கியர்பாக்ஸ் திறந்தபடியே கிடக்கிறது என் அலுவலக அறையில்.


.

பண்ணையாரும் பத்மினியும்

$
0
0

'புதிய அலை'இயக்குனர் வரிசையில் இன்னொரு நபராய் அருண்குமார். (எத்தினி வாட்டிதான் பீட்சா, ந.கொ.ப.கா, சூது கவ்வும், மூடர் கூடம்னு லிஸ்ட் போடுறது. பொதுவா இப்படி ஒரு பெயர் வைச்சிகிட்டா நல்லாயிருக்கும்ல.. அதான் இந்த புதிய அலை!). அருண்குமாருக்கு இந்த இடம், அவர்களின் அதே சிறப்புகள் இவரிடமும் இருந்ததால் மட்டுமல்ல, அவர்களிடமுள்ள‌ அதே பிரச்சினையும் இருப்பதால்தான் கிடைக்கிறது.

ஒரு புதிய கதை. ஒரு காரெக்டருக்கு, ஒரு பொருளின் மீது ஏற்படும் ஈர்ப்பை மையமாகக்கொண்ட‌ கதை தமிழுக்குப் புதிதுதானே! கூடவே அழகான பாத்திரப்படைப்பு, முடிந்தவரை இயல்பான காட்சிகள். வெறுப்பேற்றும் குத்துப்பாடல்களுக்கும், வெற்று சண்டைக்காட்சிகளுக்கும், திடுக்கிடும் திருப்பங்களுக்கும் ஒரு நோ! இது போதுமே பாராட்டை ஓடிவந்து பெற்றுக்கொள்வதற்கு. ஆக, ஒரு வார்ம் வெல்கம் அருண்குமாருக்கு!

கதைச்சூழலுக்கு தேவைப்படுவதால் ஒரு 30 வருடங்களுக்கு முன்பு பயணிக்கும் பீரியட்! இன்னும் சிரத்தை மேற்கொண்டிருந்தால் இந்த விஷயத்தில் ஒரு கிளாஸிகல் தரத்தைத் தொட்டிருக்கலாம். பரவாயில்லை, அவர்கள் நோக்கமும் அதுவல்ல.


ஒரு காரின் மீதான ஒரு பண்ணையாரின் காதல், அதற்கு ஏற்படும் ஊறு, அதற்கான முடிவு என மொத்தக்கதையுமே கடைசி அரை மணி நேரத்தில்தான் நிகழ்கிறது. குறும்படத்தின் கதை சினிமாவுக்குத் தகுதியானதா என்பதை இன்னும் கொஞ்சம் கூட ரூம் போட்டு சிந்திக்கலாம் நம் நண்பர்கள். அதையொட்டி எழுப்பப்படும் பிற காட்சிகளைத் தாங்கும் வலிமை பிரதான கதைக்கு வேண்டும். அங்கேதான் இந்தப்படமும், மற்ற முந்தைய புதிய அலையைப் போலவே சறுக்குகிறது.

பண்ணையாரைப் போலவே காரை நேசிக்கும் அவரது பிரதான ட்ரைவர் முருகேசனின் காதல் எந்த விதத்திலும் கதையையோ, நம்மையோ பாதிக்கவில்லை. குறைந்தபட்சம் சுவாரசியம் கூட இல்லாமல் போனது துரதிருஷ்டம். போலவே, பண்ணையாருக்கும், அவர் மனைவிக்குமான முதிர்பருவக் காதலும் கூட வலிந்து காரோடு ஒட்டப்பட்டிருக்கிறது. அதிலும் சலிப்பூட்டும் நிலை வரை தைரியமாக பயணித்திருக்கிறார்கள். இருப்பினும் ஓரளவு படத்தைக் காப்பாற்றுவது அந்தக் காதல்தான்.

துவக்கம் முதல் ஆங்காங்கே சில மனிதர்களையும், சூழல்களையும் வில்லனாக்குவது போல டெம்ட் ஏற்றி, உடனேயே விக்ரமன் பாணியில் லாலாலா பாடி சுபமாய் முடித்துவைக்கிறார்கள். எப்படியோ ஒருவகை டெம்போவை படம் நெடுக நீடிக்க‌ வைத்திருந்த வகையில் வெற்றிதான். வலிந்து திணிக்காத, சூழலோடு இயைந்த, மெல்லிய‌ நகைச்சுவை படத்துக்கு பலம். பீடை காரெக்டர் அந்த‌ வகையில் பலம்தான்!

அனைத்து நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பெனினும், பண்ணையாரின் மனைவி காரெக்டரில் துளசி அனைவரையும் ஒருபடி விஞ்சுகிறார். பின் ஜெயப்பிரகாஷ், பின்பு சேதுபதி. விஜய் சேதுபதி இப்படியான அடக்கி வாசிக்கும் இயல்பான‌ ஹீரோ காரெக்டரில் இருக்கும் வரை அவருக்கும் நல்லது, நமக்கும் நல்லது. ஐஸ்வர்யாவுக்கு படத்தில் பஞ்சாலை வேலையைத் தவிர்த்து வேறு வேலையே இல்லை.

ஒரு சில குறைகள் இருந்தாலும், நிச்சயம் பார்க்கவேண்டிய, வரவேற்க வேண்டிய முயற்சிதான்!

.

சுபாவுடன் ஒரு நாள்!

$
0
0

ஞாயிறு முழுதுமே வெளியே செல்வதில் விருப்பமின்றி, வீட்டிலேயே உழல்வதுதான் என் வழக்கமெனினும் சென்ற ஞாயிறு காலையிலேயே எங்காவது கிளம்பவேண்டுமென ஒரு உந்துதல். ஒன்றுமில்லையெனில் ஏதாவது படத்துக்காகவேனும் வெளியே கிளம்பிவிட திட்டமிட்டேன். ரமாவுடன் சில நாட்களாக நிலை: தகராறு என்பதால், மீண்டும் கூட்டணி அமைக்கும் பொருட்டு அவரையும் அழைத்துச்செல்ல முதலில் யோசித்தேன். பின்பு மனதை மாற்றிக்கொண்டு தனியே கிளம்பலாம் என முடிவு செய்தேன். மதியம் 3 மணி வாக்கில் கிளம்பியபோது திடுமென சுபாவுடன் கூட்டணியமைக்க முடிவு செய்தேன். சட்டென அவனும் ஓகே சொல்லி, மேலிடத்தில் அனுமதியும் பெற்று ஆடை மாற்றித் தயாராகிவிட்டான். கிளம்பினோம்.

ரமா இல்லாமல் தனியே இவன் இப்படி என்னுடன் வருவது இதுதான் முதல் தடவை. கிளம்பும் போது முதலில், இன்று பல புதிய விஷயங்களைக் காண்பிப்போம், அவனுக்கு இது ஒரு ஜாலியான நாளாக அமையப்போகிறது என எண்ணி மகிழ்ந்தேன் நான், ஆப்புகள் மிகுந்த நாளாக இது எனக்கு அமையப்போகிறது என்ற உண்மை தெரியாமல்!

முதல் நிறுத்தம், பீஸா கார்னர். அது அவனுக்காக இல்லை என்று உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும். என்றைக்கோ சாப்பிட்ட சிக்கன் பீஸா நினைவிலாட அதைக் கண்டுபிடித்துவிடும் நோக்கில்தான் அங்கு நிறுத்தினேன். அந்தத் தேடலில் சமீபத்தில் பாஸ்தா எனும் படுகுழியில் நான் விழுந்தது கூட உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஜாலியாக உள்ளே போய் அமர்ந்தோம். புதிய இடங்களில் 'சற்று நேரம் சமர்த்து'எனும் பாலிஸிபடி கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான். மெனு கார்டு வருவதற்குள்ளேயே அவனது உரையாடலின் வால்யூம் கொஞ்சம் அதிகமாகியிருந்தது. மெனு கார்டு
அவன் சைஸுக்கு இருந்ததால் படம் பார்க்க ஆரம்பித்தான். நான் அந்த சிக்கன்
பீஸாவை தேடும் தீவிர‌ பணியிலிருந்தேன்.

சத்தமாக கேட்டான்.

"என்னப்பா பூராம் இங்லிஷ்ல இருக்கு?"

என்னவோ தமிழில் இருந்தால் முழுதும் வாசித்துத் தள்ளிவிடுவதைப்போல இருந்தது தொனி. உஸ்ஸ்.. என்று அமைதிப்படுத்திவிட்டு,

"பரவால்லம்மா, நான் ஆர்டர் பண்ணிக்கிறேன். முதல்ல எதுன்னாலும் நீ அமைதியா பேசு"

"ஏன்?"

"மத்தவங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கும்ல.."

"ஓஹோ..!"என்று சொல்லிவிட்டு மெனு கார்டில் கவனமானவன், திடுமென அதிர்ச்சியாகி மீண்டும் சத்தமாக,

"யப்பா.. எல்லாம் டூ ஹன்ட்ரட், த்ரீ ஹன்ட்ரட்னு காஸ்ட்லியா போட்டுவைச்சிருக்கான் கடைக்காரன். கொஞ்சம் பணத்துக்கு ஏதாவது சொல்லுங்க.. இங்க பாருங்க ஒன் தர்டி ஃபைவ்!"

அடப்பாவி, மானத்தை வாங்குனானேன்னு வாயைப்பொத்தி அமைதிப்படுத்தினேன். ரூபாய்னாலே என்னான்னு தெரியாது, அதுக்குள்ளே எப்போ இந்தளவுக்கு பொருளாதார நிபுணரானான்னு யோசிச்சபிற‌குதான் தொடர்ந்து ஒரு வாரமாக விளையாடிக்கொண்டிருக்கும் பைக் ரேஸ் ஞாபகம் வந்தது. கலர், வீல் டிஸைன், ஹெல்மெட்னு ஒவ்வொரு விஷயத்துக்கும் சேகரிக்கும் பணத்தைக் கொடுத்து அப்கிரேட் செய்வது போன்ற கேம். அதில் புதிய பைக் வாங்க பொறுமையாக நிறைய பணம் எப்படி சேகரிப்பது, எப்படி சிக்கனமாக இருப்பது போன்ற விஷயங்களைச் சொல்லிக்கொடுத்ததன்
இம்மீடியட் பின் விளைவு இது. அந்தச் நேரத்திலும் டூ ஹன்ட்ரடை விட ஒன் தர்ட்டிஃபைவ் குறைச்சல் எனும் அவனது கணிதத் தேர்ச்சியை மனதுக்குள் மெச்சிக்கொண்டேன். அதோடு பெட்டிக்கடையிலிருந்து, ஷாப்பிங் மால் வரை எல்லோருக்கும் ஒரே சொல் கடைக்காரன். அட்லீஸ்ட் அதைக் கடைக்காரர் என திருத்த முயன்று கொண்டிருக்கிறேன்.

"பரவாயில்லம்மா, ஒரு நாள்தானே.. உனக்கு என்ன வேணும்னு மட்டும் சொல்லு"

அடுத்த சிக்ஸர், "ஓஹோ, நிறைய பணம் வைச்சிருக்கீங்களா? ஆஃபீஸ்ல உங்க ஸார் நிறைய பணம் கொடுத்திருக்காங்களா?"

அதாவது ஸ்கூலில் அவனுக்கொரு மிஸ் இருப்பது போல ஆஃபீஸில் எனக்கொரு ஸார். அதுக்கு மேல் விளக்க முடியாது என்பதால் நைஸாக, "ஆமா"என்றேன்.

"சரி, அப்ப பீஸா எதுனாலும் சொல்லுங்க.. எனக்கு ஐஸ்க்ரீம் மட்டும் நிஜமா
சொல்லிடுங்க"பீஸா என்கிற சொல் தெளிவாக, கச்சிதமாக இருந்தது.

ஆர்டர் செய்தேன், ஆங்கிலத்தில்.

"என்னப்பா இங்கிலிஷ்ல சொல்றீங்க? அவங்களுக்கு தமிழ் தெரியாதா?"

அவனே பதிலை எடுத்துக் கொடுத்துவிட்டதால், "ஆமாம்மா.. அதான்"என்றேன்.

மீண்டும் ஒரு, "ஓஹோ"

இவர்கள்தான் ஆர்டர் செய்த பிறகுதான் பீஸாவுக்கு மாவே பிசைய ஆரம்பிப்பவர்களாச்சே! வருவதற்குள் விடிந்துவிட்டது. அதற்குள் ஃபுல் ஃபார்முக்கு வந்துவிட்டான். 'சேர் ஏன் இப்படியிருக்கு? ஏன் என் தண்ணி பாட்டில எடுத்துட்டு வரல நீங்க? மறந்துட்டீங்களா? அடுத்து நாம எங்கப் போகப்போறோம்? பார்க்குக்கு கண்டிப்பா போகணும். சறுக்கு விளையாடணும். ஏன் இவங்க இன்னும் கொண்டு வரமாட்டேங்கிறாங்க? வீட்டுக்கு போலாமா?'. அரைமணி நேரம் தாக்காட்டிய பிறகு, பீஸாவும், ஜூஸும் வந்தது.

"ஐயா, புண்ணியவான்களே.. கையோட ஐஸ்க்ரீமையும் இப்பயே கொடுத்துடுங்க"இப்போது தமிழிலேயே சொன்னேன்.

அதேதான் கரெக்டா, தப்பான பீஸாவை செலக்ட் செய்திருக்கிறேன் போல.. வாயில் வைக்க முடியவில்லை. அவனுக்கு ஒரு வாய் கொடுத்ததும்,

"நல்லாருக்குப்பா, ஆனா எனக்கு வேண்டாம்.. நீங்களே சாப்புடுங்க!"என்றான் ரொம்ப நல்லவன் போல. ஜூஸை மட்டும் 'விருட் விருட்'டென உறிஞ்சி முடித்தான். முடிந்தவரை முயற்சித்தேன்.

"என்னப்பா, முக்கித் தக்குற மாதிரி இருக்குது"என்றான் நைஸாக. அடப்பாவி, நக்கல் வேறயா!

பின்பு ஐஸ்க்ரீம் வந்தது. கருமம் பிடிச்சவனுங்க.. அந்தப் பெரிய கிண்ணம், அதைச்சுற்றிய வெள்ளைத்தட்டு என அனைத்திலும் கோடு கோடாய் விளிம்புவரை சாக்லெட்டை ஊற்றி வைத்திருந்தான்கள். இதுதானாய்யா உங்கள் உணவ‌லங்காரம்? நானே கவனிக்காமல் ஏதோ டிஸைனாக்கும் என்று கையை வைக்க, சுபாவும் அதற்குள் இரண்டு கையையும் வைத்துவிட்டு சட்டென சட்டையில் இழுவிக்கொண்டான். கையில் ஏதும் ஆகிவிட்டால் சட்டென சட்டையில் துடைத்துக்கொள்ளும் பழக்கம் இன்னும் போகவில்லை.

"அடச்சூ" (அடத்தூவின் மருவிய டீஸன்டான வடிவம். நான் ஒரு நாள் எதற்கோ இதைச்சொல்ல, அவன் அதை துருவித் துருவிக்கேட்டதால் மாற்றிச்சொல்ல நேர்ந்தது. திடுக்கிடும் நேரங்களில் அவன் அதை ஜாலியாக பயன்படுத்துகிறான்.)

"அடச்சூ"என்று நானும் சொல்லி டிஷ்யூவால் துடைத்துவிட,

"ஏம்பா கடைக்காரன் இப்படி இழுவி வைச்சிருக்கான்?"

எனக்கு வந்த ஆத்திரத்துக்கே அவனுகளைக் கேட்கணும் போலிருந்தது. அவன் கேட்க மாட்டானா? எதையோ சொல்லி சமாளித்து மேலும் நான்கைந்து முறை சாக்லெட்டை இழுவிக்கொண்டு ஒருவழியாக‌ சாப்பிட்டு முடித்து வெளியே வந்தோம்.

அடுத்து, கேகே நகர் சிவன் பார்க்.

உள்ளே நுழையவுமே, "அப்பா, பலூன்ப்பா"

"நீ என்ன குட்டிப்பிள்ளையா? பலூன் கேக்கிற?"

சிரித்துக்கொண்டே, "ஓஹோ"

சறுக்கு விளையாட்டுப் பகுதி. அவனுக்கு மிகப்பிடித்தமான விளையாட்டு. அதற்காகத்தானே இந்த மெனக்கெடல். ஆனால் இம்முறை கூடவே நில்லாமல் தனியே விடுவதென முன்பே தீர்மானித்திருந்தேன். தூரமும் இல்லாமல், மிக அருகும் இல்லாத இடத்தில் நின்றுகொண்டு நீயே போய் விளையாடு என்று அனுப்பிவிட்டு, வேறெங்கோ கவனிப்பதாய் பாசாங்கு
செய்துகொண்டிருந்தேன். வெளியுலகில் எப்படி இயங்குகிறான் எனப் பார்க்க ஒரு ஆர்வம்.

அன்று குழந்தைகள் கூட்டம் வேறு சற்று அதிகமாக இருந்தது. ஆர்வம் ஒரு பக்கம், தயக்கம் ஒரு பக்கமென போய் முதல் தடவை சறுக்கிவிட்டு வந்தான். அதற்குள் கூட்டமாகிவிட ஒரு சிறிய லைனில் நிற்க வேண்டியதாகிவிட்டது. இவன் ஒழுக்கமாக லைனில் நிற்க, சில பிள்ளைகள் இவனை முந்திக்கொண்டு லைனில் சென்றன. இவன் முந்தைய பிள்ளையை நெருங்கி நின்றால் கூட சிலரைத் தடுத்திருக்கலாம். ஆனால் நெருங்கத் தயங்கினான்.

அடுத்தவரை தொடும் சகிப்புத் தன்மை குறைவால் பொதுவாக லைன்களில் முந்தைய ஆளுக்குப் பின் இடைவெளி விட்டே நிற்பேன் நான். பின்புறம் ஆட்கள் இடித்துக்கொண்டு 'போங்க சார் அதான் இடமிருக்கே'என்றால் கூட, 'பொறுங்களேம்யா.. அதான் ஒரே ஸ்பீட்லதான லைன் போகுது. அடுத்த ஆள் மேல ஏறிகிட்டுதான் நிக்கணுமா?'என்பேன். தப்பாம பொறந்திருக்கான். முடியல.. அவன் பாடு, எப்படியும் விளையாடிவிட்டு வரட்டும் என்று விட்டு விட்டேன். நியாயமான முறையில் லைனில் நின்று இன்னும் நான்கைந்துமுறை விளையாடிவிட்டு வந்தான்.

"ஹேப்பியா?"

"ஹேப்பி! போலாமா? வீட்டுக்கா?"திடுமென, "இன்னும் ஓராட்டி விளையாடிட்டு வரவா?"என்று கேட்டுவிட்டு மீண்டும் ஓடினான்.

(சிவன் பார்க் ஓவியப் பின்னணியில்)

வந்தபின், சற்று நேரம் குழந்தைகள் ரோலர் ஸ்கேட்டிங் விளையாடுவதை வேடிக்கை பார்த்தோம்.

"உனக்கு இந்த ஷூஸ் வேணுமாம்மா?"என்றேன்.

ஒன்றிரண்டு பேர் விழுந்து வாரியதைப் பார்த்தவன், "டூ ஸ்டான்டர்ட் போனப்புறம் வாங்கிக்கலாம்"என்றான். பல சமயங்களில் அவனை சமாளிக்க நான் சொல்லும் வாக்கியம் இது.

பின்பு கிள‌ம்பினோம். ஃபேம் நேஷனல் நிறுத்தம்.

"படத்துக்கு போலாமா?"

"அனிமேஷன் படம்னாத்தான் நான் வருவேன்.. இல்லன்னா வேண்டாம்"

கிழிஞ்சிது போ! இப்ப அப்படி படம் ஒன்றும் வரவில்லை, அயன் மேன் 3 (!?) வந்ததும் அழைத்துப்போகிறேன் என்று நைஸாக பேசி சம்ம‌திக்க வைத்து வீரம் படம் பார்க்கத் திட்டம் போட்டு பாக்ஸ் ஆபீஸ் அருகே சென்றோம். லைனில் ஓரிருவர் நிற்க, நான் அனுமதிச்சீட்டு நிலவரத்தை அறிய டிவியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

"என்னப்பா டிக்கெட் வாங்காம, டிவி பாத்துகிட்டிருக்கீங்க?"

"எந்த படம் பாக்கணும்? எத்தனை மணிக்கு போடுவாங்க? டிக்கெட் இருக்கா, முடிஞ்சிடுச்சான்னு அதுல வரும்மா. அதான் பாத்துகிட்டிருக்கேன்"

"ஓஹோ"

லைனில் நின்றோம்.

"ரெண்டு டிக்கெட்"என்றேன்.

"ஸாரி ஸார், இல்லை"

"டிஸ்ப்ளே காமிக்குதே"

"ஒண்ணுதான் இருக்கு. அதான் அப்படி! ஹிஹி!"

டேய், எனக்குன்னே பிளான் பண்ணி இப்படில்லாம் பண்ணுவீங்களாடா என்று மனதுக்குள் திட்டிவிட்டு வெளியேறினேன். அந்த கவுன்டர்வாசி சொன்னது என் காதிலேயே சரியாக விழாதபோது சுபாவுக்கு எப்படி கேட்டிருக்கும்?

"என்னப்பா டிக்கெட் வாங்கலையா?"

"டிக்கெட் இல்லையாம். நாம வீட்டுக்குப் போலாமா?"

"அப்போ, டிவியை அவ்ளோ நேரம் பாத்துகிட்டிருந்தீங்க?"

'டேய் எல்லாம் நேரம்டா'என்று மனதுக்குள் சொல்லிவிட்டு பேச்சை மாற்றினேன்.

"கிளம்பலாமா?"

"ஓகே"என்றவன் திடுமென ஞாபகம் வந்தவனாக, "ஒரு நிமிசம் வாங்கப்பா"என்றபடியே மாலுக்குள் ஓடினான். உடனேயே கெஸ் பண்ணிவிட்டேன். எஸ்கலேட்டர் பயணம். இங்கு வந்து நான்கைந்து மாதங்களாவது இருக்கும். ஞாபக சக்தி நன்றாகத்தான் இருக்கிறது. வந்ததற்கு நான்கைந்து தடவைகள் எஸ்கலேட்டரில் மேலும் கீழுமாய் பயணித்துவிட்டு பின்னர், வீட்டுக்குக் கிளம்பினோம். செல்லும் வழியில் ஒரு எலக்ட்ரானிக் கடையில் நிறுத்தம். டிவி ரிமோட் உடைந்துவிட்டதால் வேறு வாங்குவதற்காக நிறுத்தினேன்.

ஏற்கனவே ஓரிரு தடவைகள் வந்தப் பழக்கம் என்பதால் கடைக்காரர் நட்பாகியிருந்தார். சிரித்துப் பேசினார். நானும் மிக கேஷுவலாக,

"ஒழுங்காத்தான் ஓடிகிட்டிருந்தது பாத்துகிடுங்க‌, நேத்து கை தவறி கீழ விழுந்து உடைஞ்சிட்டது.."என்றேன்.

சுபா தடுப்புப் பலகை உயரம் கூட இல்லாததால் சட்டையைப் பிடித்து எதையோ சொல்வதற்காக‌ கீழே இழுத்தான். குனிந்தேன். அதிக சத்தமுமில்லாமல், சற்று கோபமாகவும், பல்லைக் கடித்துக்கொண்டு,

"ஏன் பொய் புளுவுறீங்க.. உம்மையைச் சொல்லுங்க. நீங்கதானே ரிமோட்டை உடைச்சீங்க"

கபால்னு வாயைப் பொத்தினேன். சமீபத்தைய வீட்டுக்கலவரத்தில் ரிமோட் மீதுதான் கோபத்தைக் காட்டியிருந்தேன். அதுசரி, கோபத்தையும் இப்படி 100, 200 ரூபாய் பொருள் மீதுதானே காட்டவேண்டியிருக்கிறது. பக்கத்தில்தான் செல்போன் இருக்கிறது. அதைவிட பெரிதாக ஒரு கம்ப்யூட்டர், அதைவிடவும் பெரிதாக ஒரு டிவி. என்ன கோபமென்றாலும் கை அங்கு செல்லுமா என்ன? அதோடு ஆத்திரத்தில் கொலை செய்வது கண நேர முடிவு என்பார்களே, அதுபோல டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் சண்டை வருகிறது. அதுசரி, வீட்டில் வேறு என்ன காரியம்தான் செய்கிறோம் நாம்? அந்த சமயத்தில் கையில் இருப்பது ரிமோட்தானே! எழுந்து போய் ஷெல்ஃபிலிருக்கும் போனை எடுப்பதற்கு எத்தனை விநாடிகள் ஆகும்? அதுவரை கோபம் இருக்குமா என்ன? அன்னிக்கு, இவன் பெட்ரூமில் ஹோமொர்க்தானே எழுதிக்கொண்டிருந்தான் என்ற சந்தேகத்தோடு,

"இல்லம்மா, அது தானாவேதான் கீழ விழுந்தது"

"இல்லையே, நான் ஒத்தைக்கண்ணால பாத்துகிட்டிருந்தனே.. அம்மா திட்டினாங்க, நீங்களும் திட்டிட்டு ரிமோட்டை கீழ போட்டிங்களே.. எனக்குத் தெரியுமே!"

"இல்லவே இல்ல. ரிமோட் ஷெல்ஃபில் இருந்தது. அப்போ ஒரு குட்டிப்பல்லி பக்கத்துல வந்துது. நான் அம்மாக்கூட பேசிகிட்டிருந்தனா? அப்ப பல்லி தள்ளி விட்டிருச்சு. நான் பிடிக்கலாம்னு போறதுக்குள்ள அது கீழ டப்புனு விழுந்துட்டுது.."

சந்தேகத்தோடயே, "என்கிட்டயும் புளுகிற மாதிரி இருக்குதே.. பொய் சொல்றீங்களா? நான் பாத்தனே.."என்றபடியே பாயின்டைப் பிடித்தான்.

"பல்லி குட்டியா இருக்கும். ரிமோட் பெருசா இருக்கும். அது எப்படி தள்ளமுடியும்?"ஆனாலும் சற்று சந்தேகம் வந்துவிட்டபடியால் அதையே பிக்கப் செய்தேன்..

"ஆங்.. பல்லி தள்ளலை. இப்பதால் ஞாபகம் வருது. ஒரு பெரிய எலி அங்க டக்க்னு வந்துது. அது பல்லிய புடிக்க வேஏஏகமாக வந்தப்போ டம்முனு பல்லி பக்கத்துல இருந்த ரிமோட்ல இடிச்சி, ரிமோட் டொம்னு விழுந்துட்டுது"

"ஓஹோ"இன்னும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. இருந்தாலும் நான் கொடுத்த ம்யூசிக் எஃபெக்ட்ஸ் கொஞ்சம் வேலை செய்திருந்தது. புது ரிமோட்டை வாங்கிக்கொண்டு, அதே கதையை மீண்டும் பலவாறாக‌ சொல்லியபடியே வீடு வந்து சேர்ந்தேன்..

வந்த உடனேயே ஆரம்பித்துவிட்டான் அம்மாவிடம்.

"நாங்க எங்கல்லாம் போனோம் தெரியுமா? மொதல்ல சறுக்கு விளையாட பார்க்குக்கு போனோம்.. இல்லல்ல, பீஸா சாப்பிட கடைக்குப் போனோம். அங்க தட்டுல சாக்லெட் டிஸைன் போட்டிருந்தாங்க.. அது கையில இழுவிச்சி.."

பல்லி தள்ளிவிட்ட ரிமோட் வரை கதை ஒன்றுவிடாமல் ஒப்பிக்கப்பட்டது. இதெல்லாம் எப்படி? இதுக்குன்னே ட்ரெயினிங் கொடுக்குறாங்களா? இல்ல, பார்ன் நேச்சரா?

உஸ்ஸ்ஸ்ஸப்பா!

.

குக்கூ- விமர்சனம்

$
0
0

பெரிய இடமென்றாலும் ராஜுமுருகன் என்றதும் நம்ப ஆள் என்பது போல ஒரு நெருக்கம் மனதிலிருந்தது. கூடவே நிறைய எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்தது. ஆயினும் முதல் நாளே போனதற்கு அழைத்துச்சென்ற நண்பர்தான் காரணம்.

தலைப்பு, விளம்பரப் போஸ்டர்கள் இதனாலெல்லாம் இதயம் வருடும் ஒரு மெல்லிய காதல் கதையை எதிர்பார்த்திருந்தேன். ரொம்பச்சரிதான், அதே போல ஒரு கதையைச் சொல்லத்தான் ராஜுமுருகனும் முயன்றிருக்கிறார்.

பார்வையற்ற ஒரு இளைஞனுக்கும், இளம்பெண்ணுக்குமிடையே ஒரு அழகிய காதல். கூடவே பார்வையற்றோர் இந்த வாழ்வை எதிர்கொள்ளும் அழகு. எவ்வளவு அழகான கதைக்களம்! ரசனைமிகுந்த இயக்குனர் வேறு.

இருண்ட திரையில் ஒலிக்கும் குரல்களோடு படம் துவங்குகையில் இன்னும்தான் நம் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. பார்வையற்றோரின் உலகம், மெல்ல மெல்ல நம் முன்னே விரிந்து அதில் இயல்பான காரெக்டர்களும், நிகழ்வுகளும் என சுவாரசியமாகத் தொடர்கிறது. இடைவேளை வரையில், ஏன் முக்கால்வாசிப் படம் வரையில் சிரித்துக்கொண்டே இருக்கிறோம். பின்பு காதல் வேகத்தில் முன்னெச்சரிக்கையற்ற காதலன், காதலியின் நடவடிக்கையினால் ஏற்படும் டென்ஷன், வில்லன்களிடம் சிக்கி, இறுதியில் அந்தக் காதல் ஜோடி இணையுமா, இணையாதா என்ற விறுவிறுப்பு வேறு. ஒரு குத்துப் பாடல் தவிர வேறு ஏதும் சொல்லிக்கொள்ளும்படி வணிக சமரசங்களும் இல்லைதான். ஆனால், ராஜுமுருகன் படம் ஜெயிக்கத்தேவையான அத்தனை விஷயங்களையும் நாசூக்காக உள்ளடக்கிய ஒரு தமிழ் சினிமாவை உருவாக்கியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். குத்துப் பாடல்களும், அந்தரத்தில் பாய்ந்தடிக்கும் சண்டைக்காட்சிகளும் மட்டும்தான் கமர்ஷியல் சினிமாவின் அடையாளங்களா என்ன?

எந்நேரமும் ஹீரோயின் கையோடு வைத்திருக்கும் கடிகாரத்தை தொலைத்துவிட, அதுவரை ஆளில்லாமல் அமைதியாக இருந்த அந்தத் தெருவில் அண்ணாசாலை ட்ராஃபிக் ஏற்பட்டு அதனூடே நம் ஹீரோ பயணித்து, கடிகாரத்தை மீட்டு வருவதை கமர்ஷியல் என்று சொல்லலாமா? ரயில்வே நிலையங்களிலேயே தொழிலையும், வாழ்க்கையையும் நடத்தும் ஹீரோ, ஹீரோயினைத் தேடும் இறுதிக்காட்சியில் ரயில்வே ப்ளாட்பாரத்தில் கடைகளையும், தூண்களையும் மோதிக்கொண்டு ஓடுவதை வேறெப்படி வர்ணிக்கலாம்? பார்வையற்றோரின் நகைச்சுவைக் காட்சிகளில் நகைச்சுவை இருந்ததே தவிர பார்வையற்றோரின் உலகம் இல்லை. இப்படியான விஷயங்களாலெல்லாம் ஒருவகையான சினிமாத்தனம் மிஞ்சியதே தவிர ஊடே இழையோடியிருக்கவேண்டிய உணர்வுகளும், உண்மையும் மிஸ்ஸிங்தான்!

ஒரு கிளாஸிகல் படம் கிடைத்திருக்கும் சகல வாய்ப்புகளும் இங்கு இருந்தன. ஆனால், அத்தகைய தேவதூதன் அவ்வளவு சீக்கிரம் இறங்கி வந்துவிடுவானா என்ன?

அழகிய ஒளிப்பதிவு, இனிய பின்னணி இசை ஆகியன படத்துக்கு இன்னும் அழகூட்டுகின்றன. நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பே! மாளவிகா அழகு. தினேஷ் அவரளவில் சிறப்பைத் தர முயன்றிருக்கிறார். துவக்கக்காட்சியில் மாளவிகாவிடம் அடிவாங்குகையில் அவர் தரும் ரியாக்‌ஷன் சட்டென நம்மைப் பதறவைக்கிறது. ஆயினும் படம் முழுதும் கண்களை இழுத்துக்கொண்டு ஏன் ஒரு நடிகன் சிரமப்படவேண்டும் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. காசி விக்ரம், அவன் இவன் விஷால் என ஏன் இப்படி? ஏன் மாளவிகாவைப் போலவே தினேஷுக்கும் பார்வையில்லை எனினும் ஒழுங்கான கண்கள் இருந்தால் என்ன? ஒரு நபரின் கண்ணில் தூசு விழுந்தாலே அதைப் பார்க்கும் கண்களும் கலங்குகின்றன. கண்கள் அத்தனை சென்சிடிவான உறுப்புகள். க்ளோஸப் ஷாட்களில் இரத்தநாளங்கள் சிவக்க, திணறும் கண்களைப் பார்ப்பதாலேயே என்னால் முழுமையாக படத்தோடு ஒன்றமுடிவதில்லை.

தோளோடு தோள் நடக்கையில், வலப்புறமாய் சாலையின் பக்கம் நடக்கும் காதலியிடம் பேசிக்கொண்டே, அனிச்சையாய் அவளை இடப்புறமாய் கொண்டுவந்து தான் வலப்புறம் சாலையின் பக்கமாய் இடம்பெயரும் காதலன், 30 விநாடிகள் வரும் ஒரு இடைவேளை விளம்பரத்தில் (ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல்) தந்த பேரன்பை படம் நிச்சயம் தரவில்லைதான்!

சற்றே அதிகமாயிருந்த என் எதிர்பார்ப்புகளைப் படம் பூர்த்தி செய்யவில்லையே தவிர உடன் வந்த என் நண்பருக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. ’குக்கூ’ நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய முயற்சிதான்!


பிச்சை புகும் டாஸ்மாக் தமிழன்

$
0
0

டாஸ்மாக்கில் மது அருந்துவதை நான் கௌரவக்குறைச்சலாக நினைப்பதில்லை எனினும் அதற்குரிய சகிப்புத்தன்மை என்னிடம் வற்றிவிட்டதால் அக்காரியத்தில் நான் ஈடுபடுவதில்லை. எனது மது அருந்தும் தேவை மிகக்குறைவே என்பதாலும் எனக்கு பிற மார்க்கங்களும் இருக்கின்ற‌மையால் டாஸ்மாக்கைத் தவிர்ப்பது எளிதாயிற்று. ஆயினும் சில நண்பர்களுக்காக எப்போதாவது டாஸ்மாக் செல்வதுண்டு. அவ்வமயங்களில் மது அருந்தும் குழுவிற்கு நடுவே அமர்ந்து டச்சர்களை மட்டும் மேய்ந்துகொண்டு மதுவை விடவும் சுவையான உரையாடல்களை ரசிக்கும் சைவபட்சிணியாக பெரும்பாலும் நான் மாறிவிடுவேன்.

ஒரு வேலை காரணமாக சென்ற மாதம் முழுதும் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு ஏறத்தாழ தினமும் சென்றுவர நேர்ந்தது. பெரும்பாலான மாலை நேரங்களில் நட்புக்காக அப்பகுதியின் ஏதேனும் ஒரு டாஸ்மாக் மதுக்கூடத்தில் வேடிக்கை மட்டும் பார்க்கும் சைவபட்சிணியாக ஓரிரு மணி நேரங்களை கழிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

(இந்தக்கட்டுரைக்கு அவசியமில்லாத இடைச்செருகல்: சென்னையின் ஆகக் கழிவான சாக்கடைக்கு ஒப்பான டாஸ்மாக் மதுக்கூடங்கள் வடபழனியிலிருந்து போரூர் வரையான ஆற்காடு சாலையில் அமைந்திருக்கின்றன. சென்னையின் சற்றே சுத்தமான, ஏற்கத்தக்க மதுக்கூடங்கள் அம்பத்தூர் எஸ்டேட் பகுதிகளில் அமைந்திருக்கின்றன.)


ஏற்கனவே அறிவேன் எனினும் அப்போதுதான் ஒரு விஷயம் என்னை மிகவும் உறுத்தத்துவங்கியது. ஒரு சாதாரண மனிதன் அருந்தும் அளவான குவார்ட்டர் மதுவின் விலை குறைந்த பட்சம் 70 ரூபாயாக உயர்ந்துவிட்டது. அதிக பட்ச விலைக்கு வரம்பில்லை என்பதால் சராசரியாக சற்றே 'நானொரு சராசரி மனிதன்'என நினைப்பவனின் பாட்டில் விலை சுமார் 120 ரூபாயாக இருக்கிறது. இவர்கள் ஓரிரு மணி நேரங்களை மகிழ்வாகக் கழிக்க‌ தனியாகவோ, நண்பர்களுடனோ மதுக்கூடங்களுக்கு வருகின்றனர். அநியாயம் என்ற சொல்லுக்கு பொருள் தரும் விலையில் இவர்களுக்கு டச்சர்கள் விற்கப்படுகின்றன. அதைப் பற்றி கவலை கொள்ளவோ, அறச்சீற்றம் கொள்ளவோ யாருக்கும் நேரமில்லை. நமது பேச்சும் இவர்களைப் பற்றியதில்லை. ஒரு நாளைக்கு 70 அல்லது 80 ரூபாய் மட்டுமே டாஸ்மாக்கில் செலவழிக்க இயலக்கூடிய நபர்களைப் பற்றியது.

இவர்களுக்கான குறைந்த பட்ச தேவையான 100 எம்மெல் தண்ணீர் பாக்கெட் விலை ரூ. 6, குடித்து முடித்ததும் கசக்கி எறியும் பிளாஸ்டிக் தம்ளர் விலை ரூ. 6, ஒரு மாங்காய்த்துண்டுகள் கவர் ரூ. 6! (அந்தக்கவரில் இரண்டு சிட்டிகை மிளகாய்ப்பொடி தூவிய ஒரு பல்லின் அளவே இருக்கும் மாங்காய் துண்டுகளின் எண்ணிக்கை 6 இடம்பெற்றிருக்கும். அதாவது ஒரு சராசரி மாங்காயிலிருந்து சுமார் முப்பது பிளாஸ்டிக் கவர்களை உருவாக்கலாம்).

70 ரூபாய் கொடுத்து பாட்டிலை வாங்கும் சகோதரனுக்கு இந்த 18 ரூபாய் பெரும் பிரச்சினையாய் இருக்கிறது. முன்பு அதிகம் பார்த்திராத அந்த நிகழ்வுகள் கடந்த சில வருடங்களில் பெருமளவு அதிகரித்திருப்பதைக் கண்கூடாக காணமுடிந்தது.

நன்கு உடையணிந்த, பார்க்க சராசரியாக தோன்றக்கூடிய, பெரும்பாலும் படித்திருக்கவும் கூடிய அந்த மனிதர்கள் மதுக்கூடத்துக்கு வெளியே நிச்சயம் செய்யத்தயங்கும் அந்தக் காரியத்தை செய்யத்துவங்கியிருக்கிறார்கள். வெளியே இவர்களுக்கு யாராவது 5 ரூபாய் பிச்சையாக தந்தால் இவர்களில் பெரும்பாலோனர் எப்படி வினையாற்றுவார்கள்? நிச்சயம் அவமானத்தால் கோபம் கொண்டு நம்மை அடிக்கக்கூட வரலாம். ஆனால் உள்ளே, பிறர் குடித்துவிட்டு வைத்துவிட்டுப்போன டம்ளர்களையும், பாதி தண்ணீர் பாக்கெட்டுகளையும் தயக்கமின்றி எடுத்துக்கொள்கிறார்கள். எந்தக்கூச்சமுமின்றி தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கும் வசதிகொண்ட நபர்களிடம் அரை டம்ளர் தண்ணீருக்காக‌ கையேந்திவிடுகிறார்கள். மேலும் அந்த மாங்காய் கவரை வாங்கும் சக்தி கொண்டவர்களிடம் ஒரே ஒரு பல் மாங்காயைக் கேட்டோ, ஃபிங்கர் பிரையின் ஒரு துண்டுக்காகவோ, ஒரே ஒரு வீல் சிப்ஸுக்கோ தயக்கமின்றி பிச்சை கேட்கிறார்கள். அது எப்படி அவர்களுக்குப் போதும் என்பது வேறு ஆராய்ச்சிக்குரிய விஷயம். ஆனால், எப்போது இப்படி பிச்சை கேட்கும் தயக்கத்தை விட்டொழித்தார்கள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம். இரண்டு மணி நேரம் நீங்கள் ஒரு சேரில் அமர்ந்திருந்தால் குறைந்தது 4 நபர்களையாவது இப்படிப் பார்க்கமுடிகிறது.

இவர்களின் சுயமரியாதையும், தன்மானமும் எங்கே போனது? 18 ரூபாய்க்காக இவற்றை விற்கத்துவங்கி ஒரு புதிய இருண்ட காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் டாஸ்மாக் தமிழனுக்கான வெளிச்சம் எது? ஒரு பொருளையும், புத்துணர்வையும், சிந்தனையையும் சமைப்ப‌து மிகக்கடினமான காரியம். ஒரு சிற்பத்தைப்போல சிறுகச்சிறுக உருவாவது அது. ஆனால் அழிப்பது மிக எளிது, நொடிகளில் அது நிகழ்ந்துவிடும். பெரியாரின் 100 ஆண்டுகள் கடும் உழைப்பால் தூசு தட்டப்பட்ட தமிழனின் சுயமரியாதை, வெறும் 18 ரூபாய்க்கு முன்னால் அழிந்து கொண்டிருக்கிறது. வேறென்ன சொல்ல.?


மேக்னம் ஸ்பெஷல்

$
0
0

”நான் எப்போ புத்தகம் வாசிக்க ஆரம்பிச்சேன்னா?.. ஆறாப்பு படிக்கச்சொல்லோ..” என்று நான் கொசுவத்தியை சுழற்ற ஆரம்பித்தால் நீங்கள் “ஆவ்வ்வ்..” என்று கொட்டாவி விட ஆரம்பிப்பீர்கள்! அதனால் நேரடியாக விஷயத்துக்குப் போய்விடலாம்!

வாசிப்பின் துவக்கம் காமிக்ஸ், காமிக்ஸைத் தாண்டிய இலக்கிய உலகம் இலக்கு என்பதாய் நண்பர்கள் கருத்துப் பகிர்வதுண்டு. இலக்கை விட அதற்காக மேற்கொள்ளும் பயணம் இன்னும் அலாதியானது என்பது என் கருத்து. எழுத்தில் கதை சொல்வதைப்போல, மூவியில் கதை சொல்வதைப் போல ஓவியத்தில் கதை சொல்வது என்பது அத்தனை எளிதான காரியமா என்ன? பிரமிப்பு! பகிரவொண்ணா ரசனை அது!


2012ல் மறு எழுச்சியை வெற்றிகரமாக நிகழ்த்திய லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் இதழ்கள், தற்போது பெரிய அளவுகளில், உயர்தரக் காகிதங்களில், பளபளக்கும் வண்ணக் கதைகளை மாதம் குறைந்தது இரண்டு இதழ்கள், மூன்று கதைகள் என்ற அளவில் எடுத்துச்சென்று ராஜநடை நடந்து கொண்டிருக்கிறது! சிறார் கதைகள் மட்டுமின்றி, ஆக்‌ஷன், அட்வென்ச்சர் போன்ற எவர்கிரீன் வகைகளோடு கிராஃபிக் நாவல்கள் எனும் ஆழ்ந்த வாழ்வியல் கதைகள் என உலக காமிக்ஸ் இலக்கியத்தின் சிறப்பான ஒரு பகுதி இப்போது தமிழுக்கும் சாத்தியமாகிக்கொண்டிருக்கிறது. வாசிப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல வேண்டுமே என்ற நற்கவலை கொண்டவர்கள், இளமையில் விட்டுவந்த காமிக்ஸ் நாட்களை மீண்டும் வாழ்ந்து பார்க்க ஆசை துளிர்ப்பவர்கள், ஓவிய ரசத்தை அள்ளிப் பருகும் பேராவல் கொண்டவர்கள் என அனைவரும் சற்றே செவி சாயுங்கள்! இந்த ஆண்டும் மாதம் தவறா திட்டமிடலுடன் கூடிய ஒரு கதைக்குவியலை லயன் காமிக்ஸ் வழங்கிக்கொண்டிருக்கிறது/வழங்கவிருக்கிறது. அதோடு இது லயன் காமிக்ஸின் 30வது ஆண்டுக் கொண்டாட்டமும் கூட! சுமார் 900+ பக்கங்களுடன் ஒரு மெகா இதழகாக லயனின் 30வது ஆண்டு சிறப்பிதழ், ‘தி லயன் மேக்னம் ஸ்பெஷல்’ வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது. உங்கள் பிரதிக்கு முந்துங்கள்!


2014க்கான வழக்கமான மாதாந்திர இதழ்கள், சூப்பர் 6 எனப்படும் 2014க்கான சிறப்பிதழ்கள், 2014க்கான கிராஃபிக் நாவல்கள் எனும் பிரிவுகளில் சந்தாக்களை மொத்தமாகவோ, தங்கள் தேர்வுக்கேற்பவோ செலுத்தலாம். வங்கி விபரங்கள், சந்தா விலைகள், இதழ்களைப் பற்றிய அறிவிப்புகள் போன்ற தகவல்களுக்கு லயன் காமிக்ஸின்....


.....ஆகியவற்றுக்குச் செல்லுங்கள். ஏற்கனவே வெளியான இதழ்களை ஆன்லைன் ஸ்டோரிலும் வாங்கலாம். விரைவில் எதிர்பார்க்கலாம் எனினும் இன்னும் கடைகள் தோறும் காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும் நிலை ஏற்படவில்லை. சந்தாதாரராகிவிடுவதே இப்போதைக்கு சிறப்பு எனும் நிலைமை நிலவுகிறது. அதுவே, லயன் காமிக்ஸை ஸ்திரப்படுத்தவும் உதவும் எனும் போது நாம் ஒவ்வொருவரும் அதைச் செய்யவேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! 

.

தெனாலிராமன்

$
0
0

ஒரு பெரிய கிரியேடிவ் ஐகானுடைய பெயரைத் தாங்கிய இந்தப் படத்துக்கும், கிரியேடிவிடிக்கும் இடைப்பட்ட‌ தூரம் பல கிலோமீட்டர்கள். தெனாலியின் சமயோஜித குணத்துக்கு சான்றாக இந்தப் படத்தில் வரும் நிகழ்வுகள் எல்லாமே குறைந்தபட்சம் 60 வருடங்கள் பழைய நாம் நன்கறிந்த அதே செவிவழிக் கதைகள்தாம். முதலில் 30 வருடங்கள் பழமையான என்று எழுத நினைத்தேன். இதை எழுதும் போது உடனிருந்த‌ என் தந்தையிடம் கேட்டபோது, 'இது நான் சின்னப் புள்ளையா இருக்கும்போதே படிச்ச‌துதான்'என்று அவர் சொன்னதால் 60 ஆண்டுகள் என்று எழுதியிருக்கிறேன். அவ்வளவு கற்பனை வறட்சி!


பசியிலிருக்கும் வடிவேலு எனும் யானைக்கு இது சோளப்பொறி கூட அல்ல! எழுதி, இயக்கிய இயக்குனரை என்ன செய்தால் தகும்? அவ்வளவு மோசமான திரைக்கதை. கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் என புலிகேசியின் வார்ப்பாகவே பல விஷயங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தெனாலியின் உடல்மொழி கூட! ஆனால் புலிகேசிக்கும், தெனாலிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட மன்னனாகவும், பொறுப்பில்லாத காமெடி மன்னனாகவும் இருவேறாக இருக்கிறது இதன் மன்னர் பாத்திரம். ஒரு முக்கியக் காட்சியில் மக்கள் நலன் காண மாறுவேடத்தில் நகர்வலம் வருகையில் கூட அது சீரியஸாக இருக்கவேண்டுமா, நகைச்சுவையாக இருக்கவேண்டுமா எனப்புரியாது சிதைக்கப்பட்டிருக்கிறது.

யானைக்குள் பானை, கசையடிப் பரிசு என அதே பழைய நிகழ்வுகள் தாண்டி எதையும் நிகழ்த்தாமல் எளிதாக‌ பரிதாபமாக தோற்கிறது தெனாலியின் பாத்திரம். தற்காலிக மன்னர் பொறுப்பு தெனாலிராமனுக்குக் கிடைத்த பின்பும் மக்களே கொதிப்படைந்து சீன ஆதிக்கத்தை எதிர்ப்பதாகவே, அதாவது கடைகளையும், சீன மக்களையும் தாக்குவதாகவே சிறுபிள்ளைத்தனமாக முடிகிறது. அமைச்சர்கள், சீன வியாபாரிகள், போராளிகள், ராதாரவியின் கதாபாத்திரம், ஹீரோயின் என எந்த ஒரு கேரக்டரும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏதேனும் நிகழ்வுகள் இருந்தாலல்லவா பாதிப்பு எனும் பேச்சு எழுவதற்கு?

இவ்வளவு வீக்கான படத்தை வடிவேலு மட்டுமே தன்னந்தனியாக‌ தாங்குகிறார். பாராட்ட வடிவேலுவைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை, இந்தப் படத்தில்!

வாயை மூடி பேசவும்

$
0
0

பனிமலை எனும் ஒரு அழகிய பச்சைப்பசேல் கிராமத்தில் திடுமென அதிசயமாய் ஒரு நோய் பரவுகிறது. ஒரு வகையான வைரஸ் தொற்றால் குரலை இழக்கிறார்கள் மக்கள். எதையெடுத்துக்கொண்டாலும் அதைப்பற்றி தெரியுமோ, தெரியாதோ வண்டி வண்டியாய், வாய்கிழியப் பேசத் தயாராகும் நம் மக்களையும், மீடியாவையும் சட்டையர் செய்ய மிக வசதியான சாட்டையைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன். கூடுதலாக ஒரு ஃபேண்டஸி வகை புதுமையாகவும் அது அமைந்துவிட்டது இன்னும் சிறப்பு.

ஆனால் முழு வீச்சில் விளாசியிருக்கிறாரா என்று கேட்டால் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. இடைவேளை வரை கலகலப்பும், விறுவிறுப்புமாக நகர்கிறது படம். அதன் பின்பு அரசின் பேச்சுத் தடை வந்ததும்தான் சிக்கல். நீண்ட நேரம் வசனமேயில்லாத காட்சிகளை நகர்த்துவதில் ஏற்படும் தகராறு, நம்மைக் கொட்டாவி விட வைக்கிறது. ஆனாலும் சமாளித்துக் கொண்டுசென்று கொஞ்சம் செண்டிமெண்டோடு அழகாக படத்தை முடித்துவைக்கிறார். இப்படி சிம்பிளாக சொல்லி முடித்துவிடமுடியாமல் படத்தில் ரசிக்கத்தகுந்த, பாராட்டப்படவேண்டிய காட்சிகள் நிறையவே உள்ளனதான்.


அதிலும் படம் முழுக்க அடிக்கடி குறுக்கிடும் ப்ரைம் டிவி செய்திகள் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. குறிப்பாக, அந்த வாசிப்பாளர், ‘பரபரப்பு’ ஒன்று மட்டுமே தேவை எனும் நோக்கத்தோடு செயல்படுவது அழகு. சப்பை மேட்டரிலெல்லாம் கூட இருக்கும் கடுகு போன்ற தகவல்களை நுண்ணோக்கி கொண்டு மலையாக காண, பேச முயற்சிக்கிறார். ந்யூக்ளியர் ஸ்டார் பூமேஷ் பிடிகொடுக்காமல் தரும் பேட்டி முடிவில் அவரை நோண்டி விட்டு, பஞ்ச் டயலாக் பேச வைத்து, அதில் உள்நோக்கம் கற்பித்து மகிழ்வெதெல்லாம் நம் மீடியாக்களின் லட்சணத்தைப் பறைசாற்றும் காட்சிகள். முக்கியச் செய்திகள் என அடியில் ரோல் ஆகிக்கொண்டிருக்கும் செய்தியின் தமிழ் வார்த்தைகளைக் கூட அவ்வப்போது பிழையாகச் செய்திருப்பது இயக்குனரின் உன்னிப்பான ரசனையைக் காட்டுகிறது. கலகலப்பான துல்ஷாரின் கதாபாத்திரமும், அதற்கு நேர்மாறான நஸ்ரியாவின் பாத்திரமும் சிறப்பு. அதிலும் சோகமும், வெறுமையும் நிறைந்திருக்க அளந்து, அளந்து பேசும் நஸ்ரியாவை ரசிக்க முடிகிறது. அவர் தன் குணத்தை மாற்றிக்கொண்டு, காதலனை நீங்கி, துல்ஷாரை கைபிடிப்பார் என்பது தெரிந்த விஷயம்தான் எனினும் அது நிகழ்கையில் நமக்கும் ஒரு மகிழ்ச்சி, நிறைவு. 

போலவே, துல்ஷாரின் நண்பர் கதாபாத்திரம். எவ்வளவு முன்னெச்சரிக்கையாய் இருப்பினும் பெண்களிடம் பேச முயன்று அவர் உளறுவது அழகு. அதை இன்னும் இரண்டு பெண்களுக்காவது கொண்டுசென்று ரசிக்கவிடாமல், இரண்டாவது பெண்ணையே அவரது காதலியாக்கிவிடுவது ஒரு சின்ன ஏமாற்றம்தான். பூமேஷ் ரசிகர்களுக்கும், குடிகார சங்கத்துக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் சற்றே கலகலப்பூட்டுகின்றன. ஆனால் வாய்பேசாதோர் பள்ளிதான் பெரிதாய் கவரவில்லை. போலவே, பாண்டியராஜனின் சுகாதார அமைச்சர் பாத்திரமும். பத்திரிகையாளர்களுக்கு விருந்தாக அமையும் காரெக்டராக அது உருவாக்கப்பட்டிருந்தாலும், பயத்தினாலோ என்னவோ, அந்த காரெக்டரை இயக்குனர் முழுமையாக பயன்படுத்தவேயில்லை. பாடல்கள் இல்லை எனினும் கூட ஒரு தீம் சாங்கை வைத்துக்கொண்டு ரெண்டு ரெண்டு வரியாகவாவது போடும் மேனியா இங்கு நிறையவே இருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் ஒரு டூயட்டைத் தவிர்த்து அநாயசமாக பாடல்களைத் தவிர்த்திருக்கிறார்கள். இனி, தமிழ் சினிமாவில் பாடல்கள் எனும் இம்சை குறையத்துவங்கும் என்ற நம்பிக்கை சற்றே துளிர்விடுகிறது.

புதிய அலை இயக்குனர்களில் ஏறக்குறைய முன்னவர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி? அவரது முதல் படம். அவர்களின் இரண்டாம் படத்துக்கான எதிர்பார்ப்பு நம்மிடையே அதிகமாகவே இருந்துவருகிறது. இதோ இரண்டாவது படத்தையும் மற்றவர்களை முந்திக்கொண்டு முதலாவதாக தந்திருக்கிறார் பாலாஜி. சிக்ஸர் இல்லையென்றாலும், தேவையான தருணத்தில் ஒரு அழகான பவுண்டரி!
.
Viewing all 108 articles
Browse latest View live