Quantcast
Channel: புலம்பல்கள்!
Viewing all 108 articles
Browse latest View live

ஸ்ரீதேவியின் ’இங்கிலிஷ்’

$
0
0
அனுபவம் தரும் அழகே தனி!

ஒவ்வொரு வேலையிலும் ஆர்வத்தால், பயிற்சியால், திறனால் வரும் சிறப்போடு கூடுதலாக பல்லாண்டுகளாக வாய்க்கும் அனுபவம் தரும் முழுமையை பளிச்சென உணரமுடியும்.

மெல்லிய உணர்வுகளைக் காட்சிப்படுத்த முயலும் ஒரு சினிமா, இங்க்லிஷ், விங்க்லிஷ். ஸ்ரீதேவி இல்லாவிட்டால் இந்தப்படம் மிகச்சாதாரணமாக ஆகியிருக்கக்கூடும். அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு காரெக்டருக்கு, ஒரு திறன்வாய்ந்த, அனுபவமிக்க ஒரு நடிகை எப்படி உயிரூட்டம் தந்திருக்கிறார் என்பதற்கு உதாரணம் ’சஷி’.


என்ன ஒரே ஸ்ரீதேவி புராணமாகயிருக்கிறது. பார்ட்டி 40ஐத் தாண்டிருக்கும் போலயேனு சந்தேகப்படாதீங்க.. மீ கௌதமி பார்ட்டி! அண்ணன்மார்களின் காலத்தைச்சேர்ந்தவர் எனினும் ஸ்ரீதேவி என்றால் ஒரு தனி ப்ரியம்தான். அவரது வீச்சு அப்படி. விருதுநகரிலிருந்து கிளம்பி நமக்காக, வடக்கை வென்றவர் அல்லவா? சிவப்பு ரோஜாக்களில் வெட்கப்பட்ட ஸ்ரீதேவியைப் பற்றி மூன்று மணி நேரம் மூச்சுவிடாமல் சொல்லப்பட்ட கதைகளை கேட்டிருக்கிறேன். ஸ்ரீதேவியைப்போலவே அவரது குரலும் தனித்துவமானது.

சஷியை ரசிக்க, அவரது மெல்லிய கோபத்தை, ஏக்கத்தை, உணர்வுகளைப் புரிந்துகொள்ள நாம் ஸ்ரீதேவியின் ரசிகராக இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை, 40 வயதைத் தாண்டியிருக்கவேண்டிய அவசியமுமில்லை.

ஆங்கில அறியாமையால் கிடைக்கும் கணவர், குழந்தைகளின் சிறு சீண்டல்கள், திடீரென தனியே அமெரிக்கா செல்லவேண்டிய சூழல், அதனால ஆங்கிலத்துக்கான அதிகரிக்கும் திடீர் தேவை, தேவை சிறிதானாலும் அவள் மனதுக்குள் பூதாகரமாக நிற்கும் அந்த அவமானம். ஆங்கிலம் கற்கிறாள். மனநிறைவு அடைகிறாள். இறுதியில் கணவர் முன்னால் நிகழ்த்தவேண்டிய உரைக்கான வாய்ப்பு கிடைக்கையில், அதிரடியாக அமெரிக்கன் அக்ஸெண்டில் ஆங்கிலத்தில் பேசி பரபரப்பாக்கவில்லை. திக்கித் திக்கிப் பேசினாலும், தன்னம்பிக்கைச் சிதறாமல், எண்ணியதை எடுத்தியம்பி அனைவர் மனதையும் கொள்ளைகொள்கிறார். படம் நெடுகவே இயல்பு அதன் தன்மையை மீறவில்லை.

நியூயார்க் சென்றயிடத்தில் ஹோட்டலில் உணவை ஆர்டர் செய்யமுடியாமல் கலங்கும் இடத்திலும், லட்டு செய்யவே பிறந்தவள் என பாராட்டும் கணவனில் குரலில் இருக்கும் எள்ளலில் காயப்படும் இடத்திலும், இறுதியில் இறுதி வகுப்புக்குச் செல்லமுடியாத ஏக்கத்திலும், படமெங்கிலும் சஷியின் உணர்வுகளை நமக்கும் ஏற்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதேவி.

படம் முடிகையில், சஷியோடு ஆங்கிலம் கற்க வரும் பிரஞ்சுத் தோழனின் மனநிலையில்தான் நாமும் இருக்கிறோம்.

பி.கு:

அஜித் நடித்து எனக்கு ஒரு படம் ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது எனில் அது இதுவாகத்தான் இருக்கும். நடிப்புக்காக அல்ல, அவரது ஸ்க்ரீன் பிரஸன்ஸுக்காக.. சால்ட்&பெப்பர் கெட்டப்பில் அஜித் அவ்வளவு பாந்தம். ஒரு லெஜண்ட்ரி நடிகைக்குப் பக்கத்தில் இயல்பாக பொருந்திப் போகவேண்டுமெனில், அது சற்று நேரமேயாயினும் கூட ஒரு தனித்திறன் வேண்டும். அது அவருக்கு இருக்கிறது.

.

மாற்றான்லு

$
0
0
மாற்றானின் தெலுங்கு வெர்ஷன் ‘பிரதர்ஸ்’ பார்த்ததால தலைப்புல ஒரு லு எக்ஸ்ட்ரா.. ஹிஹி!   அதாவது நான் இன்னும் வேலை விஷயமாய் தெலுகு தேசத்திலேயே சிக்கிக்கொண்டிருக்கிறேன் என்பது இதன் உட்பொதிந்திருக்கும் சேதி! சரி, படத்தைப் பற்றிப்பார்ப்போம்..

சூர்யாவிடம் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஆனா அது என்னன்னுதான் எனக்கும் புரியவில்லை. நிறைய வெரைட்டி காண்பிக்க மனிதர் மெனக்கெடுகிறார். ஆனால் அதுவே ரிவர்ஸாகி, நமக்கு ஏற்படுற ஃபீலிங்க்ஸ் என்னவோ ரொம்ப மொனாடனஸா இருக்கு. எந்த காரெக்டர்ல அவரைப் பாத்தாலும் சஞ்சய் ராமசாமி மாதிரியே ஒரு ராயல்+கேனை ஃபீல்தான் வருது. அவர் சரியில்லையா? அல்லது அவரை நம்ப டைரக்டர்ஸ்ங்கதான் சரியா பயன்படுத்தறதில்லையானு கொழப்பமாவே இருக்கு. மேலும் அவர் இந்த ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ ஸ்டைல்லயே வசனம் பேசறதைக் குறைச்சுக்கிறது நல்லது. நடிப்பை விட உழைப்பு சமயங்களில் பிரமிக்கவைக்கும். தசாவதாரம் கமல், எந்திரன் ரஜினி மாதிரி. சூர்யாவின் உழைப்பும் அத்தகையதுதான். அதற்காகவேனும் பாராட்டத்தான் வேண்டும். மேலும், சில ஸோலோ காட்சிகளில், ஆக்டிவா, ஜிவ்வுனு இருக்கிறார். லாஜிகல் ஆக்‌ஷன் படங்கள்ல ஜொலிப்பார்னு தோணுது. கிடைக்கணுமே. பாப்போம்.

கேவி.ஆனந்த்+சுபா கூட்டணி ஓரளவு நல்ல பொழுதுபோக்கைத் தரும்னு நம்பலாம், என்ன இந்த வாட்டி ஜஸ்ட் மிஸ்ஸு. செம்ம மொக்கை போட்டுருக்காங்க. சுபாவின் நாவல்கள் படிக்கிறப்போ படம் பாக்குற அனுபவத்தைத் தரும். இந்தப்படம் அப்படியே ரிவர்ஸ். நாவல்ல மட்டுமே படிக்கமுடியக்கூடிய கண்டெண்ட்ஸ் படத்தில் நிறைய. முடியலை.. அதுவும் இவர் ஃபாரின் போய் ‘எனர்ஜியானின்’ பின்னணியை கண்டுபுடிக்கிறாரு, கண்டுபுடிக்கிறாரு (அதுவும் எப்பிடி? ஒவ்வொரு ஆளா விசாரிச்சிகினே இருக்காரு, கூட சின்மயி.. ஸாரி காஜல்) படம் முடியுற வரை கண்டுபுடிச்சிகினே இருக்காரு. கதைதான் இப்படி ஜவ்வு மிட்டாய்னு பாத்தா, அதெல்லாம் என்ன பிஸாத்துனு.. மட்டமான ஆக்‌ஷன் கோரியோகிராஃபி, மட்டமான மியூஸிக், மட்டமான காஸ்ட்யூம்னு எல்லோரும் கூட்டு சேர்ந்து கும்மியிருக்காங்க. முன்னாடில்லாம் வில்லன்கள், ஹீரோ போற காருக்கு ரெண்டு சைட்லயும் வெடிக்கிறா மாதிரி கரெக்டா வெடிகுண்டு போடுவாங்க. இப்போ ராக்கெட் லாஞ்சர் வரைக்கும் முன்னேறியிருக்கோம். மிஸைல்ஸ் கரெக்டா சைட்லயே விழுந்து வெடிக்குது. என்ன பண்றது? காஜல் அகர்வாலுக்கு காஸ்ட்யூம் டிஸைன் பண்ணியவரை கூப்பிட்டு வைச்சு மண்டையிலயே கொட்டலாம். இவ்வளவு அழகான ஹீரோயினையும் எப்படிய்யா கஷ்டப்பட்டு இப்படி அசிங்கப்படுத்துனேன்னு.
எல்லாத்துக்கு முக்கியமா ஒண்ணு. மற்றவங்களுக்கு எப்படியோ தெரியாது, எனக்கு இந்த டிவின்ஸ் லாஜிக் பிடிக்கவே இல்லை. ஒட்டிய ரெட்டைனா அது எவ்ளோ காம்ளிகேஷன். இவங்க ரெண்டு பேரும் ஏதோ விலாவுல சூயிங்கம் வைச்சு ஒட்டினா மாதிரி இருக்காங்க. அதுலயும் அவங்க இஷ்டத்துக்கு, ஒரு நேரம் நெருக்கமா ஒட்டிகிட்டிருக்காங்க, இன்னொரு நேரம் அரையடி, ஒரு அடினு முடிஞ்சவரைக்கும் விலகிக்கிறாங்க. எங்க சூயிங்கம் பிச்சிக்குமோனு நமக்கு அப்பப்போ ஒரு பயம் இருந்துகிட்டேயிருக்கு. இந்த அழகுல ஒருத்தருக்கு இதயமே இல்லையாம். இன்னொருத்தருக்கும் சேர்த்து ஒரு இதயம்தான் வேலை செய்யுதாம். ப்ளட் சர்குலேஷன்லாம் இந்த சூயிங்கம் வழியாத்தானாம். அதுலயும் இதயமில்லாதவர் தெம்பா எக்ஸர்ஸைஸ் பண்ணி, சிக்ஸ் பேக்ல வேற இருக்காரு. என்னவோ போங்க! டெக்னிகல் வளர்ச்சியையும், சூர்யாவின் உழைப்பையும் கூட மெச்ச மனம் வரவில்லை நமக்கு, இந்த லாஜிக் பிரச்சினையில்.

ஒருவரைப் பிரிந்த பின் இன்னொருவர் கொள்ளும் வேதனை போன்ற சில இடங்களில் சூர்யா மனம் கவர்கிறார். ஆனால் அதற்குக் கூட நேரம் கொடுக்காமல், இயக்குனர்தான் ஜெனிடிக்ஸ், இரட்டை, பிரிவு, காதல், அப்பா, ஆராய்ச்சி, பசுமாடு, எனெர்ஜியான், ராக்கெட் லாஞ்சர்னு எல்லாவற்றையுமே ’ஜஸ்ட் லைக் தட்’ டா ஹேண்டில் பண்ணியிருக்கிறார். 

மொத்தத்தில் மாற்றான்.. ஏமாத்றான்!

ரசிகன் : ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்

$
0
0

“டார்ச் வெளிச்சத்துல தெரியுதா? நல்லாப் பாத்துக்கங்க, இதான் சூரியன்”
ஒவ்வொரு துறையிலும் உச்சத்தை தொட்டவர்கள் என்றாலே ஸ்பெஷல்தான். அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு, வியக்கவைக்கும் திறன் இவையெல்லாம் அவர்களிடம் இருக்கும். ஆனால் இவையெல்லாவற்றிலும் கூட, அனாயசம் என்று ஒரு குணம் இருக்கிறது. அது, அரிதானது. அதையும் கொண்ட ஒருவன், கலைஞனாகவும் இருந்துவிட்டால்.. ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். அவர்களுடைய படைப்புகளில் மூழ்கலாம், திளைக்கலாம்.

சஸ்பென்ஸ் திரில்லர் எனும் ஒரே ஒரு ஜானர். உலகம் தவிர்க்க இயலா வாழ்வியல், தத்துவம், வரலாற்றைப் பேசும் படங்களோடு திரில்லர் படங்களையும் உட்காரவைக்கமுடியுமா? அனாயசமாக முடியும் என்று சிம்மாசனம் போட்டுத் தன் படங்களை அமரவைத்தவர் ஹிட்ச்காக் (Alfred Hitchcock). விஷயம் ஜானரில் மட்டுமே அல்ல. ஹிட்ச்காக்கின் திரைமொழி, ‘கதை சொல்லும் அழகு’ என்பது வியக்கவைப்பது. இப்படி மூன்று வார்த்தைகளில் எப்படிச் சொல்வது அவரது திரைமொழியை? “நான் ஒருத்தியைக் காதலிக்கிறேன்” என்று உங்களிடம் நான் சொன்னால், அந்த ஒருத்தியின் மீதான என் காதலையும், அதன் பரப்பையும் எப்படி உங்களால் உணர்ந்துகொள்ளமுடியும்?

1922ல் தனது 22வது வயதில், சினிமா ஒரு பேசக்கற்காத குழந்தையாக இருந்தபோதே இங்கிலாந்தில் தன் பணியைத்துவங்கிய ஹிட்ச்காக், பின்னர் ஹாலிவுட்டிலும் 1972 வரை கோலோச்சியவர். கதை சொல்லும் பாங்கு மட்டுமல்லாது சினிமாவையே வரையறுத்த, அதற்குத் தவிர்க்க இயலாத பங்களிப்புகளைச் செய்த மேதைகளின் வரிசையிலும் அவருக்கு ஒரு கம்பீரமான இடமுண்டு. சினிமா அதுவரை பார்த்திராத காட்சியமைப்புகள், பிரம்மாண்டம், நுட்பங்கள் என பலவற்றையும் கற்றுத்தந்தவர். பட்டுக்கத்தரிப்பதைப்போல ஒரு திரைக்கதை எங்கு துவங்கவேண்டும், எங்கு நிறைவடையவேண்டும் என்பதற்கான பாடம் இவரது படங்கள் ஒவ்வொன்றும்.

இவரது பல படங்கள் சினிமா வரலாற்றின் தலைசிறந்த படங்களின் வரிசையில் முன்னணியில் இருக்கின்றன. பல படங்கள் தேசிய பொக்கிஷமாக அமெரிக்க அரசால் பாதுகாக்கப்படுகின்றன. தலைசிறந்த இயக்குநர்கள் பலரின் ஆதர்சமாக, அவர்களை பாதித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். திரில்லர் எனும் ஒரே ஜானர் எனினும் படங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடையவை.

எனக்கு அவரது எல்லாப் படங்களுமே ரொம்பப்பிடிக்கும் என்றாலும் பர்சனல் டாப் 10 என்று கேட்டால், இப்படிச்சொல்வேன்.
Rope
Rear Window
North by Northwest
Psycho
Vertigo
The Birds
Rebecca
Dial M for Murder
I Confess
The Man who Knew too much

...ஆகவே, ’எல்லோரும் ஒரு படத்தைக்கூட விடாம ஹிட்ச்காக்கின் எல்லாப் படங்களையும் பார்த்துடுங்க, நானும் மிச்சம் வைச்சிருக்கிற படங்களைப் பார்க்கப்போறேன்’ என்று சொல்வதைத்தவிர வேறொன்றும் சொல்வதற்கு இல்லை. அப்படியே நீங்களும் ஏற்கனவே ஹிட்ச்காக் பைத்தியமாக இருந்தால் உங்களுடைய டாப் 10ஐயும் சொல்லி விட்டுப்போங்கள்.

இன்னும் வாசிக்க: http://en.wikipedia.org/wiki/Alfred_Hitchcock

தலைவலிக்கு என்னிடம் ஒரு சிறந்த மருத்துவம் இருக்கிறது. தலையைச் சீவி விடுவதே அது.                                                                                    -ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்
.

ஸ்கைஃபால் -SKYFALL

$
0
0
பியர்ஸ் பிராஸ்னன் காலத்திய ஜேம்ஸ்பாண்ட் ரசிகன் நான் என்ற போதிலும் காலத்திற்கேற்ப கதைப்பாங்கிலும், ஸ்டைலிலும் நிறைய மாற்றங்களைத் தாங்கி வந்திருக்கும் ஜேம்ஸின் இன்றைய டேனியல் கிரெய்க்தான் அந்தப் பாத்திரத்துக்கு மிகப்பொருத்தமாகயிருக்கிறார் என்பது என் எண்ணம். பிராஸ்னன் ஒரு அழகான ஜோம்ஸ்பாண்ட் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அது மட்டும் போதுமா? எல்லோராலும் இன்றும் ஏற்றுக்கொள்ளப்படும் ஷான் கானரி ரொம்பவும் சினிமாடிக்கா இருக்குற மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங். ஒரு வேளை படங்கள் ரொம்ப பழசாயிட்டதால் எனக்கு அப்படித் தோன்றுகிறதோ என்னவோ? 

ரோஜர் மூரும் அப்படியே. அதுவும் இந்தியாவில் பெரும்பகுதி கதை நடக்கும் படமான ‘ஆக்டோபஸி’, ஜேம்ஸ் படங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றதாகும். ஆனால் அதுவே இப்போ பார்த்தால் நிறையவே டுபாகூர்தனமாக இருப்பது தெரிகிறது. பொதுவாகவே இந்த சீரிஸே ஒரு பெரிய டுபாகூர் சீரிஸ்தான் என்பதால் தனித்தனியே அது பெரிய டுபாகூரா இல்லை, இது பெரிய டுபாகூரா என்று ஆராய்ச்சி பண்ணாமல், ஜஸ்ட் என்ஜாய் பண்ணிவிட்டுப்போவதுதான் நல்லது. 

கூர்மையான நீல நிறக் கண்கள், கம்பீரம், உடற்கட்டு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகம் என கிரேய்க்தான் என்னோட பெஸ்ட் ஜேம்ஸ்பாண்ட்! அதுவும் காஸினோ ராயலில் சும்மா பரபரன்னு பத்திக்குமே ஒரு சேஸிங்!! ஆனா இவர் வந்த நேரமோ என்னவோ, ஜேம்ஸ் கேரக்டருக்கு கொஞ்சம் ரியாலிடியை கொடுக்கிறேன் பேர்வழினு ஜேம்ஸ் யூஸ் பண்ற வித்தியாசமான கருவிகளைப் பிடுங்கிக்கிட்டாங்க. சில இடங்கள்ல தோத்துப்போறாரு, வில்லன்கள்கிட்ட மாட்டிக்கிறாரு, உதை வாங்குறாரு, படக்கூடாத இடத்துல அடிபடுது. யாரு இதையெல்லாம் கேட்டா? அழுக்குப் படாம ஆக்‌ஷன், அட்வென்ச்சர்னு பண்ணிட்டுப் போக வேண்டியதுதானே.? ஜேம்ஸுக்கு என்ன ரியாலிடி?

ஸ்கைஃபால்! 

பாண்ட் சினிமாவுக்கு அறிமுகமாகி 50வது ஆண்டில் வெளியாகும் 23வது படம்.

எப்படி, எதுக்குன்னெல்லாம் கேட்கப்பிடாது.. அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிப்போய் இருந்தது எனக்கு. அந்த எதிர்பார்ப்புக்கு இது ரொம்பவே ஏமாற்றம்தான். வில்லனாகப்பட்டவர் ஜேம்ஸைப் போலவே திறமையான Mi6ன் (முன்னாள்) உளவாளி, அவரது அதிருப்தி மற்றும் அவரது டார்கெட் M என்றெல்லாம் களத்தை செமையாய் ரெடி செய்த பின்பும் படம் சொதப்பிடுச்சு. ஓபனிங் சேஸிங்கைத் தவிர்த்து, படம் பூரா சவசவ. பத்தும் பத்தாததுக்கு அத்துவானக் காட்டுல மொக்கை கிளைமாக்ஸுன்னு கொஞ்சம் கஷ்டமாப் போயிடுச்சு. இன்னும் நிறையச்சொல்லலாம். ஆனா பூரா நெகடிவாத்தான் இருக்கும். ஒரு படத்துக்காகவெல்லாம் ஜேம்ஸைப் பற்றி அப்படியெல்லாம் அவதூறு பரப்பக்கூடாது.. வாங்க, ஒழுங்கா அடுத்த படத்துக்காக வெயிட் பண்ணுவோம், ஓகே.?

இப்போதைக்கு இந்த சேஸைப் பார்த்து கொஞ்சம் மனசைத் தேத்திக்குங்க.. http://www.youtube.com/watch?v=m5M5R2pcPJ0

.

துப்பாக்கி

$
0
0
மு.கு: கீழ்வரும் விமர்சனத்திலும் ’படம் நல்லாருக்கு, மீஜிக் சரியில்லை’ங்கிற அதே பல்லவிதான் மீண்டும் பாடப்பட்டிருக்கிறது. ஆகவே புதிதாக எதையும் எதிர்பார்க்கவேண்டாம்.

 நீ....ண்ட நாட்களுக்குப்பிறகு விஜயிடமிருந்து விறுவிறுப்பான ஒரு படம். அதிலும் படத்தை விட விஜய் இன்னும் நன்றாக இருக்கிறார். லீவுக்கு வந்த இடத்தில் போலீஸை நம்பாத ஒரு ராணுவ அதிகாரி, ஒரு பெரிய தீவிரவாத நெட்வொர்க்குக்கு எதிராக போராடும் கதைதான் துப்பாக்கி. வழக்கமான டுபாகூர் கதைதான் என்றாலும், விஜயகாந்த், அர்ஜுன் ரேஞ்சுக்கு டுபாகூர் என்றும் சொல்லிவிடமுடியாது.


அவற்றிலிருந்து இது எந்த வகையில் வேறு படுகிறது? எங்கெல்லாம் இந்த படம் சுவாரசியமாகிறது? விஜய்க்கும், அந்த கும்பலுக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்தும் தற்செயலான ஒரு சம்பவம். அதைத் தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகள், பின் நிகழப்போவதை கணித்து அதற்குத் தக்க திட்டமிடும் விஜய், விஜயை விடவும் ஷார்ப்பாக திட்டமிட்டு அவரை சில இடங்களில் முந்திவிடுகிற வில்லன் குழு, தனி ஆளாய் பிஸ்கோத்து காண்பிக்காமல் தீவிரவாத முயற்சிகளை தகர்க்க தனது பட்டாலியனைச் சேர்ந்த ராணுவ வீரர்களையே பயன்படுத்திக் கொள்வது என கிளைமாக்ஸ் (ஒண்டிக்கு ஒண்டி ஃபைட் கொஞ்சம் ஏமாற்றம்) வரைக்கும் மெயின் கதையில் நிறைய சுவாரசியம், திருப்பங்கள், விறுவிறுப்பு.

ஆனால், அதெப்படி ஒரு நல்ல படத்தை நல்லதாகவே விட்டுவைக்க முடியும்? கமர்ஷியல் ஐயிட்டங்கள் வேண்டாமா? காஜல், காதல், ஜெயராம், சத்யன் என வரும் சுமாரான கிளைக்கதைகள் படத்தின் நிறைய பகுதியை விழுங்குகின்றன. நகைச்சுவை இந்தப் படத்துக்கு தேவையிலை எனினும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அவை நன்றாக வந்திருக்கலாம். அதாவது பரவாயில்லை. பாடல்கள் என்று ஒரு மாஸ் வெப்பன்!! அவற்றை உருவாக்கிய ஹாரிஸைக்கூட மன்னிக்கலாம். ஆனால் அதையெல்லாம் சின்சியராக ஒன்று விடாமல் படத்திலும் வைத்து ரசிகர்களை சாவடித்த முருகதாஸை என்ன செய்யலாம்? இப்படியெல்லாம் கமர்ஷியல் ஐட்டங்களை வைத்து எவ்வளவு தடவை மண்ணைக் கவ்வினாலும் திருந்த மாட்டீர்களா ஐயா? இந்தப் படமே கூட எதற்காக இப்படி பிய்த்துக்கொண்டு ஓடுகிறது என வெளியே விசாரியுங்கள். முதலில் நல்ல திரைக்கதையையும், உங்களையும் நம்புங்கள் ஐயா. படம் மொக்கையாக இருந்தால் அதை சமாளிக்க கமர்ஷியல் ஐட்டங்களை வைத்து ஒப்பேத்துங்கள். ஆனால் நல்ல படங்களிலும் அவற்றைத் திணித்து கடுப்பேற்றாதீர்கள்.

பின்னணி இசை தந்த ஹாரிஸைத் திட்டாவிட்டால் இந்த விமர்சனம் எழுதிய எனக்கு விமோசனமே கிடைக்காது. ஹீரோயிஸ பில்டப் யாருக்குத்தான் பிடிக்காது.? ஒரு நடிகனுக்காக வலிந்து ஒருபில்டப் சீன் வைக்கப்படுவதுதான் கடுப்ஸே தவிர, ஒரு தகுதியான காரெக்டருக்கு பில்டப் சீன், அதுவும் ஒரு ஆக்‌ஷன் படத்தில் இருப்பது கூடுதல் அழகு. இந்தப் படத்தில் இடைவேளையின் போது அப்படி ஒரு அழகான, ஹீரோயிஸ பில்டப்புக்கான இடம். இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் கைகோர்த்துக்கொண்டு அமைத்த ஒரு காட்சி, அழகான கோணம், எக்ஸ்பிரஸிவான நடிகர்களின் முகபாவங்கள், ஷார்ப்பான வசனங்கள்.. ம்யூஸிக் எப்படி இருக்கவேண்டும்?... ஹாரிஸ் சொல்கிறார், டுடுடு டுட்டுடாய்ங், டுடுடு டுட்டுடாய்ங்.!!

".. James horner reinvented the romance for Jack & Rose .."- James cameron

-நீங்க எதையும், யாருக்காகவும் ரீஇன்வெண்டெல்லாம் பண்ணித்தொலைக்க வேண்டாம், ஆனா ஏதோ பாத்துப் போட்டுக்குடுங்க சாமீ..
.

கும்கி- விமர்சனம்

$
0
0
இந்த புதிய கதைக்களம் ஏனோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கச்சிதமான ஒரு கதை.

ஒரு பாரம்பரியமான மலைக்கிராமம். அவர்களின் அறுவடைக் காலத்தை சிதைத்து, உயிர்களை கொல்லும் கொம்பன் எனும் ஒற்றை மலை யானை. அரசு உதவாத நிலையில் அந்த பருவத்தை தனியார் கும்கி யானையின் உதவியுடன் அறுவடை செய்ய திட்டமிடுகிறார்கள் அவர்கள். வரவேண்டிய கும்கியின் வரவு தாமதப்பட தற்காலிகமாக‌ கும்கி யானை என்ற பெயரில் கோயில் விழாக்களில் பங்கேற்கும், சாதாரண ஒரு எருமையின் கனைப்புக்கும் கூட பயப்படும் ஒரு சாதுவான யானை கொண்டுவரப்படுகிறது. அதன் பாகன் பொம்மன் நட்புக்காக இப்படி தன் யானை மாணிக்கத்தோடு அங்கு வருகிறான். உண்மையான கும்கி வரும் சூழல் வந்தபின்பும் தானே அங்கு இருப்பேன் என்று அடம்பிடித்து தொடர்கிறான். காரணம் அங்கு அவனுக்கு ஏற்பட்ட காதல்.

கட்டுப்பாடுகளை மீறி அவன் காதல் வென்றதா, கொம்பனை மாணிக்கம் விரட்டியதா என்பதையெல்லாம் நீங்கள் வெள்ளித்திரையிலே கண்டுகொள்ளவும். இப்பல்லாம் முழுசா கதை சொன்னா 'ஸ்பாய்லர்'னு சொல்லி அடிக்க வர்றாங்கப்பா..

இவ்வளவு விறுவிறுப்பான, புதிய கதைக்கு எவ்வளவு அழகான லொகேஷன், அற்புதமான ஒளிப்பதிவு, விஷுவல்ஸ் இன்ன பிற அட்டகாசமான விஷயங்கள் இருந்தும் 'படம் பிரமாதமா?' என்று கேட்டால் லேசாக நெளியத்தான் வேண்டியிருக்கிறது. பல காட்சிகள் மெதுவாக ஊர்வது போல உணர்வு. காரணம் மிக எளிதானது. மாணிக்கம்‍‍‍- பொம்மனுக்கிடையேயான‌ உறவு, பொம்மன்- அவன் காதலிக்கிடையேயான உறவு, கிராமத்தின் பின்னணி போன்ற முக்கியமான‌ விஷயங்களில் அழுத்தமே இல்லை.

போதும் போதாமைக்கு பொறுமையைச் சோதிக்கும் தம்பி ராமையா, கொம்பனின் பி.ஆர்.ஓ போலவே அவ்வப்போது வந்து செயல்படும் காட்டிலாகா அதிகாரி, மைனா போலவே ஒரு அழகான கமர்ஷியல் கதைக்கு
இலக்கிய கிளைமாக்ஸ் வைப்பதற்காக கதைக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கும் பிரபு சாலமன் என்று திரைக்கதையில் மேலும் சில பிரச்சினைகள்.

மற்றபடி எவ்வளவு இம்சை பண்ணினாலும், நம்மாட்களிடம் பர்ஃபக்ஷனை எதிர்பார்ப்பதில் நான் ஒரு மனம் தளராத வேதாளம் என்பதால், என் எதிர்பார்ப்பை ஓர‌ங்கட்டிவிட்டு நீங்கள் படத்தைப் பார்க்கலாம். எல்லாவற்றையும் தாண்டி இந்தப் படம் பார்க்கவேண்டிய படமாகவே இருக்கிறது.

விக்ரம் பிரபுவுக்கு அவ்வளவு எளிதில் யாருக்கும் சிக்காத கம்பீரமான வாய்ப்பு முதல் படத்திலேயே. அவரால் முடிந்த அளவுக்கு செய்திருக்கிறார் எனலாம். இன்னும் பெட்டராக எதிர்பார்க்கிறோம் விக்ரம். இன்னொரு சின்னக் குறை. இதற்கு முன்பு எந்த தமிழ்ப் படத்துக்கும் வாய்க்காத ஒரு அருமையான காட்சி ஒன்று இதில்க.. யானைப்போர்! அதுவும் படத்தில் அதுவரை ஏற்படுத்தப்பட்டிருந்த எதிர்பார்ப்புக்கும், அதன் பின் வரும் கிளைமாக்ஸுக்கும் நியாயம் செய்யவேண்டிய காட்சி. அதகளம் பண்ணியிருக்கவேண்டிய காட்சி. ஏதோ அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை என்ற அளவே செய்திருக்கிறார்கள். சிஜி... இருந்தாலும் இந்திய சினிமாக்கள் பலவும் ஏற்கனவே நிரூபித்துவிட்ட விஷயம்தான். லட்டு மாதிரி சீன், பாருங்கடா எங்க ஒர்க்கைனு தலை நிமித்திக்க ஒரு வாய்ப்பு, செலவு பார்க்காமல், நேரம் பார்க்காமல் பொறுமையாக செய்திருக்கலாம்.. 'லைஃப் ஆஃப் பை' ரிச்சர்ட் பார்க்கரின் உறுமலுக்கு முன்னால் மாணிக்கம் பிளிறியிருக்க வேண்டாமா? சரி, விடுங்க.. நம்ப மாணிக்கத்துக்கு பட்ஜெட் பிரச்சினை!
.

Bonus:

நீதானே என் பொன் வசந்தம்

ஒரே லவ்வுதான், ஒரே முட்டை போண்டாதான். எத்தனை தடவைன்னாலும் பார்க்கலாம், தின்னலாம். ஆனா, அதில பிரச்சினை இல்லாம இருக்கணும்.

இவ்வளவு நாளான பிறகும், அவ்வளவு லைவ்லியான விண்ணைத்தாண்டி வருவாயாவின் பல காட்சிகள் இன்னும் மனதை வருடுகின்றன. காரணம் உணர்வுகள் காட்சியான விதம். தமிழ்ல சொன்னா கெமிஸ்ட்ரி. அது இருந்துச்சு அதில். வெஜ் போண்டா நல்லால்லைனா கூட அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு உள்ள தள்ளிடலாம். முட்டைன்னா நாறிப்போகும்! சமந்தாவே அதைப் பண்ணித் தந்து, இளையராஜா சட்னி வைச்சாக்கூட அது ஆவுறதில்ல.. அவ்வளவுதான் சொல்லுவேன், ஆமா!
.

துப்பாக்கி - சிறுகதை

$
0
0
நான் அன்று தாம்பரம் ஏழாவது பாயிண்டில் நின்றுகொண்டிருந்தேன். முழுவதும் லோட் செய்யப்பட்டிருந்த பிஸ்டல் இடுப்பில் அதன் உறையில் உறங்கிக்கொண்டிருந்தது. சக்திவாய்ந்த டார்ச் லைட் ஒன்று என் கையில் இருந்தது. கையில் வாட்ச் இல்லாததால் செல்போனை எடுத்து நேரத்தைப் பார்த்தேன். மணி 10.50. இன்னும் பத்து நிமிடங்களில் கிளம்பிவிடலாம். 

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இதே பாயிண்டில்தான் ட்யூட்டி. ட்ராக்குக்கு அருகே புதிய ட்ராக் வேலைக்காக போடப்பட்டிருந்த இரும்புத் தளவாடங்கள் தொடர்ச்சியாக திருடு போய்க்கொண்டிருந்தன. அதோடு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதே பகுதியில் ஒரு கொலையும் வேறு நடந்திருந்தது. அதுவும் கள்ளத்துப்பாக்கியால் சுடப்பட்டு அந்தக் கொலை நிகழ்ந்திருந்தது. அதனால் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி இந்த விஷயத்தில் அதிக தீவிரம் காண்பித்து இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பாதுகாப்பு போடப்பட்டதிலிருந்து திருட்டு என்னவோ நிகழவில்லை. ஆயினும் யாரையும் பிடிக்கமுடியவில்லை. எந்த ஒரு அப்நார்மல் நடமாட்டமும் எங்கள் கண்ணில் படவில்லை.

கிருஷ்ணமூர்த்தி சிலரைப் போல விஷயத்தை ஆறப்போட்டு என்ன நடந்தால் நமக்கென்னவென்று நழுவுகிற ஆளில்லை. இந்தப் பிரச்சினையை சமாளிக்க புதிதாக ரெக்ரூட் ஆகியிருந்த எங்கள் டீமிலிருந்து நன்கு பயிற்சிபெற்ற துடிப்பான 4 பேர்களைக் கொண்டு ஒரு சிறிய டீமை உருவாக்கியிருந்தார். ஆனால் அவர் எந்த அளவுக்கு பிரச்சினையில் தீவிரம் காண்பிக்கிறாரோ அந்த அளவுக்கு எங்களுடைய பாதுகாப்பு குறித்தும் கவலைப்படுபவர். அதற்காகவே இந்த இடத்துக்கு பிஸ்டல், லத்தி போன்றவையே போதுமானவைதான் எனினும் சில அலுவலக சிரமங்களுக்கிடையேயும் ஸ்பெஷல் வெப்பன்ஸும் கூட இரவுப்பணிக்கு ஏற்பாடு செய்திருந்தார். 

ஆறாவது பாயிண்டிலிருந்த ராஜுவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கிருஷ்ணமூர்த்தி முதல் நாள் பேசுகையில், ‘பாய்ஸ், இதெல்லாம் பயன்படுத்துறதுக்கு இல்ல, எமர்ஜென்ஸிக்குதான். முக்கியமா அக்யூஸ்ட்ஸால உங்களுக்கு எந்த பிரச்னையும் வந்துடக்கூடாதுன்னுதான். வெப்பன்ஸ் ஹெவியா இருந்தா மெண்டலி உங்களை நெருங்கப் பயப்படுவாங்க. ஆனா அதுவே அவங்களை பிடிக்கமுடியாம போறதுக்கும் காரணமாயிடும். அதையும் மீறி யாரையாவது ட்ரேஸ் பண்ணமுடியுதா பாருங்க. கடந்த வருஷத்துல சென்னை லிமிட்டுக்குள்ள நிறைய கேஸ்ல கள்ளத்துப்பாக்கி புக்காயிருக்கு. ரொம்ப அலர்ட்டா இருங்க.’ என்று எச்சரித்திருந்தார். 

ராஜுவை நெருங்கியிருந்தேன். அவனது தோளில் இருபது புல்லட்டுகள் கொண்ட மேகஸின் லோட் செய்யப்பட்டிருந்த இன்ஸாஸ் ரைபிள் தொங்கிக்கொண்டிருந்தது. 

ட்ரைனிங்கில் இன்ஸாஸ் எல்எம்ஜியில் கோல்டு மெடல் வாங்கியவன் நான். அரை கிமீக்கு அப்பால் உள்ள டார்கெட்டையும் துல்லியமாக தாக்கக்கூடியது இன்ஸாஸ். எங்களிடம் முதல் இரண்டு நாட்கள் இருந்த துறுதுறுப்பு, அப்புறம் மெல்லக் குறைய ஆரம்பித்திருந்தது. தினமும் வருவதும், கையெழுத்திட்டு இந்த துப்பாக்கிகளைப் பெறுவதும், மீண்டும் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு கிளம்புவதுமாக கொஞ்சம் சலிப்பாகிவிட்டிருந்தது என்னை. சமயங்களில் இந்த துப்பாக்கி நமக்கு பாதுகாப்புக்காக இருக்கிறதா? இல்லை, அவற்றின் பாதுகாப்புக்காக நாம் இருக்கிறோமா? உறையிலிருந்த பிஸ்டலை விடுவித்து கையிலெடுத்தேன். ராஜூவை நெருங்கியிருந்தேன்.

“கிளம்பலாமா ராஜூ.?”

“சும்மா ஸ்டேஷன் டூட்டி பார்க்குற மாதிரி ஆயிடும் போலயிருக்கே.. ஒண்ணும் சிக்க மாட்டேங்குதே?”

“அதத்தான் நானும் ஃபீல் பண்ணிகிட்டே வந்தேன்..” சிரித்தேன். ஒன்றாக ஸ்டேஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

“இந்த மூணு மாசத்துலயே தெரிஞ்சிபோச்சி. ஏன் சீனியர்ஸெல்லாம் இப்படியிருக்காங்கன்னு.. இப்படியே வருசக்கணக்கில் போனா எப்படி ஃபிட்னஸ் மெயிண்டெயின் பண்றதுக்கு ஆர்வம் இருக்கும்.? இதையும் மீறி ஒண்ணு ரெண்டு பேர் கடமையேனு இன்னும் ஃபிட்டா இருக்காங்க பார்க்கிறியா.. செண்ட்ரல்ல சந்திரமோகன்னு ஒருத்தர் பார்த்திருக்கியா? அவருக்கு 50 வயசாம். ஆளு பாத்தியா.. எப்பிடி இருக்கார்னு..”

“அதெல்லாம் டூட்டியைத் தாண்டி பர்சனலா ஒரு ஆர்வம் இருந்தாத்தான் பண்ணமுடியும்..” கையிலிருந்த பிஸ்டலின் மேகஸினை விடுவித்து அந்த இருட்டிலும் புல்லட்டுகளைப் பார்த்துவிட்டு மீண்டும் லோட் செய்து உறையில் போட்டேன். 

“ஒண்ணு பண்ணலாம் ராஜு. நாளைக்கு நாம மஃப்டியில் இங்க சுத்துவோமா? கிருஷ்ணமூர்த்தி சார் இதெல்லாம் சொன்னா கேப்பாரான்னு தெரியலையே.. மஃப்டின்னா கண்டிப்பா ஏதாவது மாட்டும்னு நினைக்கிறேன்..” அவனுடைய இன்ஸாஸை எடுத்து வ்யூ ஃபைண்டரில் தூரத்தில் தெரிந்த ஸ்டேஷனைப் பார்த்தேன்.

“சொல்லிப்பாப்போம்.”

அப்போதுதான் எங்களுக்கு இடதுபுறமாக கடைசி ட்ராக்கைத் தாண்டி இருந்த புதர்களில் ஒரு சலசலப்பை கவனித்தேன். 

ராஜுவைத் தோளில் தொட்ட விநாடிக்குள் அவனும் அதை உள்வாங்கியிருந்தான். இருவரின் உடல் முழுதும் ஒரு அவசர அலர்டுக்குள் விழ, ராஜு ஒரு புல்லட்டைப்போல என்னைக் கடந்து பாய்ந்தான். முதல் ட்ராக்கை ஒரு பந்தைப்போல தாண்டி ஓடினான். அடுத்த சில விநாடிகளில் இருவரும் கடைசி ட்ராக்கை நெருங்கியிருந்தோம். எங்களது சலசலப்பும், டார்ச்சின் ஒளி வெள்ளமும் அதற்குள்ளாக இரண்டு பேரை புதரிலிருந்து கிளம்பி வலப்புறமாய் ஓடவைத்திருந்தது. அவர்களுக்கும் எங்களுக்கும் இடையேயான தூரம் 150 மீட்டர்களுக்குள்ளாகத்தான் இருக்கும். ராஜுவின் வேகத்துக்கு முன்னால் அடுத்த சில நிமிடங்களில் இரண்டு பேரும் கோழிக்குஞ்சுகளைப்போல எங்கள் கைகளில் சிக்கிவிடுவார்கள். அலர்ட்டாகியபின்னர் இந்த டார்ச்சை அணைக்கவிரும்பவில்லை நான். அவர்கள் தப்பிவிடும் ஒரு சிறுவாய்ப்பையும் நான் தரவிரும்பவில்லை. அப்போதுதான் கவனித்தேன், இரண்டாவதாக ஓடிக்கொண்டிருந்தவன் ஓடிக்கொண்டே ஒரு விநாடி திரும்பி எங்களைக் கவனித்தான். தூரத்தையும், சிக்கலின் வீரியத்தையும் அளவிடுவதற்கான முயற்சி. சரியாக அப்போது அவன் கையிலிருந்த துப்பாக்கி வெடித்தது. 

இதை நான் நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை, ராஜுவும். அந்த ஒலியையும், வெளிச்சத்தையும் நான் தவறவிடவேயில்லை. சூழலை மனம் முழுதும் உள்வாங்கிக் கொள்வதற்குள்ளாக புல்லட் ராஜுவை வலது தொடையில் தாக்க, அவன் ட்ராக் ஜல்லிக்கற்களுக்குள் புரண்டு விழுந்தான். அவனை நெருங்கி நிலைமையை விநாடிகளுக்குள் புரிந்துகொள்வதற்குள், ராஜு ரத்தவெள்ளத்திலும் என்னைப்பார்த்து,

“கோல்ட், பெரிய ரிஸ்க்.. அடுத்த புல்லட் வர்றதுக்குள்ள முந்திக்குங்க..”

மறைந்துகொள்ள இடமில்லாமல் ராஜுவோடே கற்களில் விழுந்தேன். அனிச்சையாய் பிஸ்டலை எடுத்த வலதுகையை நிறுத்தி ராஜுவின் இன்ஸாஸை எடுத்தேன். பிஸ்டல் ரேஞ்சைக் கடந்துவிட்டார்கள். முகத்தில் பலத்த சோர்வும், வியர்வையும் பொங்கும் நிலையிலும் ராஜு டார்ச் வெளிச்சத்தை ஓடுபவர்களை நோக்கிப் பாய்ச்சினான்.

க்ளீன் ஷாட்ஸ். டிரிக்கரிலிருந்து போதுமான விநாடிகளுக்கு என் விரல்கள் விலகவேயில்லை. துப்பாக்கி வைத்திருந்தவன் விசையினால் உந்தப்பட்டவன் போல தெறித்துவிழுந்தான். மூன்று புல்லட்டுகள். ஒன்று கூட குறி தப்பியிருக்காது. தலையின் கொஞ்சப் பகுதியாவது அவன் உடலில் மிஞ்சியிருந்தால் ஆச்சரியம்தான். விநாடிகளுக்குள்ளாக என் மனம் ஆசுவாசத்தையும், பொறுமையையும் கடைபிடித்ததில் துப்பாக்கி சற்றே கீழிறங்க முன்னதாக ஓடிக்கொண்டிருந்தவன் இடுப்பில் ஒரே ஒரு புல்லட்டை வாங்கிக்கொண்டு சரிந்தான்.

பலப்பல உணர்வுகள் உந்தித்தள்ள படபடப்பாக உணர்ந்தேன். கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேனோ?

வாக்கி டாக்கியில் நான் தகவல் சொல்வதற்குள்ளாகவே, எழுந்த துப்பாக்கி ஒலியினால் ஸ்டேஷனிலிருந்து குழு ஓடி வரத்துவங்கியிருந்தது. அடுத்த அரைமணி நேரத்துக்குப் பின்னர் சூழல் கட்டுக்குள் வந்தபிறகுதான் ஒரு செய்தி என் காதுக்கு வந்தது. இருநூறு மீட்டர்களுக்கு முன்பாக ஒரு இளம்பெண் வன்புணர்வுக்கு ஆளாகி, கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்திருந்தாள்.

என் கைகளில் இன்னும் லேசாக கதகதப்புடன் இருந்த இன்ஸாஸைப் பார்த்தேன். என் புல்லட்டுகள் தவறு செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

.

பிரளயம்

$
0
0

பயமும், துடிப்பும் உச்சத்திலிருக்க கையில் குழந்தையை வைத்துக்கொண்டு வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். அருகே, என் மனைவி தரையில் விழுந்துகிடந்தாள்.

எங்கும் மரண ஓலம்.

இது கனவா? என்னால் சிந்திக்கவே முடியவில்லை. தெருவில் நிற்பது மட்டும் பாதுகாப்பான செயலா என்பதெல்லாம் எனக்கு உறைக்கவில்லை. அரை மணி நேரத்துக்கு முன்னால் வீடு குலுங்கிய போது செல்போனையும், பர்ஸையும் தூக்கிக்கொண்டு தெருவுக்கு ஓடிவந்தால் போதும், இந்த பூகம்பம் பணிந்து திரும்பிவிடும் என்றுதான் எண்ணியிருந்தேன் எல்லோரையும் போல.

இப்போது என் முன்னே என் வீடு இல்லை. ஒரு பிரம்மாண்டமான கான்க்ரீட் குப்பைதான் கிடந்தது. எந்தக்கட்டிடமும் சாய்ந்து விழமுடியாத ஒரு பகுதியாக தேடி ஒதுங்கி நின்றேன். திடும் திடுமென பேரொலிகள் தூரத்திலும், அருகிலும் கேட்டவண்ணமிருந்தன. தரையும் அமைதியாக இல்லை. ஒரு உலுக்கலில் கீழே விழுந்தேன். எந்த நேரமும் பெரும் பிளவுகள் தோன்றலாம், யாவற்றையும் விழுங்கிவிடலாம். இதுவரை பூகம்பம் என்பது சற்றே பரபரப்பையும், கதை பேச ஒரு சுவாரசியமாகவும்தான் இருந்து கொண்டிருந்திருக்கிறது. பூகம்பமும், சுனாமியும் ஜப்பானுக்கும், இந்தோனேஷியாவுக்கும் சொந்தமானது. நமக்கு அது ஒரு செய்தி மட்டுமே. திடுமென சூழல் திரிந்துவிடுகையில், எதைச்செய்வது, அடுத்து என்ன என்பதையே சிந்திக்க இயலாத அறியாமையில்தான் இருந்துகொண்டிருக்கிறோம். குடிக்கும் ஒரு குவளை நீருக்கு, இந்த உலகையே சகல உயிரினங்களோடு சேர்த்துக் குடித்துவிடும் சக்தியிருக்கிறது என்பதை மனம் எப்போதும் உணர்வதேயில்லை. தெருவிலிருந்த வீடுகள் அத்தனையும் தரைமட்டமாயிருந்தன. தெருவென்ன? கண்கள் காணும் தொலைவு வரை இருந்த எந்தக் கட்டிடங்களையுமே காணவில்லை. உள்ளிருந்த அத்தனை மனிதர்களையும், பொருட்களையும் விழுங்கிக்கொண்டு அதுவரை வாழிடமாக இருந்த கட்டிடங்கள் அனைத்தும் சமாதியாகியிருந்தன.

என் கட்டிடத்திலிருந்த ஓரிருவர் என்னருகே விழுந்துகிடந்திருந்தனர். சிலர் உள்ளே மாட்டிக்கொண்டுவிட்டவர்களை மீட்கும் முயற்சியில் இருந்ததைப்போல உணர்ந்தேன். எதுவுமே கண்களுக்குச் சரியாக புலப்படவில்லை. அவர்கள் அப்படிச் செல்வது அவர்களுக்கும் ஆபத்தாக முடியும் என்பதை கத்திச்சொல்ல நான் நினைத்தாலும் அதைச் சொல்லும் நிலையிலும் நான் இல்லை, அதை அவர்கள் கேட்கும் நிலையிலும் இல்லை.

செல்போன் வேலை செய்யவில்லை. எங்கள் தெருவிலிருந்தே வெளியே மீளமுடியாத நிலையில் சுற்றிலும் இடிபாடுகள். கண்களை மறைக்கும் புகை, தூசு மண்டலம், சூறைக்காற்று. எங்கே செல்வது? அரசாங்கம் ஏதும் மீட்புப்பணியில் ஈடுபடும். அதுவரை காத்திருக்கவா? அல்லது எங்கே செல்வது? வேளச்சேரியிலிருக்கும் நண்பன் வீட்டுக்கு நடந்தே போய்விடலாமா?
 
இந்தப் பேரழிவின் பிரம்மாண்டம் புத்தியில் உறைத்தது. இந்தத் தெரு மட்டும்தான் மூழ்கிப்போனதா? இந்தப் பகுதியேவா? இல்லை இந்த மொத்த சென்னையுமேவா? அரசினர், அதிகாரிகள், படையினர் அனைவருமே மூழ்கியிருப்பார்களா? ஆயினும் மத்திய அரசு உதவ ஓடிவருமல்லவா?

இது பூகம்பமா? பிரளயமா?

புழுதி மண்டலத்துக்குள் குழந்தையைக் காக்க என் சட்டையை கழற்றிப் பொத்திக்கொண்டு படுத்துக்கிடந்தேன். எத்தனை ஊர்களில் எத்தனை எத்தனை உறவுகள்? யாருக்கு என்ன ஆயிற்று? செல்போனை பார்த்துக்கொண்டிருந்தேன். தரை மீண்டும் குலுங்கியது. இது எப்போது முடிவுக்கு வரும்? அதன் பின் என்ன? அதுவரை என்ன? பக்கத்துத் தெருவுக்குப் போனால்? பக்கத்து மெயின்ரோட்டுக்குச் சென்றால்? அதுவரையிலாவது வழியை கண்டுபிடித்துப் போய்விட முடியுமா? மரணம் எனக்கும் அருகில்தான் நின்றுகொண்டிருக்கிறதா? சற்று அருகில் சரிந்த பில்டிங்கோடு சேர்ந்து வீழ்ந்த மரங்களைத் தவிர, தாக்குப் பிடித்து நின்று கொண்டிருந்த ஒன்றிரண்டு தென்னை மரங்களும் சரிந்துகொண்டிருந்தன. தரையில் படுத்துக்கிடப்பது ஓடும் வாகனத்தின் தளத்தில் படுத்திருப்பதைப்போல இருந்தது. எங்கிருந்தோ வந்த புழுதிப்படலம் ஒன்று எங்களை மூழ்கடித்தது. அதற்கு மேலும், இடிபாடுகளோ, வேறு பொருட்களோ வந்து எங்கள் மீது விழுந்தாலும் அதை உணர்ந்து விலகிச்செல்லக்கூட நேரமிருக்குமா தெரியவில்லை. 

பெரிய அச்சம் என்னை சூழ்ந்திருந்தது. எனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த மனைவி என்னவானாள் என்று பார்க்க பார்வையை திருப்பினேன். சற்று தொலைவில் இரண்டு, மூன்று பேர் குப்புற விழுந்துகிடந்தனர். அவர்களில் ஒருவராக அவளும் இருக்கலாம். இயற்கையின் பெரும் சக்திக்கு முன்னால் சட்டென நசுங்கி உயிர்துறக்கும் ஒரு எறும்பைப்போல என்னை உணர்ந்தேன்.

சற்று நேரத்தில் நில அதிர்வுகள் நின்றுபோயிருந்தன. பேய்க்காற்று சுழன்றடித்துக்கொண்டிருந்தது. மழை வரக்கூடும் என்பதாகவும் தோன்றியது. குழந்தையை மார்போடு சேர்த்து எனது சட்டைக்குள்ளாக அணைத்துப்பிடித்து குழந்தையின் மேல் பாரம் விழாமல் முடிந்தவரை குப்புறப் படுத்திருந்தேன். கைகளில் வலியெடுக்கத் துவங்கியிருந்தது. எங்கோ ஏதோ ஓலம் நிரந்தரமாக கேட்டுக்கொண்டேயிருந்தது. பின்புறமாகத் திரும்பி மனைவியை பெயரைச்சொல்லி சத்தமாக அழைத்தேன். புழுதி மூடிக்கிடந்த நபர்களிடம் அசைவு தெரிந்தது. அதில்தான் இருக்கிறாள். மெதுவாகத் தவழ்ந்தவாறே என்னருகில் வந்தாள். தலை, முகமெல்லாம் புழுதி அப்பியிருந்தது. முதலில் என் மார்போடிருந்த குழந்தையை தொட்டுப்பார்த்துக்கொண்டாள். கீச்சுக்குரலில் அழுதுகொண்டிருந்த குழந்தையை தேற்றுமுகமாய் ஏதேதோ சொன்னாள். அடி எதுவும் படவில்லையே என்பதை முனகலாய் என் காதோடு கேட்டாள். அவளது இரண்டு கைகளிலும் சிராய்ப்புகளில் ரத்தக்கசிவைக் கண்டேன். அவளையும் இன்னும் சற்று நேரம் படு என்பதாய் சைகை காட்டிவிட்டு, மீண்டும் குப்புறப் படுத்தேன்.

ஏற்கனவே மழை துவங்கியிருந்தது. இது ஆசுவாசமா? இன்னுமொரு பிரச்சினையா? ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடவேண்டும். செல்போனை மீண்டும் பார்த்தேன். அந்த ஐ போன், வேறெந்த உதவியையும் செய்யத்திறனிழந்து, தன் ஞாபகப்பகுதியிலிருந்த ஏராளமான பாடல்களை மட்டும் வேண்டுமானால் எனக்காக பாடிக்காண்பிக்கத் தயாராக இருந்தது. மழை வலுக்கத்துவங்க, குழந்தையை முடிந்தவரை சட்டைக்குள் பொதிந்துகொண்டு எழுந்தேன். என் மனைவியும் எழுந்தாள்.

மணித்துளிகள் உருண்டுகொண்டிருந்தன. பின்னர், இடிபாடுகளில் ஏறி தோராயமாக பிரதான சாலை நோக்கிச் சென்றோம். இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் இறந்து போயிருந்தனர். இன்னும் ஏராளமானோர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கக்கூடும். எந்த மீட்புப்பணியும் நாங்கள் சென்ற எந்த இடத்திலும் துவங்கியிருக்கவில்லை. மழை கோபத்தோடு கொட்டிக்கொண்டிருந்தது. சரிந்தும் சரியாமலிருந்த சாய்வான ஒரு சுவருக்குக் கீழே அடைக்கலமானோம்.

அரசு உதவி கிடைக்கும் வரை பிழைத்திருந்தால் போதும் என்பதாக மனைவியை ஆறுதல் செய்து, அவள் கைகளில் பிள்ளையைத் தந்து அவளை மழை படாத இடமாக, உட்புறமாக ஒரு கல்லில் உட்காரவைத்தேன். தரையில் உட்காரமுடியாதபடிக்கு எங்கள் காலடியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இந்நிகழ்வு துவங்கி பாதி நாளைக் கடந்திருந்தோம். மழையோடு இரவும் எங்களைச் சூழ்ந்திருந்தது. எனக்குப் பசி என்ற உணர்வே அற்றுப்போயிருந்தது. ஆனாலும் பசி எந்நேரமும் கொதித்தெழும் ஒரு நோய். இரவு உணவு? மனைவியையும், குழந்தையையும் பார்த்தேன். குழந்தை தாய்ப்பாலைக் குடிக்கும் வயதிலிருப்பது எவ்வளவு பெரிய ஆறுதல்? செல்போனில் நேரத்தைப் பார்த்தேன். செல்போனின் மின்சேமிப்புக் கூட இப்போது எவ்வளவு அவசியமானது? அதை அணைத்து பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தினேன். பர்ஸை எடுத்துத்திறந்தேன். சதசதவென நனைந்து போயிருந்தது. சில நூறு ரூபாய்கள். முக்கிய வங்கிகளின், பல்லாயிரம் மதிப்புள்ள டெபிட், மற்றும் கிரெடிட் அட்டைகள். அதையும் பத்திரப்படுத்தினேன். உள்ளுக்குள் சிரிக்கிறேனோ? எந்த பொருட்களுமே விற்பனைக்கு இல்லாத போது இந்த பணத்துக்கும், அட்டைகளுக்குமான அர்த்தமென்ன?

சட்டையை மீண்டும் பிழிந்து குழந்தைக்காக வைத்துக்கொண்டதில், வெறும் பனியனோடு மழையில் நின்றுகொண்டிருந்தேன். அவர்களை அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு எங்கு போவது? எதைத் தேடி என்று ஒரு முடிவும் இல்லாதவனாக நடக்கத்துவங்கினேன். நேற்று நான் பார்த்த இடமா இது?

இரவிலும் ஓயாத ஓலங்கள். சற்றுத் தொலைவிலிருந்த ஒரு கோயிலும் சரிந்து மண்ணொடு மடிந்திருந்தது. ஆனால் அந்தக்கோவிலைச் சுற்றியிருந்த வெட்டவெளி முழுதும் ஏராளமான மனிதர்கள் பெரும் திகைப்பில் நின்றுகொண்டிருந்தனர். பலரும் படுகாயங்களுடன் கிடைத்த இடங்களில் படுத்துக்கிடந்தனர். துணிகளை, பேப்பர்களை தலைக்குப் பிடித்தவாறு உட்கார்ந்திருந்தனர். மரங்களும், கட்டிடங்களும் ஒன்றும் மிச்சமில்லாத வகையில் இடிந்து, சரிந்து போய்விட்டனவா என்ன? வெளியுலகம் என்ன நிலையில்தானிருக்கிறது? நேற்று வரை உலகின் அடுத்த மூலையில் நடந்த விஷயங்களை அடுத்த நிமிசமே என்னிடம் கொண்டுவந்து கொட்டிய ஊடகங்கள் எங்கே? அவசியத்தைக் கூட அப்டேட் செய்துகொள்ள இயலாத சூழல் மூளையில் இறுக்கத்தை ஏற்படுத்தியது. உணவுப் பொட்டலங்களை வீசிடும் ஹெலிகாப்டர்களுக்குக் கூடவா வழியில்லை?

பசியோடு மீண்டும் மனைவி, பிள்ளை இருந்த இடத்துக்கே திரும்பினேன். அவர்களை மழையிலிருந்து காக்க ஒரு பெரிய பாலிதீன் தாளைத்தான் என்னால் கொண்டுபோக முடிந்தது. கற்களை அந்தச் சின்னக் கூட்டுக்குள் சேகரித்து அதன் மேல் பாலிதீனை விரித்து அவர்களைப் படுக்கவைத்தேன். நானும் அதற்குள் ஒண்டிக்கொண்டிருக்க இடமில்லாமல் வெளியே மழையில் அமர்ந்தேன். மனைவி, நெருக்கிக்கொண்டு அதற்குள் என்னையும் வந்துவிடுமாறு சைகை காட்டினாள். நேரம் என்ன? செல்போனை உயிர்ப்பிக்கவா? இந்தப் பேய் மழையில் அது நிரந்தரமாக உயிரை விட்டுவிடக்கூடும். யோசனையோடே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேனோ தெரியவில்லை.

மீண்டும் நான் எழுந்து உணவுக்காகவும், தங்குவதற்கு ஒரு இடத்தைத் தேடியும் கிளம்பினேன். அந்த இருளிலும், என் நினைவில் கடைகள் நிறைந்திருந்த மார்க்கெட் பகுதியை நோக்கித் தோராயமாக நடக்கத்துவங்கினேன். நிறைய இடிபாடுகளுக்கிடையே பயணித்ததில் சோர்வாக உணர்ந்தேன். அந்த இடத்தை நான் அடைந்தபோது அந்தப் பகுதி பெரும் வெள்ளப்பகுதியாக மாறியிருந்ததைக் கண்டேன். மனித நடமாட்டமே அங்கில்லை. ஏராளமான மரத்துண்டுகளும், ஓலைகளும் வெள்ளப்பகுதியில் சிக்கி அடைபட்டிருந்தன. இடுப்பளவு நீரில் இறங்கி இலக்கில்லாமல் போய்க்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில், மிகுந்த சிரமத்துக்குப் பின்னர் ஒரு பழக்கூடை அந்தச் சிக்கலுக்குள் ஒதுங்கிச் சிக்கிக்கொண்டிருந்ததைக் கவனித்து நெருங்கிச்சென்றேன். ஆச்சரியம்தான், அதில் சில ஆப்பிள் பழங்கள் கிடந்தன. ஆவலோடு அதை எடுத்துக்கொண்டு எங்கள் இருப்பிடத்தை நோக்கிக் கிளம்பினேன். வெள்ளப்பகுதியிலிருந்து மீண்டு, இடிபாடுகளுக்குள் ஏறி வந்த வழியே செல்லத்துவங்கினேன்.

சற்று தூரம் சென்றிருந்தேன். எதிரே இரண்டு நபர்கள் இடிபாடுகளுக்குள் எதையோ தேடிச்சலித்து நிமிர்ந்தவாறே என்னைப் பார்த்தனர். உடனேயே எழுந்து நின்று என்னை உற்று நோக்கினர். சாதாரணமாக நடந்துகொண்டிருந்த நான், ஏதோ விபரீதமாய் உறைக்க.. நின்றேன். அவர்களின் பார்வை என் கையிலிருந்த ஆப்பிள் பழங்களின் மீதே இருந்தது.

அவர்களில் ஒருவனின் கைகளில் ஒரு வலுவான மரத்தடி ஒன்று இருந்தது. வெளிச்சம் மிகக்குறைவாக இருந்த அந்தச் சூழலிலும் அந்தக் தடியில் ஏதோ ரத்தக்கறை போல தென்பட்டதை நான் கவனிக்கத்தவறவில்லை. அவர்கள் என்னை நெருங்கினார்கள். இதயம் படபடக்க நான் அமைதியாக நின்றுகொண்டிருந்தேன். ஒருவன் என் கைகளிலிருந்த பழங்களை எடுத்துக்கொண்டான். அவனது கண்கள் மின்னிக்கொண்டிருந்தன. பின்னர் இருவரும் இருளுக்குள் சென்று மறைந்தனர்.

எத்தனை நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. பின்னர், அதற்கு அடுத்தத் தெருவில் நுழைந்தபோது, அங்கிருந்த இடிபாடுகளுக்கிடையே துழாவினேன். ஒரு மின்னலின் வெளிச்சத்தில் பளபளத்த பலமான ஒரு இரும்புக்கம்பி கையில் சிக்கியது. அதை வெளியே உருவி எடுக்கத்துவங்கினேன்.

பசி வயிற்றில் ஒரு தீப்பிழம்பைப்போல கிளை பிரிந்து அரிக்கத் துவங்கியிருந்தது.

.

பாப்கார்ன் தின்பவர்கள்

$
0
0
புத்தக விழா

சென்னையின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்றான கோலாகலமான ஜனவரி புத்தகத்திருவிழாவைத் தவறவிடாமல் இந்த ஆண்டும் சென்று வந்தாயிற்று, நேற்று. பல இணைய நண்பர்களும் புலம்பிக்கொண்டிருப்பதைப் போலவே சென்ற சில ஆண்டுகளாக வாங்கப்பட்ட புத்தகங்களையே இன்னும் வாசித்து முடித்தபாடில்லை, மேலும் பொருளாதாரச் சிக்கல் எனினும் போகாமல் இருக்கவே முடியாது என்பதான விஷயம் இது. வழக்கம்போலவே எந்தப் புத்தகமும் வாங்கக்கூடாது, சும்மா வேடிக்கை மட்டுமே என்று தீர்மானம் செய்துகொண்டு போனாலும் அங்கு போனதும் வழக்கம் போலவே உள்ளுக்குள்ளிருக்கும் இலக்கிய வாசகன் முழித்துக்கொண்டு வழக்கம் போலவே நம் பர்ஸை பொத்தல் போடுவது இவ்வாண்டும் நடந்தது.

என் பிரியம், என் ஆதர்சம் என்றெல்லாம் டுபாகூர் விட்டுக்கொண்டிருந்தாலும் அந்த நான்கைந்து எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களில் படித்தவை என்று கணக்குப் பார்த்தால் கால் பாதம் கூட நனையாது. என்றைக்கு முழுகி முத்தெடுக்க?

ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்குவது சாத்தியமே இல்லாமல் போய்விட்டது, அவ்வளவு பிரமாண்டம், அவ்வளவு கூட்டம். குறைந்த பட்சமாய் சந்தைக்குள் ஒரு தெருவையும் விடாமல் ஸ்டால்களின் பெயரை மட்டும் வாசித்துக்கொண்டே சுற்றினேன். முடிவில் நாஞ்சில் நாடன், கிரா ஆகியோரது நான்கைந்து கட்டுரை மற்றும் சிறுகதைத் தொகுப்புகளையும், முத்து காமிக்ஸின் NBSயும் எடுத்துக்கொண்டு, மக்கள் வெள்ளத்தில் நீந்தி வெளிவருவதற்குள் 3 மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது. 

இந்த பாப்கார்னை கண்டுபிடித்தவனை என்ன செய்தால் தேவலைனு யோசிக்கணும். தெர்மோக்கோல் போல அது ஒரு பண்டம், அதையும் மெகா சைஸ் அட்டைப்பெட்டிகளில் வாங்கிக்கொண்டு ஏதோ பாப்கார்ன் தின்பதற்கென்றே பிறப்பு எடுத்தது போல சிலர் நடந்துகொள்வதைப் பார்க்கும் போது எரிச்சல் மண்டுகிறது. அந்தப் பெட்டிகளோடுதான் காட்சியரங்கத்துக்குள் நுழைகிறதே! (தியேட்டர்களிலும் இதே நிகழ்வுதான்! சமயங்களில் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு படம் முடியும் வரை சவுக்கு, சவுக்குனு இவர்கள் தரும் ஸ்பெஷல் எஃபெக்ட் ஒலியமைப்புடனேதான் முழு படத்தையும் பார்த்தாகவேண்டும்). தவிர கசாமுசாவென குழந்தைகள் கூட்டம்... என்னவோ போங்க!

இந்த முறை, அப்படியே சந்தைக்கு இடம் பார்த்தவர்களுக்கு ஏதாவது அவார்டு குடுத்தால் தேவலை. ஸ்டால்களுக்கான இடம் தாராளமாய் இருந்ததோ என்னவோ.. வாசல், பார்க்கிங், டிக்கெட் கவுண்டர் என பிற எல்லாவற்றிற்கும் அடுத்தவன் முதுகை இடித்துக்கொண்டே பயணிக்கவேண்டியிருந்தது. இதற்கு ஆங்கிலோ-இந்தியன் பள்ளியே சிறப்பு என எண்ணுகிறேன். பார்ப்போம் அடுத்தாண்டு!

************

பொங்கல் விடுமுறை

வழக்கம் போலவே குடும்பத்தோடு கொண்டாட்டம் என மகிழ்வாக கழிந்தாலும் வடக்குக்குளத்தில் தண்ணீர் பெருகாமலிருந்துவிட்டதால் ‘அயிரை’ மீன் துள்ளவில்லை. அது என் தனிப்பட்ட சோகம். இனி அடுத்தவருடம் வரை காத்திருக்கவேண்டும்! ட்ரிப்பின் ஹைலைட், குட்டி ஆதி (தம்பி மகன்) யின் அட்டகாசங்கள். 

“ஆஜ்ஜி, ஆஜ்ஜி.. பெர்பாவுக்கு இஞ்சின் குடுக்குணும்.. சீக்ரம் கொண்டாங்க.. நா புடிஜ்ஜிகிறேன். அழுனாலும் விடக்குடாது”

கல்யாணத்தைப் பற்றி நமக்கு ஏராளமான மாற்றுக்கருத்துகள் உண்டு. ஆனால் வாழ்க்கை இன்பத்துக்குள் துன்பத்தையும், அதற்குள் இதையும் பொதிந்தேதான் தருகிறது. இரண்டு வயதிலிருந்து 6 வயது வரை குழந்தைகள் தரும் மழலை இன்பத்துக்கு முன்னால் இன்னும் ரெண்டு கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு இன்னும் இரண்டு பெண்களை சமாளிக்கலாம்தான் போல! வேறு வாக்கியத்தில் சொல்லவேண்டுமானால் அந்தக் கொடுந்தவத்துக்கான குட்டி வரம் என்றும் கொள்ளலாம்!

சுபாவின் பாடு கொஞ்சம் திண்டாட்டமாக போய்விட்டது. பொம்மைகள், விளையாட்டு என எல்லாவற்றிலும் அவன் பிடிவாதத்துக்கு முன்னால் ஒரு வயது மூத்தவன் என்ற முறையில் இவனே எல்லாவற்றிலும் விட்டுக்கொடுக்கவேண்டியதாக இருக்கிறது. ஆயினும் அந்த மனம் இன்னும் வரவில்லை. தடுமாற்றம்தான். கோபமும், அழுகையுமாய் விட்டுக்கொடுத்தான். அதே நேரம் அவனைக் கண்டிக்கவும் விடவில்லை. அவனைக் கண்டித்தால் இவனுக்குக் கோபம் வருகிறது. ஒரு முறை அவன் அடித்துவிட்டதை தாங்கிக்கொண்டான். சரி, கொஞ்சம் பொறுப்போடு நடந்துகொள்கிறானா இருக்கும் என்று நினைத்தேன். பிறகு கேட்டபோது சீரியஸாகவே சொன்னான்,

“என்கிட்ட ஸ்பைடர்மேன் பவர் இருக்கு, அடிச்சா வலிக்காது”

சுத்தம்!

*************

விஸ்வரூபம்

கமல்ஹாஸன் கூட இவ்வளவு சிந்தித்திருப்பாரா தெரியவில்லை, அவ்வளவு சிந்தனை. அவர் மட்டும், ’பரவாயில்லை, என்ன பண்ணியிருக்கலாம்னு நீங்க நினைக்கிறீங்க? வந்து கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க..’ என்று சொல்லியிருந்தால் போச்சு, மனுஷன் உயிர் பிழைப்பது கஷ்டம்தான். ஏதாவது கருத்து சொல்லியே ஆகவேண்டும் என்பது போல அரிப்பு. அடக்கு, அடக்கு என அடக்கிக்கொள்கிறேன்! படம் வந்தபிறகு நேரமிருந்தால் மொத்தமாக பேசிக்கொள்வோம். அலுவலகப் பயணமாக சத்தீஸ்கர் செல்வதால் துவக்க நாட்களில் இங்கே இருக்கமாட்டேன் என நினைக்கிறேன். வந்துதான் பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் இந்தி விஸ்வரூபத்துக்கு விமர்சனம் போட்டால் போச்சு! அதை ஏன் விட்டுவைக்கணும்?

*************

எழுத்து

எப்போதாவது போனால் போகிறது என்று பழைய வாசகர்கள் (?), “என்னாச்சு, சிறுகதை இலக்கியத்தை தூக்கி நிறுத்திவிட்டுத்தான் மறுபேச்சுனு சபதம்லாம் எடுத்தாமாதிரி இருந்தது. இப்போ இங்கன பத்திக்கே வழியைக் காணோமே..” என்று குசலம் விசாரிக்கிறார்கள். உண்மையும் அதுதானே.. பத்தி எனும் எளிய வடிவமே நமக்கு தண்ணி காண்பிக்கையில், சிறுகதையையெல்லாம் எங்க தூக்கி, எங்க நிறுத்த.. முடிஞ்சா செய்யமாட்டோமா? சென்ற சில ஆண்டுகளில் தலைகீழாக மாறிப்போய்விட்ட பணிச்சூழல், பொருளாதாரச் சூழல்! தூரத்தில் மாற்றங்கள் கண்களில் தென்படுகின்றன. கிடைக்கும் பொழுதுகளில் எழுத்துப்பணியையும் தொடர்வதாக உத்தேசம். பிறகு, நீங்களும்தான் என்ன செய்வீர்கள், பாவம்!

விஸ்வரூப ட்விட்ஸ்

$
0
0
*
விஸ்வரூபம் மீதான தடை அவசியமற்ற ஒன்று. கண்டிக்கப்படவேண்டியது. -அமித் கன்னா
*
தணிக்கைக் குழுவின் சான்று பெற்ற ஒரு படத்தை மக்கள் பார்க்கவிடாமல் செய்யப்படுவது தவிர்க்கப்படவேண்டும். -மகேஷ் பட்
*
படத்தைப் பார்த்தபின்பு அவசியமெனில் அதை நிராகரிக்கும் முடிவை மக்கள்தான் எடுக்கவேண்டும், தனிப்பட்ட அமைப்புகள் அல்ல! -சேகர் கபூர்
*
சான்று பெற்ற ஒரு படத்தை தடைசெய்ததன் மூலம், தமிழக அரசு, CBFCயின் அவசியத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. -மனோஜ் பாஜ்பாய்
*
ஜனநாயகத்தின் மீதான வன்முறை இது. -தனுஜ் கர்க்
*
தமிழக அரசின் செயல்கண்டு அதிர்ந்துபோயிருக்கிறேன். -மதுர் பண்டர்கர்
*
தணிக்கைச்சான்று பெற்ற ஒரு படத்தைப் பார்க்காமலேயே எப்படி அது ஒரு இனத்துக்கு எதிரானது என்ற முடிவுக்கு வரமுடிகிறது சிலரால்? அவர்களுக்கு ஒரு மாநில அரசும் எப்படித் துணைபோகமுடியும்? -அனுராக்
*
தமிழ் சினிமாவை இருளுக்குள் தள்ளியிருக்கிறது தமிழக அரசு. -சித்தார்த்
*
CBFCஐ தமிழக அரசு நிராகரிக்கிறதா? அல்லது சட்டம் ஒழுங்கைக் கைக்கொள்ளும் திராணியில்லையா? -அனுபவ் ஸின்ஹா
*
இதை ஏற்கமுடியாது. இது ஒரு கலாச்சார வன்முறை. -பிரகாஷ் ராஜ்
*
அப்பட்டமான படைப்புச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் இது. என்ன மாதிரியான சுதந்திரம் நமக்கு இருக்கிறது? -மாதவன்

*****

@kanapraba: அரசின் தணிக்கைச் சான்றிதழே அங்கீகரித்த பின்னர் எதற்கு நீதிமன்றத் தடை, இஸ்லாமிய அமைப்புக்களின் வேண்டுகோளுக்கிணங்க 2 வார தடை என்று அரசாணை? அப்படியென்றால் வெத்துவேட்டு தணிக்கைக்குழுவையே கலைத்துவிடலாமே?
@writernaayon: விஸ்வரூபம், தீவிர வாதநோயால் முடங்கிக்கிடக்கிறது.
@iVenkadesh: மனைவி:என்னங்க படம் டைடில் போட்ட உடனே முடிஞ்சிடிச்சி. கணவன்:அது விஸ்வரூபம் எடிட் பண்ணின பிரிண்டாம். மனைவி:???
@NaughtyGann: நாத்திகனாய் இருப்பது எவ்வளவு கடினம் என்று விஸ்வரூபம் விஷயத்திலிருந்து புரிகிறதா?!
@Kaniyen: போற போக்கைப்பார்த்தா கமலே விஸ்வரூபம் படத்தை திருட்டு விசிடியில வெளியிட்டுடுவார் போல..
@cablesankar: நான் ஆந்திரா போயாவது விஸ்வருபம் படம் பார்த்தே தீருவேன்.
@Venkatgangulian: விஸ்வருபம் படத்தை தடை செய்ததை விட சில முஸ்லிம்கலின் வீர வெட்டி வசனம்களை தான் தாங்க முடியவில்லை.
@vnashankar: இன்னும் எவன் எவனெல்லாம் எதிர்ப்பு காட்டனுமோ இப்பயே க்யூல வந்து நில்லு... சும்மா வாரத்துக்கு ஒவ்வொருத்தனா வந்துகிட்டு...
@amalan_a: முதல்ல ஜாதி சங்கத்தையும், மத சங்கத்தையும் Ban பண்ணனும், இம்சப்பா..
@iDookudu: படத்த பாக்காம எந்த கருத்தும் சொல்ல முடியாது! முதல்ல படத்த வெளிவிடுங்கப்பா.
@tubelightbala: நல்லா பாருங்கய்யா.. கலைஞரு விஸ்வரூபம் நல்லாருக்குனு எதுவும் சொல்லிருக்காரானு.. தமிழக அரசு தடைனா டவுட்டா இருக்கு.
@meyrin1217: முஸ்லிம் இயக்கத்தலைவர்கள் விஸ்வரூபம் படம் பார்த்தார்களாம். அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் காட்சியா?
@itisprashanth: லாஸ் ஏஞ்சல்ஸ்-ல இருந்து திரும்பி வரவேண்டாம். அங்கேயே செட்டிலாகிடுங்க கமல் சார். இவனுகளுக்கு அலெக்ஸ்பாண்டியன் தான் லாயக்கு.
‏@iqbalselvan_ : என்னது விஸ்வரூபத்தை தடை பண்ணிட்டாங்களா ?! அப்பவே சொன்னேன் ஆப்கானிஸ்தான் வேண்டாம், அமஞ்சிகரை போதும்ன்னு !
‏@iVenpu: கொய்யால‌.. இனிமே எல்லா ப‌ய‌லுவ‌ங்க‌ளும் விக்ர‌ம‌ன் மாதிரி வில்ல‌னே இல்லாம‌ ல‌ல‌லா ல‌ல‌ல‌ ல‌லலான்னு ப‌ட‌ம் எடுங்க‌ய்யா. :)
@udanpirappe: நம்மூர் அமைப்புகளுக்கு காவிரி பிரச்சினைக்கும்… கரன்ட் பிரச்சினைக்கும் போராடத் தெரியாது… #சினிமா மட்டுமே குறி.
@rajarajan1975: முன்னாடி நம்ம கேப்டன் விஜயகாந்த் அழிச்ச தீவிரவாதிகள எல்லாம் புத்த மதத்தை சேர்ந்தவங்களா?
@alaipesi: எங்களை மோசமாக சித்தரிக்கிறார்கள்ன்னு மாமியார்கள் சங்கம் சீரியல்களுக்கு எதிராக ஏன் கண்டனம் தெரிவிக்கக்கூடாது...?
@iqbalselvan_: திரைப்படங்களை எதிர்ப்பதன் மூலம் மதவாதிகள் விளம்பரம் தேடுவதோடு, ஒட்டு மொத்த சமூகத்தை பிரதிப்பலிப்பதாக பம்மாத்துகின்றார்கள் ..

*******

விஸ்வரூபம் படம் குறித்து Twitter தளத்தில் பகிரப்பட்டிருந்த சில எண்ணங்களே மேலே தொகுக்கப்பட்டவை.

ஆந்திரா சென்று படம் பார்த்துவந்த கேபிள்சங்கரின் விமர்சனம் இது.

வேலை விஷயமாக சில நாட்களாக ராய்பூரிலிருக்கும் நான் முன்னதாக ஹிந்தி வெர்ஷன் பார்த்துவிடலாம் என்று மகிழ்ந்திருந்தேன். பேட் லக்! பிப்.1ல்தான் ஹிந்தி வெர்ஷன் ரிலீஸ் என்பது ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட விஷயமாம்.

படம் உண்மையில், இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் பின்னணி பேசப்படுவதன் மூலம் இஸ்லாத்துக்கு ஆதரவானதாகவும், பதிலாக அமெரிக்க ராணுவத்தை விமர்சிப்பதாகவும்தான் அமைந்திருக்கிறது. நியாயப்படி பார்த்தா அமெரிக்காதான் இந்தப்படத்தைத் தடைசெய்யவேண்டும் என்பதாக ஆந்திர, மலையாள தேசங்களுக்குள் ஊடுருவி விஸ்வரூபம் பார்த்துவந்த சில நண்பர்கள் கருத்துகள் பகிர்ந்தனர். அரசியல் பின்னணிகளுக்கு முன் தனிமனிதன் நசுக்கப்படுவதெல்லாம் மிகச்சாதாரண விஷயம்தான் இல்லையா? கமலுக்காவது ஏதோ நாலு பேர் சப்போர்ட் பண்ணவாவது செய்கிறோம்.

நாஞ்சில்நாடனின் ‘காவலன் காவான் எனின்’ கட்டுரைதான் ஞாபகத்துக்கு வருகிறது. தண்ணீருக்கு மேலே தெரியும் பனிக்கட்டியின் அளவை ஒத்தவைதான் இந்நிகழ்வுகள் எல்லாம், பெரிதல்ல. ஆனால் தண்ணீருக்கு கீழே பனிமலை காத்திருக்கிறதா இந்த சமூக அமைப்பை மூழ்கடிக்க? பெரும் அச்சமூட்டுவதாக இருக்கிறது இது போன்ற எண்ணங்கள்.

*

விஸ்வரூபம் – ஒரு பார்வை

$
0
0
கமல்ஹாஸனின் சிறந்த படங்கள் பலவும் முதல் பார்வையில் ஒரு சின்ன அதிருப்தியையே தருவதாக இருந்திருக்கின்றன. அதில் விஸ்வரூபமும் தப்பவில்லை எனலாம். ஹேராம், விருமாண்டி உட்பட நிறைய படங்கள் அந்தப் பட்டியலில் இருக்கின்றன. காரணம் கமல் மீதான நமது அதீத எதிர்பார்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் பல படங்கள் மறுபார்வையில், சில காலங்கள் கழித்து ‘பிரமாதமில்ல..’ என்று உள்ளுக்குள் சிலாகிக்க வைத்திருக்கின்றன. தசாவதாரமெல்லாம் அதிருப்தியின் உச்சம் என்று சொல்லலாம். காரணம் திரைக்கதையில் எண்ணமுடியாத அளவுக்கு லாஜிக் பிரச்சினைகள் இருந்தன. ஆனால் தசாவதாரத்தை நாம் வேறொரு கண்ணோட்டத்தில் அணுகவேண்டும் என்பதை பின்பு உணர்ந்தேன். அது ஒரு வழக்கமான சினிமா அல்ல, சினிமாவின் சாத்தியங்களை பரிசோதிக்க எண்ணிய ஆர்வமிக்க ஒரு கலைஞனின் முயற்சியாகவே அது இருந்தது. அத்தனைக் காரெக்டர்களையும் ஒரே திரையில் கொண்டுவருவதற்கான போராட்டம்தான் அந்த லாஜிக் மீறல்கள்! பஞ்சதந்திரம் முதலில் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இப்போது கமலின் நகைச்சுவைப்படங்களில் எனது முதல் தேர்வாக பஞ்சதந்திரம்தான் இருக்கிறது. சானல் தாவுகையில் கண்ணில் பட நேர்ந்தால் முழுதும் பார்க்காமல் விலகமுடிவதேயில்லை.

சரி, விஸ்வரூபத்துக்கு –தெலுங்கு- வருவோம்.

ஒரு இந்திய உளவாளி, ஒற்றறிவதற்காக ரகசியத்திட்டம் ஒன்றின் கீழ் அல்-காய்தா இயக்கத்தில் இடம்பெற்று சில காலம் இருந்துவிட்டு, பின்பு அதன் பலனால் அவர்களின் அமெரிக்க நாசவேலைகளை முறியடிக்கும் பணியில் ஈடுபடுகிறான்.



இதற்கு மேல் கதை சொன்னால் அது ஸ்பாய்லராக அமைந்துவிடக்கூடும். ஆகவே பிற விஷயங்களைக் காணலாம். இதை நான் ஒரு அருமையான கிரைம் திரில்லர் வகைப் படமாகவே காண்கிறேன். '’விஸ்'’ காரக்டரின் வடிவமைப்பு, கமல்ஹாஸனின் நடிப்பையெல்லாம் தனித்தனியேவெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கவேண்டுமா என்ன? வழக்கமாக கமலின் பெரும்பான்மையான படங்களில் எனக்குப் பிடித்த ஒரு விஷயம் இருக்கும். படத்தின் சில முக்கியமான தருணங்களில் அவர் தரும் போஸ் (Posture) இது ஒரு தனிப்பட்ட ரசனை. ’'வேண்டுபவன் எடுத்துக்கோ'’ என்பது போலான ஒரு விஷயம் அது. சில விநாடிகளுக்கு ரசிக்கக் கிடைக்கும். ஒரு ரசனையான ஸ்டில் போட்டோகிராஃபரைப் போல கண்கொத்திப்பாம்பாக காத்திருப்பேன். அப்படியான காட்சிகள் இந்தப் படத்தில் அதிகம். வயது அதிகமாக அதிகமாக, ஸ்டோர் செய்யப்பட்ட ஒயினின் சிறப்பைப் போல கமலின் அழகு அல்லது ஸ்க்ரீன் பிரசன்ஸ் கூடிக்கொண்டே போகிறது. இதுவும் ஒரு தனிப்பட்ட ரசனையே. பளிச்சென விழுந்த அடியில் புதிதாய்த் தோன்றிய வெட்டுக்காயத்திலிருந்து கசியும் ரத்தத்தோடு திடுமென அவர் நிகழ்த்தும் ருத்ரதாண்டவம் பிரமிப்பு எனில் அதன் முடிவில் அவர் தரும் போஸ் மனதிலேயே நிற்கும் என்றும்.

வன்முறைக்காட்சிகள் அதிகம் என்பதாய் ஒரு பேச்சு இருக்கிறது. மறுக்கவில்லை. ரத்தக்களறி என்பதை விட ஒரே ஒரு துப்பாக்கி வெடிப்புக் கூட நமக்கு அந்த எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும். காட்சியின் அழுத்தம் அப்படி. கதைக்களம் அப்படி.

நான் முதலில் சொன்ன அதிருப்தி அல்லது படத்திலிருக்கும் தொய்வுக்கான காரணம் என்ன? நிச்சயமாக அதற்கும் காரணம் கமல்தான்.

இப்படியொரு கதையில் ஆக்‌ஷன், பரபரப்பை மட்டுமே முன்னிறுத்தி, கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் படத்தில் பேசப்படும் சில விஷயங்களை நியாயப்படுத்தவேண்டும் (Justification) என்ற நல்முனைப்பு யாரையும் விட கமல்ஹாசனுக்கு கொஞ்சம் அதிகமே. இந்தப்படத்தைப் பொறுத்தவரை அது சரியான முறையில் கையாளப்படவில்லையோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. வேட்டையாடுவதற்குப் புலிகளுக்கு இருக்கும் நியாயத்தைப் போலவே தாலிபன்களின் வன்முறைக்குப் பின்னாலிருக்கும் நியாயத்தையும் அவர் காட்டவிரும்பி அவர் அமைத்த ஆப்கன் காட்சிகள் படத்தின் தொய்வுக்குக் காரணமாய் அமைந்துவிட்டன. மேலும் அவர் நியாயத்தைச் சொல்வதற்காக வரலாற்றுக்குப் போவதைவிட அவர்களின் இன்றைய அவலம் நிறைந்த வாழ்க்கையை அருகில் காண்பிப்பது சரியாக இருக்கும் என்றும் நினைத்திருக்கிறார். ’உமர்’ எனும் ஜிகாதியின் எண்ணம், மனைவியிடம் அவன் நடந்துகொள்ளும் விதம், படிக்கவிரும்பும் மகனையும் ஜிகாதியாக்கிப் பார்க்கவேண்டுமென்ற அவனது வெறி, குழந்தை மனம் மாறாத ஒரு தற்கொலைப்படை நபர், துரோகத்துக்கு அவர்கள் தரும் தண்டனை, அவற்றுக்கு ஊடாக தவிப்புடன் அலைந்துகொண்டிருக்கும் கமல் என நீளும் காட்சிகள். அவை அவர் நோக்கத்தை சரியாக எடுத்துக்காட்டியதா என்பதை பொறுப்புடன் சிந்திக்கலாம்.

மேலும் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட படமானாலும் கூட இரண்டு பாகங்களும் போதுமான அளவு அதனதன் இறுதிக்காட்சிகளைப் பெற்றிருக்கவேண்டும். அதுவே நியாயமும் கூட. கிளைமாக்ஸ் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாமோ என்றொரு எண்ணம் எனக்கு.

மற்றபடி நடிக, நடிகர்களின் பங்கு, குறிப்பாக உமர் காரெக்டரில் வரும் ராகுல் போஸ், ஆக்‌ஷன் காட்சியமைப்புகள், கதை சொல்லும் பாங்கு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, ஆர்ட் டைரக்‌ஷன், சிஜி போன்றன படத்தில் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. சிஜி தொழில்நுட்பத்தில் எனக்குக் கொஞ்சம் ஆர்வமிருப்பதால் (அதாவது பார்த்து அனுபவிப்பதில் மட்டும்) அவை பற்றிய கட்டுரைகள், ஆங்கிலப் படங்களின் பிகைண்ட் தி சீன்ஸ், மேக்கிங் விடியோஸ் என கவனிப்பதுண்டு. ஆகவே சிஜி காட்சிகள் என் கண்களிலிருந்து தப்பவது சற்று சிரமம்தான். நியூயார்க் நகர சேஸிங் காட்சியின் சில ஷாட்கள், ஆப்கன் மீதான அமெரிக்கத் தாக்குதல், டபுள் ரோட்டார் இராணுவ ஹெலிகாப்டர்கள், சில குண்டுவெடிப்புகள் என சிலவற்றைப் பிடித்தேன், அதுவும் கஷ்டப்பட்டு. இன்னும் பல காட்சிகள் இருந்திருக்கலாம். அந்த வகையில் அருமையான சிஜி வேலைப்பாடு.

மொத்தத்தில் டெக்னிகலி உலகத்தரமான மேக்கிங்கா என்று கேட்டால் சிறப்பு, ஆனால் இன்னும் சில படிகள் செல்லவேண்டியதிருக்கிறது என்று சொல்வேன். தலிபன் குழுக்களின் வாழிடம், குகை அமைப்புகள் முழுவதும் கடும் உழைப்பில் விளைந்த அருமையான செட்கள் என்பது பாராட்டப்படவேண்டியது எனினும் ஒரு மாற்றுக் குறைவுதான். பட்ஜெட் காரணமாக இருக்கலாம். ஆயினும் ஒரு இயக்குனராக வாய்ப்பளிக்கப்பட்டால் எந்த உலகத்தரத்துக்கும் இணையானதொரு படத்தைத் தரமுடியும் என்பதை இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார் என நிச்சயமாக சொல்லலாம்.

ஆப்கன் தீவிரவாதிகளும் தமிழிலும், தெலுங்கிலும் பேசவேண்டிய கஷ்டம் நமக்குக் காலகாலமாய் இருக்கிறது. என்ன செய்வது இந்தப்பிரச்சினைக்கு? மண்டை காய்கிறது. பக்கத்துப் பக்கத்து நாடுகளுக்குள்ளும், ஒரே நாட்டுக்குள்ளும் இப்படி கைகொள்ளாத அளவுக்கு மொழிகள் இருந்தால் எப்படி எல்லைதாண்டி கதைகள் சொல்வதுன் என்று வேண்டாம்? அட்ஜஸ்ட் பண்ணிக்கத்தான் வேண்டும். கமலும் நன்றாகவே மண்டை காய்ந்திருக்கிறார்.

படத்துக்கெதிராக ஏற்படுத்தப்பட்ட அதீத இஸ்லாமிய எதிர்ப்பில் நியாயமிருக்கிறதா?

1.    நிச்சயமாக இல்லை. மேலும் கமல்ஹாசனின் நோக்கமும் அதுவல்ல, இது தெளிவு.
2.    இது தலிபான்களின் கதை, அல்லது அவர்களை வில்லனாக சித்தரிக்கும் கதை எனவும் சொல்லலாம்.
3.    தலிபான்கள் இஸ்லாமியர்கள் என்பது இஸ்லாமியர்களுக்கு ஒரு வாழ்நாள் உறுத்தல். அதில் தவறில்லை, ஆனால், தலிபான் இயக்கத்தினர் நம்மவர்கள் என்ற ஒரு எண்ணம் ஒரு இஸ்லாமியருக்கு எழுந்தால்?

இந்த இடத்தில் ஒரு விஷயம். நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஒரு கருத்தைச் சொன்னார். சிந்திக்கத்தகுந்ததாக இருந்தது அது. பிற மதங்கள் எப்படியோ தெரியாது, ஆனால் நமக்குத் தெரிந்தவரை இந்து, கிறித்துவ மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது.
இந்து மதத்தில் இறைவழிபாடு என்பது ஒரு பகுதியாக இருக்கிறது. துன்பங்கள் நேரும் போதும், சிறப்புக்குரிய நேரங்களிலும், நாட்களிலும், விழாக்காலங்களிலும், மேலும் சில சந்தர்ப்பங்களிலும் மட்டுமே இறைவழிபாடு செய்கிறோம். இறைநாமம் புகழ்கிறோம். ஏன், நாத்திகத்துக்கும் கூட இங்கே இடமிருக்கிறது.

ஆனால் இஸ்லாம் அப்படியல்ல. இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமும், வாழ்க்கையும் வேறு வேறல்ல. அவர்களின் வாழ்க்கையே இறைவழிபாடாகத்தான் இருக்கிறது. ஒரு நாளின் 24 மணி நேரமும், ஒவ்வொரு செயலும், உண்பதும், உறங்குவதும் கூட இறைநம்பிக்கை சார்ந்ததாக இருக்கிறது. அவர்கள் இறைவனிடம் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்தவர்கள். தினமும் ஏராளமான தடவைகள் அல்லாவின் நாமத்தைத் துதித்தபடி இருக்கிறார்கள். அன்பைப் போதிக்கும் இஸ்லாத்தை கொண்ட இஸ்லாமியர்களின் ஒரு பகுதியினர் இப்படி தீவிரவாதக்குழுக்களாக இயங்குவதே நாம் ஆச்சரியப்படத்தக்கதாக இருக்கிறது.

உதாரணமாக, முருகனைத் தெய்வமாக ஆத்மார்த்தமாக வணக்கும் ஒரு இந்து, ஒரு கிறித்துவன் ‘ஓம் முருகா..’ என்று சொன்னபடியே ஒரு கொலை செய்வதைப் பார்க்கநேர்கிறது என வைத்துக்கொள்வோம். அவர், அதன் பின்னணியை யோசிப்பதற்கு முன்பாக, கொலையாளி கிறித்துவனா, இஸ்லாமியனா, இந்துவா என்றெல்லாம் அடையாளம் காண்பதற்கும் முன்பாக ஒரு துணுக்குறலையும், வருத்தத்தையும் அடைவது இயற்கையே.

போலவே இஸ்லாமியர்கள், தாலிபான்களை நம்மவர்கள் என்று நினைக்கக்கூடுமோ என்ற ஐயத்துக்கே இடமில்லை. அங்கே, அந்தக் கொடுஞ்செயல்களுக்கு அல்லாவின் நாமம் பயன்படுத்தப்படுகிறதே என்பதுதான் அவர்களின் முதல் வருத்தமாக இருக்கும்.

சில பல வருடங்களுக்கு முன்னால், நாவல்களில், சினிமாக்களில் வில்லன்களாக சித்தரிக்கப்படும் ஒரு நாட்டின் பெயரையோ, குழுவின் பெயரையோ, அரசு அமைப்புகளின் பெயர்களையோ பயன்படுத்துவதையே தவிர்த்து வந்தார்கள். ஆனால் அந்தக் குழந்தைத்தனத்தையெல்லாம் எப்போதோ நாம் தாண்டிவந்துவிட்டோம். படைப்புகள் நிஜத்துக்கு அருகில் இருக்கவேண்டும் என விரும்புகிறோம். பிரதமர்கள், முதலமைச்சர்கள், சிபிஐ, ஐஎஸ்ஐ, எஃப்பிஐ, மதத்தலைவர் எனத்தெளிவாக குறிப்பிட்டே வில்லன்களை அமைக்கிறோம். போலவே, உலகெங்கும் இருக்கும் பல விஷயங்களும், அமைப்புகளும், மனிதர்களும், நிகழ்வுகளும் கதைகளில் பயன்படுத்தப்படலாம். அவற்றைக் கதைகளாக பார்க்கும்/ சகித்துக்கொள்ளும் மனப்பாங்கு வேண்டும்.

இவ்வளவு நீட்டி முழக்கவேண்டிய அவசியமெல்லாம் இல்லாமல், இந்தப் படத்துக்கு எதிர்ப்பு எழுந்ததற்கான நிஜமான காரணம் இஸ்லாமியர்கள் அல்ல, ஒரு சில அடிப்படைவாதிகளும், தமிழக அரசும்தான் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. தெலுங்குக்கும், ஹிந்திக்கும் இல்லாத எதிர்ப்பு தமிழில் எனும்போதே நாம் சற்று சிந்தித்திருக்கவேண்டும், வட‌க்கே இல்லாத அடிப்படைவாதிகளா, தமிழகத்தில் இருந்துவிடமுடியும் என்று. தவறிவிட்டோம். ஆனால், போலிகளின் உள்நோக்கமறியாமல், இணையத்தில் உலவும் சில இந்து, இஸ்லாமிய நண்பர்கள் விவாதத்தில் மதவாத எண்ணங்களை கொப்பளித்தது மட்டுமே கொஞ்சம் அயர்ச்சியை ஏற்படுத்தியது. நண்பர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்பலாம்.

லெட்ஸ் திங்க் அண்ட் பிலீவ் பாசிடிவ். தமிழர்களுக்கு (கவனிக்க, இந்துக்கள் அல்ல) நிறையவே பொறுமையும், சகிப்புத்தன்மையும் இருக்கிறது. அவ்வளவு எளிதாக மதவாத எண்ணங்களுக்கும், மத விரோதப்போக்குகளுக்கும் ஆளாக மாட்டார்கள் எனவும் நம்புகிறேன். நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெரியாரின் சிந்தனை இன்னும் நம்மைத் தன் ஆளுமைக்குள்தான் வைத்திருக்கிறது எனவும் நம்புகிறேன். (இக்கருத்தைச்சொல்லி ஒரு பெரும் ஆறுதலைத் தந்த யுவகிருஷ்ணாவின் ஒரு பதிவு இங்கே).

இந்தக் கூத்துகளுக்கிடையே தினம் ஒரு கருத்து, தினம் ஒரு சூழல், தினம் ஒரு கேள்வி என சூழப்பட்ட கமல் சிந்தித்து உரையாற்றவெல்லாம் நேரம் கிடைத்திருக்காது.

“இது ஒரு சாதாரண சினிமாதான். மக்கள் வாழ்வியல் சம்பந்தமான தேசியப்பிரச்சினை அல்ல, இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்”" என்று சொன்னதுதான் நிஜமான கமல்ஹாசன்.

அப்படியிருந்தும் அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதற்கான காரணத்தை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். அதற்குப் பணம் மட்டுமே காரணமாக இருக்கமுடியாது. படத்தின் ஒவ்வொரு பிரேமையும் ஆசை ஆசையாய், இழைத்து இழைத்து உருவாக்கிய ஒரு கலைஞனின் வலிதான் அது.

ஒரு காட்சியில், ஒரு மருத்துவச்சி சூடு பட்டு இறந்துகிடப்பார். அவர் இறந்துவிட்டாரா என அவரின் கையைத்தொட்டுப்பார்த்து சோதிப்பார் கமல். அந்த ஷாட்டின் போது இரண்டு கைகளும் அந்தப் பெண்ணின் நெற்றியைத் தவிர முகத்தை மறைத்திருக்கும். முழு முகமும் தெரிந்தால் அவர் யார், முந்தைய காட்சியில் வந்த மருத்துவர்தானா என்பதைக் காணும் ஆர்வத்தில் அவர் நெற்றிப்பொட்டில் முடிக்கற்றைக்கருகே விழுந்திருக்கும் துப்பாக்கிக்குண்டின் காயத்தை நிச்சயமாகத் நாம் தவறவிட்டிருப்போம். அடுத்த ஷாட்டில் கமல், அவர் முகத்தைக் கண்டு, காயத்தைக் காணும் காட்சியில் அவரின் முகமும் காண்பிக்கப்படுகிறது.

உயிர்காப்பதற்காக நிகழும் முதல் சண்டைக்காட்சி. அந்தப் பெரிய ஷெட்டின் ஒரு ஓரத்தில் நீர்த்துளி சொட்டிக்கொண்டிருக்கிறது. இரண்டு சொட்டுகள் விழுவதற்கு இடைப்பட்டுள்ள நேரத்தில் அந்த சண்டை நிகழ்ந்து முடிகிறது.

இப்படி எடுத்துச்சொல்ல, ரசிக்க படம் முழுவதும் விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

ஒரு படைப்பு விமர்சிக்கப்படுவதை ஒரு நல்ல படைப்பாளியால் ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் அது புறக்கணிக்கப்படுவதையோ, கொள்பவனின் முன்னால் கடைவிரிப்பது தடுக்கப்படுவதையோ அவனால் ஏற்றுக்கொள்ளமுடியாது. கலங்கித்தான் போவான். அதுதான் அவருக்கு நேர்ந்தது. இனி ஒரு படைப்பாளிக்கு இது நேராமல் நாம் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கமல் ஏன் இப்படியான ‘காண்ட்ரவர்சி’யான கதைகளைப் படமாக்கி பணம் சம்பாதிக்க வேண்டும்?

இந்தக் கேள்வியே ஒரு பெரிய அபத்தமாகப் படுகிறது எனக்கு. நான் ஒரு சாதாரண மிடில்கிளாஸ் தமிழன். எழுதும் ஆசையில் இணையத்தில் எதையோ செய்துகொண்டிருக்கிறேன். என்னளவுக்கே, என்னைத் திருப்திப் படுத்த ஏதேதோ செய்யவேண்டியிருக்கிறது. வடிவங்கள், உள்ளடக்கம் என மாறிக்கொண்டே இருக்கிறேன். எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்க்கவேண்டும் என விரும்புகிறேன். என்னை நோக்கி,

1.    உனக்குக் கட்டுரைதான் நல்லா வருகிறதே, ஏன் கதை என்ற பெயரில் உசிரை வாங்குறே.?
2.    இங்கதான் படிக்க இத்தனை பேர் இருக்கோமே? எதுக்கு விகடன்ல எழுதணும்னு ஆசைப்படுறே?
3.    சினிமா விமர்சனம்தான் எல்லோரும் எழுதறாங்களே.. நீயும் எழுதித்தான் ஆகணுமா?

என்றெல்லாம் கேட்டால் நான் என்ன செய்யலாம்? நிச்சயமாய் என்னிடம் பதில் இல்லை. கேள்வியில் அர்த்தம் இருக்கும் போதுதானே பதிலும் உருவாகமுடியும்?

ஒரு கலைஞன், உலகளாவிய சந்தைக்குப் போக ஆசைப்படுகிறான். அது பணம் சம்பாதிப்பதாகத்தான் இருக்கட்டுமே.. என்ன தவறு அதில்? அந்தச் சந்தைக்குப் பொருத்தமான, தனக்குச் சாத்தியப்படுகிற, தெரிந்த ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கிறான். கலைப்படங்களுக்கும், கமர்ஷியல் படங்களுக்குமான வரவேற்பு வித்தியாசப்படத்தானே செய்யும்? எது அவனுக்கானது என்பது அவன் செய்யவேண்டிய முடிவு.

விஸ்வரூபம் எடுத்தவனிடம் போய், ‘ஏன், சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன் மாதிரி படம் எடுக்கலை?’ என்று கேள்வி கேட்டால் அவன் என்ன செய்வான்?

நம் கலைஞர்களிடமிருந்து உலகளாவிய அளவில் ‘விஸ்வரூபம்’ மாதிரியான படங்களும் வரவேண்டும். ‘தி வே ஹோம்’ மாதிரியான படங்களும் வரவேண்டும் என்பது நம் ஆசை. ஆனால் அதையும் கமலேதான் செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி என்பதுதான் என் கேள்வி.

இந்தக் கேள்வியாவது பரவாயில்லை. ‘நதிநீர் பிரச்சினைக்காக என்ன செய்தாய்? மின்சாரப்பிரச்சினைக்காக என்ன செய்தாய்? விலைவாசிக்காக என்ன செய்தாய்? எங்கள் ஊரில் சாலை வசதி இல்லை, போஸ்டாபீஸ் இல்லை. நீ நஷ்டப்பட்டால் எங்களுக்கென்ன?’ என்றெல்லாம் கூட கமலை நோக்கி கேள்விகள் எழுகின்றன. கமல் தமிழக முதல்வராகவோ, எம்மெல்லேயாகவோ, குறைந்த பட்சம் வார்டு கவுன்சிலராகவோ எப்போதாவது இருந்திருக்கிறாரா? சொன்னால் தெரிந்துகொள்வேன், எனக்குக் கொஞ்சம் பொது அறிவுக்குறைபாடு உண்டு. ..முடியல..   

கட்டுரை நீண்டுகொண்டே செல்வதால் மொத்தத்தில் ’விஸ்வரூபம்’ தவறவிடக்கூடாத படம் என்று கூறி முடித்துக்கொள்கிறேன்.

இறுதியாக எங்களூர்ப் பக்கம் கிழங்கட்டைகள் சொல்லித்திரிந்த ஒரு பழமொழி ஞாபகம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. சொன்னால், கமலின் சூழலுக்கு அவருக்கு ஆறுதலாக இருக்கலாம். ஆனால் நான் கமல் அல்லன் என்பதால், பல திசைகளிலிருந்து வரும் தாக்குதலுக்குப் பயந்து வாயைப் பொத்திக் கொண்டு எஸ்கேப்பாகிறேன். ஒரு பழமொழியைக் கூட சொல்லமுடியாத அளவுக்கான சூழல் நலத்துடன்தான் நாம் இருக்கிறோம் என்பது சேதி! நன்றி, வணக்கம்!

என்னைக் கவர்ந்த மேலும் இரண்டு விஸ்வரூப விமர்சனங்கள்.

கருந்தேள் ராஜேஷ்
கேபிள் சங்கர்


*************

பி.கு:

முதலில் DTH ரிலீஸில் பார்க்க எண்ணியிருந்தும் பொங்கல் விடுமுறைக்கு சரியாக 10 தேதி நான் ஊருக்குச்செல்ல டிக்கெட் எடுத்து வைத்திருந்தமையால் படத்துக்கு முன்பதிவு செய்யவில்லை. 1000 ரூபாய் அதிகம் எனினும் ஒரு முதல் நிகழ்வில் பங்கேற்கவேண்டும் என்ற ஆசையிருந்தது. அது போச்சே என்ற ஆதங்கம். ஆனால், படம் ரிலீஸ் தள்ளிப்போனது. DTH ரிலீஸ் குழப்பங்களைப் பொறுத்தவரை 'துணிந்தபின் எண்ணிய கமல்' என்று நான் கூட தூற்றினேன். ஆனால் அவர் சகலவிதங்களிலும் கார்னர் செய்யப்பட்ட பின்னணி தெரியவருகிறபோது என்ன சொல்வது எனத் தெரியவில்லை.

அடுத்து அறிவிக்கப்பட்ட 25ம் தேதி ஊரிலிருக்கமுடியாமல் கடமை அழைக்க, அறிவிக்கப்பட்ட 10 நாட்களுக்கு முன்னதாகவே ராய்பூர் வந்துவிட்டதால் தமிழில் பார்க்கமுடியாமல் போகிறதே என்ற ஒரு சின்ன வருத்தம் இருந்தது. சரி, ஹிந்தியில் பார்த்துவைப்போம் என நினைத்திருந்தவனுக்கு மீண்டும் சிக்கல். பொதுவாக வெளியூர் சுற்றுப் பயணங்களில் ஒரு படம் பார்க்க நேரம் ஒதுக்குவதொன்றும் பெரிய சிரமமான காரியமில்லை. ஆனால் இந்த முறை சற்று கடினமான சூழல். நிறையவே மெனக்கெட வேண்டியதிருந்தது. அப்படி நேரம் ஒதுக்கி, தியேட்டர் தியேட்டராக அலைந்த பின்புதான் தெரிந்தது ஹிந்தி ரிலீஸ் பிப்.1 என. அதே நேரம், தமிழிலும் ரிலீஸ் ஆகவில்லை என்ற செய்திக்கு வருந்துவதா, மகிழ்வதா தெரியவில்லை.

பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு நாள் வேலையாக, இடையே வைசாக் செல்ல நேர்ந்தது. ஜெகதாம்பா என்றதொரு நல்ல ஒலி, ஒளியமைப்புடனிருந்த 70mm தியேட்டரில் தெலுங்கு வெர்ஷன் பார்க்க நேர்ந்தது. நம்புங்கள். டிக்கெட் விலை 50 ரூபாய்தான். நல்ல கூட்டம், குதூகலம். முதல் சண்டைக்காட்சியில் திரையரங்கில் எழுந்த ஆர்ப்பரிப்பு அட்டகாசமானது. பாடல்களையும், வசனங்களையும் தமிழில் கேட்கமுடியாதது ஒரு பெருங்குறைதான். ஆனால் நான் தமிழ்நாட்டில் இருந்திருந்தால், இப்போது கூட பார்த்திருக்கமுடியுமா தெரியவில்லை. 

எவ்வளவு கட்டுக்கதைகள், சாதி, மதச் சாயங்கள், கற்பிதங்கள், கேள்விகள்? 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களைத் தன் சினிமாவினால் எண்டெர்டெயின் செய்ய, தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு கலைஞனை நாம் இன்னும் கொஞ்சம் பெட்டராக பார்த்துக் கொள்ளலாம், இனியாவது. நன்றி.  
*


வீட்டுக்கு வந்த மயில் குட்டி

$
0
0
(கீழே தொகுக்கப்பட்டவை சமீபத்தில் கூகிள்+ல் எழுதியவை..)

***

இன்று கொஞ்சம் அலுவலகத்தில் ஓய்வாக இருந்தபோது ஒரு வயதான அலுவலக ஊழியர் கணினி கற்க எண்ண, சற்று நேரம் சொல்லிக்கொடுக்க நேர்ந்தது. அப்போது என் அப்பாவை நினைத்துக்கொண்டேன்.

சரியான வயதில் B.Com முடித்த என் அப்பா, பின்பு நேரமில்லாமல், பிள்ளைகள் மூவரும் படித்து முடித்து வேலைக்கெல்லாம் போக ஆரம்பித்தபின்னர் 30 வருடங்களுக்குப் பின்னர் தனது 50களின் துவக்கத்தில் தொலைக்கல்வி முறையில் M.Com முடித்தார். அதில் பிரமோஷன் என்ற சுயநல நோக்கமெல்லாம் இல்லை. ஆர்வம் மட்டுமே இருந்தது.

பேரன்கள் கணினியில் விளையாடிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலிலும், தயங்காது எங்களிடம் அமர்ந்து கணினி இயக்கக் கற்றுக்கொண்டு, இப்போது ஓய்வு பெற்ற பிறகும் பிரைவேட்டாக சில அலுவல்களை 2 வருடங்களாக செய்துகொண்டிருக்கிறார். இதில் எனக்குச் சற்று பெருமைதான்.

#தன் அப்பா காக்கா, பொன் காக்கா :-))

***

Stunning, Breath taking, Mind blowing.. இப்படியெல்லாம் காதால் மட்டும்தான் கேட்டிருக்கிறோம். தமிழ் சினிமாவில் முதல் தடவையாக ஒரு காட்சி இந்த உணர்வுகளையெல்லாம் தந்தது எனில் அது விஸ்வரூபம் முதல் சண்டைக்காட்சிதான். சண்டைக்காட்சிகளில் ஒரு தனிப்பட்ட நடிகரின் Performanceக்கு பெரிய வேலை இல்லை எனினும் உணர்ச்சிப்பிழம்பாக, ஓலமாக திருக்குரான் ஓதும் கமல்ஹாஸனின் குரலே பின்தொடரும் காட்சியை முழுமைப்படுத்தவும், அந்த Stunning Feel-ஐ உருவாக்கவும் துணைபுரிந்தது என்றால் அது மிகையாகாது. அந்தச் சண்டை துவங்கி முடியும் வரையான விநாடிகள் உடம்பு இறுக்கமாகி, முடியும் போது தளர்ந்து பெருமூச்சு விட்டேன். அதைத்தான் Stunning என்று குறிப்பிட விளைகிறேன்.

முக்கிய பின்குறிப்பு: எவ்வித கற்பிதங்களையும் கொள்ளாமல், பொழுதுபோக்கிற்கான வெற்று ஆக்‌ஷன் படமாகவே நான் விஸ்வரூபத்தைப் பார்க்கிறேன்.

***

பழைய காதலியை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பும், அவளுடன் பேசும் சந்தர்ப்பமும், அவளுக்கு கடிதம் எழுதும்  சூழலும் உங்களுக்கு கிடைக்காமலேயே போகட்டும்!

#பிப்.14 தத்துவம்! :-))

***

ராய்ப்பூரில் ஒரு ஹோட்டலில்..

நான்: சிக்கன் ஃபிரைட் ரைஸ் கொடுங்க..

சர்வர்: ஃபுல் ப்ளேட்டா, ஹாஃப் ப்ளேட்டா?

நான்: ஓஹோ.. அப்ப ஹாஃப் ப்ளேட்டே கொடுங்க..

சர்வர்: ஹாஃப் ப்ளேட்லாம் கிடையாது. ஃபுல் மட்டும்தான் உண்டு.

நான்: ங்ஙே!!

***

நம்மில் பலரும் கணினியில் தமிழ் எழுத பயன்படுத்திக்கொண்டிருக்கும் Phonetic முறையை விட தமிழ்99 எந்த வகையில் சிறந்தது? அதன் அவசியம் என்ன? என்பது பற்றிய அழகான சில கட்டுரைகளைக் கண்டேன். தமிழ்99 என்பது டைப்ரைட்டர் கற்றவர்களுக்கான தனி விசைப்பலகை என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் Phonetic முறைக்கான சிறந்த மாற்று என்பதே இப்போதுதான் புரிகிறது.

வாசிக்கவும்:

http://blog.ravidreams.net/tamil99/
இதன் தொடர்ச்சியான ‘ஏன் தமிழ்99?’ என்ற கட்டுரையையும் தவறவிடவேண்டாம்.

***

நேற்று மாலை பால்கனியில் நின்றுகொண்டிருந்த சுபா திடீரென கத்தினான்,

“அப்பா, இங்க வாங்க வாங்க.. மயில் குட்டி.. மயில் குட்டி..”

இங்க எங்கடா மயில்குட்டி வந்தது என ஆச்சரியப்பட்டுக்கொண்டே போனேன், “எங்கம்மா மயிலைக் காணோம்?”

“அதுக்குள்ள மரத்து மேல ஓடிருச்சு..” என்றவன் முகத்தில் ’சம்திங் ஏதோ மிஸ்டேக்’ என்ற சிந்தனை ஓட, நான் அதை பிக்கப் செய்து இன்னதென்று கணிக்கும் முன்னரே பிடித்துவிட்டான்.

“ஆங்.. ஸாரிப்பா.. அது அனில்குட்டி.. அனில்குட்டி.. தூங்கிமுழிச்ச பிறகு (அதாவது நாளைக்கு) வரும். வாங்க போலாம்”

***

அதிஷாவின் சமீபத்திய கட்டுரை ஒன்றை வாசித்தபோது பராசக்தி போன்ற ஒரு படம் இன்றைக்கு ஏன் அவசியமாகிறது என்ற கேள்வி எழுந்தது, பின் அதைச்சார்ந்து ஏராளமான சிந்தனைகளை அது எழுப்பியது. நேரமிருப்பின் பிறிதொரு சமயம் அவற்றைப் பகிர முனைகிறேன்.

கட்டுரை உங்கள் பார்வைக்கு:

http://www.athishaonline.com/2013/01/60.html

***

நேத்து நான் வடபழனியில ஒரு டாஸ்மாக்கை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது ஒருத்தன் என்னருகே வந்தான்.

‘எஸ்க்யூஸ்மீ ஒரு 5 ரூபா கிடைக்குமா’ 

‘இல்லை’ என்று சொல்லிவிட்டு தொடர்ந்து நடந்தேன்.

’ஈயென இரத்தல்..’ நினைவிலாடி, இங்கே எங்கள் இருவரில் யார் பிச்சைக்காரன் என்ற குழப்பம் எனக்கு ஏற்பட்டது.

டாஸ்மாக்கிலிருந்து நான் வெளியேறுகையில் மீண்டும் அவன் எதிரில் வர, சற்றே குற்ற உணர்வுடன் இப்போது நான் 20 ரூபாயை அவனிடம் நீட்டினேன்.

‘இப்போ எனக்குத் தேவையில்லை’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான். 

இப்போதும் ’ஈயென இரத்தல்..’ ஞாபகம் வந்து, இப்போது எங்களுள் யார் வள்ளல் என்ற சந்தேகம் எழுந்தது.

-ரமேஷ் வைத்யா (பேசுகையில் கூறியது). 

*

மிஸ்டர் &மிஸஸ் ஐயர் (Aparna sen's Mr. and Mrs. Iyer)

$
0
0

இரண்டு விஷயங்களுக்காக இந்தப்படத்தைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒன்று காதலெனப்படும் உறவை இன்னொரு அழகிய கோணத்தில் சித்தரித்தமைக்காக. இன்னொன்று நீறு பூத்த நெருப்பாக இருக்கும் சிறுபான்மையினரை முன்னிறுத்தும் அரசியலை அழுத்தமாக பேசியமைக்காக.

எல்லா வகையிலும் சிறப்பான ஒரு படத்தைக் காண்பது அரிது. ’மிஸ்டர் & மிஸஸ் ஐயர்’ (Mr & Mrs, Iyer) அவ்வகையிலான ஒரு படம். இதைப்போன்ற சில படங்களைப்பற்றி எப்போதாவது நண்பர்கள் சிலாகிக்கும்போது அவற்றைப் பார்க்கும் ஆவல் எழும். பெரும்பாலான படங்களை அத்தோடு நாம் மறந்துவிடுகிறோம், அல்லது பார்க்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போய்விடுகிறது. இந்தப் படத்தைப் பொருத்தவரை என் நிலையும் அதுவே. சமீபத்தில் நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்த போது இந்தப் படத்தைப் பற்றி பேச்சு வந்தது. ‘அட பக்கி, இன்னுமா பாக்கலை’ என்று முதலில் கடுப்பேற்றியவர், அடுத்த நாளே நேரில் பார்க்கும் வாய்ப்பு அமைந்தபோது அவரிடமிருந்த டிவிடியைத் தந்து அதை ஆற்றுப்படுத்தவும் செய்தார். 



மீனாட்சி எனும் ஒரு பெண், கைக்குழந்தையோடு, பெற்றோர் வீட்டிலிருந்து அவளது வீட்டுக்குப் பயணம் செய்கிறாள். ஆண்கள் துணையோ, பெரியவர்கள் துணையோ இல்லாத சூழல்.. அதுவும் பேருந்தில் கல்கத்தாவை நோக்கி சற்றே நெடும்பயணம். தழையத் தழைய கட்டியிருக்கும் புடவை, படிய வாரிய தலை, குங்குமம் துலங்கும் நெற்றி என மீனாட்சி ஒரு தமிழ் பிராமணப் பெண். தோற்றம் இதுவாயின், மனம் நிறைய ஆச்சார பழக்கவழக்கங்களும், கட்டுப்பாடுகளும், பிடிவாதங்களும் கூடுதலாய். அதே நேரம் நற்கல்வி தந்த தைரியமும் என ஒரு சராசரிப் பெண்ணாய் இருக்கிறாள் அவள்.

கூண்டுக்குள்ளிருந்த ஒரு பறவை உலகைக் காணும் தருணமாய் அந்தப் பயணம் மீனாட்சிக்கு அமைகிறது.

காதல் என்பது என்ன? 

ரசனையை, மனதை அறிந்த தோழனுடன் ஏற்படுவது? அவனுடனேயே போதும் போதுமென கூடியிருப்பது? பெற்றோரால் தேர்வு செய்யப்பட்டு கழுத்தில் மாலையணிப்பவனுடன் வருவது? பாதுகாப்பை, வளமான சூழலை எப்போதும் தருபவனுடன் கனிவது? காலம் முழுதும் துணை வருபவன் மீதானது? குழந்தையைத் தந்து குடும்பத்தைப் பேணுபவனுடனானது? சுதந்திரத்தை, சுயத்தை மதிப்பவனுடன் கொள்வது? ஆயின்..

ஒரு சின்ன மனமாற்றத்தை, புரிதலை ஏற்படுத்தியவன் மீது வரக்கூடாதா? கடந்துசெல்பவனின் அழகு உள்ளுக்குள் ஒரு குட்டிப்பூவை மலரச் செய்யக்கூடாதா? கண்களை நேர்மையாகச் சந்திக்கும் கண்கள் கொண்டவன் மீது வரக்கூடாதா?

நட்பு என்றும், சகோதரத்துவம் என்றும் ஏன் அந்த மெல்லிய உணர்வுகளைக் கொச்சைப்படுத்தவேண்டும்? மனித வரலாறு மிகப் பெரியது. நேற்றைய கற்பிதங்கள் நாளை மறக்கப்படலாம், மறுக்கப்படலாம். சமூக ஒழுக்கங்கள் என்ற நெறிமுறைகள் ஏன் ஏற்படுத்தப்பட்டன என்பதைச் சிந்திக்கலாம். நேர்மையாக இருப்பவர்களுக்கும், அன்பானவர்களுக்கும் வாழ எந்த விதிமுறைகளும் தேவையில்லை. ஆனால் எல்லோரும் அப்படி இருந்துவிடுவதில்லை என்பதுதான் சிக்கலான உண்மை. அதற்காகத்தான் புனையப்பட்ட நெறிகள், ஒழுக்கவிதிகள் எல்லாமும்.

மீனாட்சியுடன் பேருந்தில் சகல விதமான மனிதர்களும். குதூகலமான கல்லூரி மாணவர்கள், குழந்தையைக் கூட இடைஞ்சலாகக் கருதும் மனிதர்கள், வயதான தம்பதி, வாய்கொள்ளாத ’பான்’ மசாலாவுடன் சிலர், மனநலமில்லா சிறுவனுடன் பரிதவிப்புடன் ஒரு தாய், இன்னும் இன்னுமென ஒரு இந்தியச் சமூகத்தின் துளி அந்தப் பேருந்து. கூடவே ஜஹாங்கீர் சௌத்ரி எனும் ஒரு இஸ்லாமிய இளைஞன். நண்பனின் நண்பன் எனும் உரிமையில் பயணத்தில் அவளுக்கு உதவ அவளது அப்பாவால் கேட்டுக்கொள்ளப்பட்ட நபர்.

சக மனிதனை சக மனிதனாக ஏற்பதில் அவளுக்கு இருக்கும் மனத்தடை அந்தப் பயணத்தில் எப்படி உடைபடுகிறது என்பதை மீனாட்சியின் இடத்தில் பார்வையாளனை வைத்துக் காண்பிக்கிறது, கற்பிக்கிறது படம். வாழ்க்கையைக் கற்பதோடு, முடிவில் மனம் கொள்ளா ஒரு பிரிவையும் மீனாட்சி கொள்ளும் போது நமது மனமும் கனத்துப்போகிறது.

ஒரு படம், ஒரு பிரதான விஷயத்தைப் பேச முயல்கையில் அதற்கான தேவையை, அவசியத்தை அல்லது சூழலை உருவாக்குவதற்காக சில சம்பவங்களைப் பேசவேண்டியது, உருவாக்கவேண்டியது நேர்கிறது. ஆனால் அவை இரண்டாம் பட்சம்தான் என்ற மனநிலையில் உருவாக்கப்படாமல் எவ்வளவு ஆழமானதாக, முக்கியத்துவமுடையதாக உருவாக்கப்படவேண்டும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். இங்கு மீனாட்சிக்கும், சௌத்ரிக்கும் இடையே ஒரு அழகிய உறவு மலர்வதற்கான காரணமாய் இந்து-இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மோதல் காண்பிக்கப்படுகிறது. மனிதம், மெல்லிய உணர்வுகள், நேர்மை, அன்பு என சமூகத்தின் அழகிய ஒரு பக்கம் விரிந்துகொண்டிருக்கையில், கோரமான மறுபக்கத்தையும் காண்பித்து, எதை நீ தேர்ந்துகொள்ளவேண்டும்? என்ன செய்துகொண்டிருக்கிறாய் நீ? என்ற ஒரு அத்தியாவசியமான கேள்வி பார்வையாளனை நோக்கி எழுப்பப்படுகிறது. இன்னும் இந்த சமூகம் குறித்தான நம்பிக்கையை நான் இழந்துவிடவில்லை. ஆனால், அற்ப அரசியல்வாதிகளின் சுயலாப தூண்டுதல்களுக்கு விலை போய், சிந்தனையை அடகுவைத்துவிட்டு அடிப்படைவாத, தீவிரவாத செயல்களை ஒரு குழு மேற்கொண்டுகொண்டேதான் இருக்குமெனில் அந்த நம்பிக்கை நம் அனைவருக்குமே விரைவில் சிதைந்துபோகும். பின்பு அமுதிருக்க நஞ்சைக் கைக்கொண்டவர்களாகி விடுவோம் நாம் அனைவருமே.

இந்து தீவிரவாதக் குழு, இஸ்லாமியர்களைத் தேடி பேருந்தினுள் நுழையும் காட்சியில் ஏற்படும் படபடப்பு படம் முடியும் வரை இருந்துகொண்டே இருக்கிறது நமக்கு. இளைஞர் குழுவுக்கு தங்களின் கற்பனைத் தேனிலவு அனுபவத்தை சௌத்ரி விவரிக்கும் காட்சி, இஸ்லாமிய தம்பதியர் வலுவில் பேருந்திலிருந்து இறக்கப்படும் போது ஆண்கள் கூட பயத்தில் உறைந்துபோயிருக்க, ஆற்றாமையால் அழுதுகொண்டே தன் எதிர்ப்பைப் தெரிவிக்கும் கல்லூரி மாணவி, சௌத்ரி ஒரு இஸ்லாமியன் என்று மீனாட்சி அறியவரும் நிகழ்வு, பேருந்து நின்றவுடன் காரணம் தெரிவதற்கு முன்னமேயே சலித்துக்கொண்டு, விபத்தாக இருக்கும் என்று வந்த வதந்தியை விவாதிக்கும் நபர்கள், இரண்டாவதுமுறை சௌத்ரியின் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் மீனாட்சி, இரவுப் பொழுதில் மான்களைக் காமிராவின் வழியே கண்டு குதூகலிக்கும் மீனாட்சியின் கண்கள், மௌனத்தையே அன்பாக்கித் தந்து சௌத்ரியை அவள் வழியனுப்பிவைக்கும் இறுதிக்காட்சி என படம் நெடுக  கவிதை அனுபவங்கள் விரவிக்கிடக்கின்றன.

அமைதியான, ரசனையான புகைப்படக்காரன் சௌத்ரியாக வரும் ராகுல் போஸ், அற்புதமான இசை, சினிமாத்தனமில்லாத அழகிய காட்சியமைப்புகள், முழுமையான பிசிறில்லா திரைக்கதை என, சூழலை அப்படியேத் தந்து பல்வேறு சிந்தனைகளில் நம்மை மூழ்கடிக்கும் இயக்குனர் அபர்ணா சென் என படத்தில் அத்தனையும், அனைவரும் பாராட்டுக்குரியவர்களே!

இறுதியாக..

கொங்கனா சென் ஷர்மா. என்ன நிறம்! என்ன கண்கள்! 


பெண்களுக்கே உரிய அலட்சியம், பரிவு, ஏக்கம், இயலாமை, துணிவு, சார்ந்திருக்கும் குணம், ஆர்வம், பயம் என அத்தனை உணர்வுகளையும் இயல்பாய் பதிந்திருக்கிறார். பிரச்சினைக்குரிய பகுதியைக் கடந்து ரயில் ஏறியவுடன் அத்தனைத் தயக்கத்துடனும், பொங்கும் உணர்வுகளுடனும் ராகுலிடம் அந்த கற்பனைத் தேனிலவு நிகழும் ஊரின் பெயரைக் கேட்கும் கொங்கனாவை இனி எப்போதும் என்னால் மறக்கவே முடியாது. அவரின் முகபாவங்களும், குரல் பாவங்களும் அற்புதமானவை. என்னைப் பொறுத்தவரை இனி கொங்கனா ஒரு பெங்காலிக்காரியே அல்லள், அத்தனை அழகுடனும் கூடிய ஒரு தமிழச்சி, அவ்வளவுதான்!   

*

பனுவல் போற்றும் பனுவல் போற்றுதும்

$
0
0

ஏன் இன்னும் நாம் புத்தகங்களை கொண்டாட வேண்டும்? காரணம் மிக எளிதானதுதான். சினிமா, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என மீடியாக்கள் அனைத்தும் செய்திப்பகிர்வையும், பொழுதுபோக்கையுமே பிரதானமாகக் கொண்டு இயங்கிவருகின்றன. ஆக செய்திகள், அனுபவங்கள் மீதான தொடர் சிந்தனைகள், ஆய்வுகளை நிகழ்த்த நமக்கு இருப்பது புத்தகங்கள் மட்டுமே. அவ்வாறான புத்தகங்களே நாம் கற்க, நம் ரசனையை உயர்த்த, சக மனிதர்களை அவர்களின் இயல்போடு ஏற்க, சூழல்களை, உணர்வுகளைப் புரிந்துகொள்ள, நற்பண்புகளைக் கைக்கொள்ள வழிகாட்டுகின்றன. வேறு வழியேதும் இல்லை நமக்கு!

சமீபத்தில் வாசித்த இரண்டு புத்தகங்கள், நாஞ்சிலின், ’பனுவல் போற்றுதும்’, ’காவலன் காவான் எனின்’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகள்.

பனுவல் போற்றும் பனுவலாம், ’பனுவல் போற்றுதும்’ பனுவலைப் போற்றும் சிறு கட்டுரை இது!

இது போல புத்தக அறிமுகம் எழுதுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. யாரை யார் எப்படி பாராட்டுவது என்பதைப் பற்றியும், தகுதி பற்றியும் சிந்தனை ஏதுமின்றி சகட்டுமேனிக்கு ’நாஞ்சிலின் எழுத்து நடையும், எழுத்து வன்மையும், சிந்தனையும் சிறப்பானவை, பாராட்டுக்குரியவை’ என்று உளறி வைப்பதற்கான சாத்தியம் அதிகம். இருப்பினும் நாஞ்சில் எனக்காக எழுதுகிறார், என் போதாமையை, அறியாமையைப் புரிந்துகொள்வார் என்ற அடிப்படையில் அறிமுகமோ, விமர்சனமோ எழுதுவதிலும் ஒன்றும் தவறில்லை எனத் தொடர்கிறேன். என் போன்ற இன்னும் நான்கு வாசகருக்கு இப்புத்தகங்களும், நாஞ்சிலின் சிந்தனைகளும் சென்று சேர்வது மட்டுமே என் நோக்கம். அது நிகழ்ந்தால் இக்கட்டுரை முழுமை பெறும்.

இரண்டு புத்தகங்களிலுமுள்ள மொத்தம் 43 கட்டுரைகளையும் தனித்தனியே ஆராய்வதோ, வரிகளை எடுத்தாண்டு சிறப்புப் பேசுவதோ என் நோக்கமும் அல்ல, அது அத்தகைய எளிய காரியமும் இல்லை!

ரேண்டமாக சில கட்டுரைகளைப் பற்றி மட்டும் முடிந்தவரை பேசுவோம்.

கல்யாண விருந்தே இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேர்வு. எனக்குப் பாயசம் போன்றது நகைச்சுவை. முதல் புத்தகத்தில் ஐந்தாவது கட்டுரை, ‘பாயிரம் இன்றேல் பனுவல் இன்று’. அவர் அதை சிரித்துக்கொண்டே எழுதியிருப்பாரா? கடுப்பில் எழுதியிருப்பாராவென்றெல்லாம் எனக்குத் தெரியாது. நாக்பூரிலிருந்து ராய்ப்பூர் செல்லும் ஷாலிமர் விரைவுவண்டியில் மொழி தெரியாத சகபயணிகளுக்கு அருகே அடக்கமாட்டாமல் சிரித்து, புத்தகத்தைச் சற்று நேரம் மூடிவைத்தபிறகும் நினைத்து நினைத்து சிரித்து அவஸ்தைப்பட்டதை மறக்கமுடியாது. ஒரு புத்தகத்துக்கு முன்னுரை, அணிந்துரை என்பன எத்தனை முக்கியமானவை என்பதையும், அது இன்றைய பொழுதுகளில் எவ்வாறெல்லாம் இருந்துகொண்டிருக்கிறது, எப்படியெல்லாம் அணிந்துரை, பணிந்துரை, கனிந்துரை, கண்கசிந்துரை, மது வழிந்துரை, கோழிக்கறி மணந்துரைகள் பெறப்படுகின்றன என்பதையும் விளக்கும் கட்டுரை. கூடவே, ஒரு பிரபல எழுத்தாளனாகவும் இருப்பதால் இந்த பிரச்சினையில் சிக்குண்டு எப்படியெல்லாம் இம்சைப் படவேண்டியிருக்கிறது என்பதையும் நாஞ்சில் விவரிக்கும் அழகே அழகு!

அடுத்தொரு முக்கியமான உள்ளடக்கம். குடி. மது. இரண்டு கட்டுரைகள். அதிலொரு ’உண்ணற்க கள்ளை’ என்ற கட்டுரையே சமீபத்தில் வெளியான அழகியதொரு மாற்று சினிமாவான, ‘மதுபானக்கடை’யின் அடிப்படையாகியிருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது. ஒழுக்கமென்பது யாது, மது ஏன் கைக்கொள்ளப்படுகிறது என்பதில் துவங்கி தற்போதைய தமிழகத்தில் எவ்வாறு இது சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதையும், அரசு எத்தகைய அநீதியான மதுக்கொள்கையை கொண்டிருக்கிறது என்பதையும் இவை பேசுகின்றன. பிப்.2008ல் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தமிழகத்தை ஆளும் கட்சியும், ஆளப்போகிற கட்சியுமான இரண்டுமே இந்தச்சீரழிவை ஒத்துக்கொண்ட நிலையில் இவற்றிலிருந்து நமக்கு இனி விடுதலையே இல்லை என்ற உண்மை மனதைக் கலங்கடிக்கிறது.

‘காவலன் காவான் எனின்’ எனுமொரு டைட்டில் கட்டுரை. இது என்னுள் மிகப்பெரிய தாக்கத்தையும், பயத்தையும் உண்டு செய்த ஒன்று. ஒரு சமூகத்தின் மேன்மையும், வளர்ச்சியும், சிறுமையும், வீழ்ச்சியும் அச்சமூகத்தின் அங்கத்தினர்களாலேயே உருவாகிறது. ஆயினும் அதற்கான காரணமாக, தூண்டுதலாக இருப்பவர்கள் அவர்களை வழி நடத்திச்செல்லும் தலைவர்களாகவே இருக்கிறார்கள். தலைவன் நெறி தவறினால்?

நமது இன்றைய பரிதாபகரமான சூழல் மனதைக் கனக்கச்செய்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக்கூடிய வேலை வாய்ப்பை மேலும் உருவாக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை, இருப்பதையும் கூட சிதையச் செய்யும் அரசு. கசடற்று இருக்கவேண்டிய கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் மலிந்திருக்கும் ஊழல். அவற்றை அனுமதிக்கும் கயமை. பெரும் வரலாறு கொண்ட சமூகத்தின் சுயமரியாதையை அற்பமான இலவசங்களைக் கொண்டு அழித்த அவலம். இலவசம் என்பது, நான் பெறும் பிச்சை என்ற எண்ணம் போய், அவன் செய்யும் ஊழலில் இப்படியாவது எனக்கும் கொஞ்சம் பங்கு கிடைக்கட்டுமே என்ற எண்ணம். நாம் கேட்பது அநீதியில் பங்கு என்பது ஒரு புறம் இருக்க, அவன் ஊழல் செய்வதே நம்மிடம்தான் என்பதை உணரா அறிவின்மை. டிவிக்கும், மிக்ஸிக்கும், 100 ரூபாய் பணத்துக்கும் அடித்துக்கொண்டு, நெரிசலில் நசுங்கிக்கொண்டு, விலையில்லாப் பொருட்களுக்காக மானத்தை விலை கொடுத்துக்கொடுத்துக் கொண்டிருக்கும் சூழல்.

‘மானம் மானம் எனத்துடிக்கும் நல்மாண்பிருந்த தமிழ் வீரர் நெஞ்சம்’ எங்கே?

எதிர்காலம் பயமுறுத்துவதாக இருக்கிறது. நாம் அங்கே இருக்கப்போவதில்லைதான். ஆனால் நம் பிள்ளைகள் இருக்கப்போகிறார்கள். ஊழலின் பின்விளைவுகள் மோசமானவை. தரமற்ற நுகர்பொருட்கள். அடிப்படை உரிமைகளுக்கே கொடுக்கப்பட இருக்கிற அநீதியான விலை. நேர்மை அவசியமற்றுப் போகப்போகிற சூழல். அலட்சியத்தால் நிகழப்போகிற உயிர்கொல்லும் விபத்துகள். திறமையும், தகுதியும் இருப்பவனுக்கு நேரப்போகிற பசி. அதனால், அதன் பின் நிகழப்போவது என்ன?

கட்டுரை ’நமது காவலன் காவார், மழை எங்கே பெய்யும்? ஆ எப்படி பயன்தரும்? மக்கள் எங்ஙனம் செழிப்புறுவர்? எங்ஙனம் ஆளும் அருள்?’ என்று முடிந்தாலும்.. சுய பச்சாதாபத்தை மட்டுமே உருவாக்காமல் கொடுங்காவலனுக்கும் உறைக்கும்படியான விஷயங்களையும் சொல்கிறது. ஆயினும், கட்டுரை நம் தலைவர் பெருமக்களின் கருணைப் பார்வைக்குள் விழவேண்டுமே என்பது நம் கவலை.

இரண்டாவது புத்தகத்தில் ஒரு கட்டுரை ஐம்பதாண்டு கால தமிழ் நாவல் வரலாறு நாஞ்சிலின் பார்வையில். புதுமைப்பித்தன் துவங்கி சுதேசமித்திரன் வரையான நீண்ட பட்டியல், அவர்களின் பிரதான படைப்புகள் பற்றிய குறிப்புகள். நிரம்ப பிரமிப்பாக இருந்தது, அவர் இவ்வளவு வாசித்திருக்கிறாரே என்பதால் அல்ல, இதில் குண்டூசி முனையளவு கூட நாம் வாசிக்கவில்லையே, எப்போது செய்யப்போகிறோம் என்ற எண்ணத்தால். இது நம் சம காலத்திய இலக்கியம், இதையே தவறவிட்டுக்கொண்டிருக்கிறோமே என்ற எண்ணம் கொஞ்சம் வெட்கத்தைத் தரும் போதே, சங்கத் தமிழ் இலக்கியங்கள் குறித்த கட்டுரைகள். ‘உன் தாத்தன் உனக்காக விட்டுச்சென்ற பெருஞ்செல்வமிது நண்பனே. நீ இதன் மீது நின்றுகொண்டு தமிழ் சினிமா எனும் ஒட்டடையை சிலாகித்துக் கொண்டிருக்கிறாய்’ என்று நாஞ்சில் சொல்வதாய் எனக்குத் தோன்றிற்று.

உயிர்காக்கும் மருந்தாம் உணவைப் பாழடிக்கும் நமது அலட்சிய மனப்பாங்கு, நம்முன்னோர்கள் ஏற்படுத்திய – சூழல் நலம் பேணிய - நம்மைச்சுற்றியிருந்த நீர்நிலைகளின் அழிவு, எறும்பு முதலான சிற்றுயிர்கள், மரங்கள், செடி, கொடிகள் பற்றிய நமது அறிவின்மை மற்றும் அதற்கான தேவை, குணங்குடி மஸ்தான் சாகிபு மற்றும் பாரதியின் மூத்தாள் செங்கோட்டை ஸ்ரீ ஆவுடையக்காள் குறித்த பகிர்வுகள், வெங்கட் சாமிநாதன் எனும் திறனாய்வு மேதை பற்றிய எண்ணங்கள்.. தவிரவும் நாஞ்சிலின் சில அழகான பர்சனல் அனுபவங்கள் என.. புத்தகங்கள் நமக்கு சிந்திக்கத் தருவது நிறைய.! அவற்றைப் பெறுவோம், நிறைவோம்!

அச்சு, இணைய இதழ்களில் வெளியான கட்டுரைகள் மட்டுமின்றி, விழாக்கள், கருத்தரங்குகளில் நாஞ்சில் ஆற்றிய உரைகளின் தொகுப்பும் இடம்பெற்றுள்ளது இப்புத்தகங்களின் சிறப்பானது. ஆயினும் மாற்றுக்கருத்து ஒன்றுண்டு, சில புத்தகங்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகளும், குறிப்பாக அவருடைய ’திகம்பரம்’ புத்தகத்துக்கு அவரே எழுதிய முன்னுரையும் கூட இவற்றோடு தொகுக்கப்பட்டுள்ளது ஏற்புடையதாக இல்லை. முன்னுரைகள் அந்தந்தப் புத்தகங்களுக்கானவை, அவற்றோடு இணைந்து அவற்றை வாசிப்பதே பொருத்தமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

காவலன் காவான் எனின் – 168 பக்கங்கள் – விலை ரூ. 100
பனுவல் போற்றுதும் – 216 பக்கங்கள் – விலை ரூ. 130
இரண்டுமே ‘தமிழினி’ வெளியீடுகள்.

(இதழ் எண் -82ல் வெளியானது).
.

ஹரிதாஸ் -விமர்சனம்

$
0
0
ஆட்டிஸக் குறைபாடுள்ள குழந்தைகளைப் பற்றிப் பேசும் முதல் தமிழ்த்திரைப்படம் என்ற வகையில் ஹரிதாஸ் மிக முக்கியமான ஒரு படமாகிறது. மனநலக் குறைபாட்டின் அத்தனை நிலைகளையுமே ஒரே கண்ணோட்டத்தோடு நோக்கும் சமூகம் நம்முடையது. அறிவியலும், மருத்துவமும் ஆய்ந்து தரும் செய்திகளைக் கொண்டு மனமாற்றத்தை, ஏற்றத்தை அவ்வப்போது செய்துகொள்வதே ஒரு நல்ல நாகரீக சமூகத்தின் குணமாக இருக்கமுடியும். அவ்வாறான செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்க்க வேறெதையும் விட கலைக்கு முக்கிய பங்குண்டு. அதை ஹரிதாஸ் செய்திருக்கிறது.

மனைவியை இழந்த ஒரு போலீஸ் அதிகாரி, பாட்டியிடம் வளரும் ஆட்டிஸக்குறைபாடுள்ள தன் பையனை தன்னுடையே வைத்துக்கொள்ளும் விருப்பத்துடன் சென்னைக்கு அழைத்துவருகிறான். கடுமையான பணிச்சூழல் ஒரு புறம். மகனைப் புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கும் தந்தைமை ஒரு புறம். மகனிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, அவனுக்கு ஒரு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தந்துவிடவேண்டுமென்ற ஆதங்கத்துடன் அவன் போராடுகிறான். இன்னொரு புறம் அவனது ஆபத்தான சமூகவிரோதிகளை வேட்டையாடவேண்டிய கடமை.

குதிரைகளைக் காணும் போது ஏற்படும் ஹரியின் எழுச்சி, மாரத்தனில் அப்பா இல்லாத மானசீக தனிமையை வென்று தன் எதிர்காலத்தை நோக்கி ஹரி எடுத்துவைக்கும் முதல் அடி போன்று குறிப்பிட்டுப்பாராட்டவேண்டிய உணர்வு மிகுந்த காட்சிகள் படத்தில் அனேகம்.


போலீஸ் அதிகாரியாக, பரிதவிக்கும் தகப்பனாக  கிஷோர் முழுமையாக அந்தப் பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார். மகனின் பள்ளி ஆசிரியையாக பொறுப்புமிக்க பாத்திரத்தில் சினேகா. இன்னும் பிற நடிகர்களின் பங்களிப்பு என அனைவரும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். இறுதி சண்டைக்காட்சி தவிர்த்து பெரும்பாலும் சினிமாத்தனமில்லாமல் பயணிக்கும் திரைக்கதை. ரத்னவேலுவின் பொருத்தமான ஒளிப்பதிவு. சோகமான, செய்திப்பட உணர்வைத் தந்துவிடக்கூடிய சிக்கலை, சாமர்த்தியமாக எந்த இடத்திலும் சுவாரசியம் கெடாமல் கொண்டு சென்று, ஒரு வித பதைப்புடனே பார்வையாளர்களை வைத்திருந்ததில் இயக்குனர் குமாரவேலன் வெற்றியடைந்திருக்கிறார். டிராஜிடியான கிளைமாக்ஸ் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடிக்கவில்லை. நல்ல கதைகளைக் கொண்ட கமர்ஷியல் படங்கள் சுபமாக முடிவதையே என்னைப்போன்ற ஒரு சாதாரண பார்வையாளன் விரும்புவான் என நினைக்கிறேன்.

தவறவிடக்கூடாத சினிமா ஹரிதாஸ்!

பரதேசி -விமர்சனம்

$
0
0

பாலாவின் படங்கள் மீதான நம் எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து ’அவன்-இவனு’க்குப் பிறகு இல்லாமலே போய்விட்டது என்றும் சொல்லலாம். விளிம்பு நிலை மனிதர்களின் கதைகளைப் பதிவு செய்வது என்பது இங்கு வேறெவருமில்லாத நிலையில் வரவேற்கப்படவேண்டிய விஷயமெனினும் பாலாவின் தொனியும், அவர் முக்கியத்துவம் தரும் காட்சிகளும் வெற்று அதிர்ச்சியை மட்டுமே தரக்கூடியதாக இதுவரை இருந்திருக்கின்றன. அவ்வாறான சூழலில் பரதேசியின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ஏதுமில்லை. ஆனால் ’பரதேசி’யைப் பார்த்த பின்பு அவரளவில், அவரால் இயன்றதை பொறுப்புடன் செய்திருக்கிறார், அவரது வழியைச் செப்பனிட்டுக்கொண்டிருக்கிறார் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளத்தோன்றுகிறது எனக்கு. இன்னும் சொல்வதனால் பாலாவின் படங்களுள் இதுவே சிறப்பான ஒன்றெனவும் எண்ணுகிறேன்.

ஒரு வரலாற்றுப் பதிவு. அதுவும் நமது அல்லது நம்மில் ஒரு சாராரின் அடிமைத்தனத்தை, தோல்வியை, நாம் பேச விரும்பாத ஒரு பொருளைப் பதிவு செய்யும் முயற்சி. அதுவும் 70 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு கதைக்களம். இதைப்போன்ற விஷயங்கள் முற்றிலும் கசடற செய்யப்படவேண்டும். அது இயலாதெனின் அந்தப் படைப்பாளி ‘அலெக்ஸ் பாண்டியன்’ வகைப் படங்களையே செய்யப்போய்விடலாம், அதில் ஆபத்துக்குறைவு. ஆக, பாலா கசடற இதைச்செய்திருக்கிறாரா என்று கேட்டால் பதில் சொல்ல சற்றே தயக்கமாக இருக்கிறது. ஆயினும் இத்தகையக கதைக்களங்களை, நகர்வைக் கைக்கொள்ளும் முயற்சிகளைச் செய்ய இங்கே படைப்பாளிகளே இல்லாத போது, பாலாவை நாம் வரவேற்றே ஆகவேண்டும். சற்றே குறைகளுள்ள முதல் படி எனினும் அடுத்த படியேற, இந்த இயக்கம் அவராலோ, சம காலத்திய படைப்பாளிகளாலேயோ தொடர்ந்து கொண்டு செல்லப்பட இந்தப் படி மிக அவசியமாகிறது. அந்த வகையில் பாலாவையும், அவரது பரதேசியையும் பாராட்டி வரவேற்கிறேன்.

’எரியும் பனிக்காடு’, நாவல் என்ற பெயரிலான ஒரு வரலாற்று ஆவணம். அதையும், ஒரு சாதாரண சினிமாவையும் ஒப்பிடுவதே ஒரு வகையில் தவறுதான். இரு வேறு வடிவங்கள் கொள்ளும் படைப்புகளை ஒப்பிடுவது சரியா என்ற விவாதத்துக்குள் எல்லாம் போக நான் விரும்பவில்லை எனினும் சினிமாவுக்கும், பிற தளங்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசங்களை மட்டுமாவது நாம் கணக்கில் கொள்ளத்தான் வேண்டும். மேலும் இடலாக்குடி ராசாவுக்கும், பரதேசி ராசாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இடலாக்குடி ராசாவைப் பிடித்திருந்ததால், பாலா தனது ராசாவுக்கும் இடலாக்குடிக்காரனைப் போலவே ஒப்பனை செய்து அழகு பார்த்திருக்கிறார் அவ்வளவே.


1939ன் சாலூர் எனும் தமிழகக் கிராமம். கிராமத்தின் இயல்பும், அதன் மனிதர்களும் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். அதில் ராசா எனும் நம் கதை நாயகனும் ஒருவன். ஒரு தேயிலைத்தோட்ட கங்காணியின் (Supervisor) பொய் வார்த்தைகளை நம்பி பிழைப்புக்காக, கிட்டத்தட்ட அந்தக் கிராமமே, காத்திருப்பது மீள முடியாத கொத்தடிமை வாழ்வு என்பதை அறியாமல் புலம்பெயர்கிறது. அதில் காதலியைப் பிரிந்து செல்லும் நம் நாயகனும் முதல் ஆளாய் செல்கிறான். பின் தொடர்வது அவலம் மிகுந்த அவர்களின் தேயிலைத்தோட்ட வாழ்க்கை. நெஞ்சைக் கனக்கச்செய்யும் ஒரு கிளைமாக்ஸுடன் படம் நிறைவடைகிறது.

பழங்கால தமிழக கிராமத்தை உருவாக்கி, இந்தக்கதை, முடிந்தவரை எல்லா வகையிலும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. அதற்காக பாலாவுக்கு முதலில் வாழ்த்துகளைப் பதிவு செய்வோம். 

ஆனாலும் சில இடர்ப்பாடுகள். எங்கெல்லாம் நாம் பொருந்தமுடியாமல் இடர்ப் பட நேர்கிறது? ஓரிருவர் என்றில்லாமல் ஏறத்தாழ அந்தக்கிராமமே புலம்பெயர்கிறதெனில், அங்கே வறுமை தாண்டவமாடியிருக்க வேண்டுமல்லவா? ஆனால், ஒரு கல்யாண விழாவும் அதையொட்டிய கொண்டாட்டமான மதுவிருந்தும்,  விருந்தின்போது இறந்துபோகும் ஒரு பெரியவரின் சாவை மறைத்து, கல்யாண நிகழ்வு நடந்தேற ஒத்துழைக்கும் நல் மாண்பு மிக்க பெண்மணிகளும், துறுதுறுப்பான மனிதர்களும், அந்த மனிதர்களின் ஏளனத்துக்கும், விளையாட்டுக்கும் வடிகாலாக இருக்கும் கதாநாயகனும், அவனைச் சீண்டி விளையாடும் கதாநாயகியுமாக முற்பகுதியின் கதை சுகமாக நிரப்பப்பட்டுவிடுவதில் வறுமை நம் கண்களுக்கே தட்டுப்படவில்லை. நாள் முழுதும் விறகு உடைத்துவிட்டு கூலி மறுக்கப்படும் போதுகூட அவன் ஏய்க்கப்படுகிறான் என்பதுதான் பிரதானமாக இருக்கிறதே தவிர அவனது வறுமை உணரப்படுவதாக இல்லை. இப்படியான கதையின் முக்கியத் தேவை, இங்கே சரிவர சொல்லப்படாமல் போனது பெரிய தொய்வு. 

ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாய் இருந்த மக்கள், நெடும்பயணத்தில் மயங்கி வீழ்ந்த தங்களில் ஒருவனை இரக்கமே இல்லாமல் அப்படியே விட்டுச்செல்வது, அதுவும் கங்காணியின் முழுமையான ஆதிக்கத்துக்குள் வரும் முன்னரே என்பது சற்றும் ஏற்கமுடியாத இன்னொரு உறுத்தல். போலவே ஓரிரு பிரதான பாத்திரங்களின் சிரமத்தைத் தாண்டி தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் அடிமை நிலை இன்னும் கூட உணரும்படி சொல்லப்பட்டிருக்கலாமோ என்பது போன்ற போதாமை. ஆனால் வழக்கமாக கொடூர வன்முறைக் காட்சிகள் என்பது பாலாவுக்கு கைவந்த கலையாயிற்றே, இதில் வாய்ப்புகளும், தேவையும் இருந்தும் பொறுப்போடு நடந்துகொண்டிருக்கிறாரே என்ற ஆச்சரியமே எனக்கு மேலோங்கியிருந்தது. அந்த வகையில் அடிமை நிலை இன்னும் விளக்கமாக காட்சிப்படுத்தப்படாமல் இருந்தது ஒரு வகையில் நல்லதே!

குறிப்பிட்டுச் சொல்வதானால், தப்பிச்செல்லும் ராசாவின் கால் நரம்பை வெட்டும் கொடூரத்தை நீட்டி முழக்காமல், எளிமையாக, அதுவும் அவனது கதறல் ஒலியிலேயே முடித்துக்கொண்டார் இயக்குனர். ஆங்கிலேயே அதிகாரி, மற்றும் கங்காணிகள் பெண்களை பாலியல் தொந்தரவு செய்வதை பருத்திவீரன் போல கதறக்கதற காட்சிப்படுத்தி, வக்கிரமாக காண்பித்திருக்க்கூடிய வாய்ப்பு இருக்கிறதே என பயந்துகொண்டே இருந்தேன். அதைக் கையாண்ட விதமும் இது பாலா படம்தானா என்று என்னை ஆச்சரியப்படவைத்தது.

மற்றபடி, கதைக்களம், கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு, காட்சியமைப்புகள், பீரியட் படத்துக்குத் தேவையான பிரத்யேக உழைப்பு, சினிமாத்தனமில்லாத அதே நேரம், மனம் கனத்துப்போகும் வேதனையில் ஆழ்த்தும் கிளைமாக்ஸ் என பாலா ஒரு புதிய படத்தைத் தமிழுக்குத் தந்திருக்கிறார் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்‌ஷன் குறிப்பிட்டுப் பாராட்டப்படவேண்டியவை. நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புணர்ந்து செய்திருக்கிறார்கள். அதர்வா, தன்ஷிகா, அதர்வாவின் பாட்டியாக வருபவர் எனப் பலரையும் குறிப்பிட்டுச்சொல்லலாம். பிசிறு தட்டிய, பொருந்தாத ஒருவர் உண்டெனில் அது வேதிகாதான். அவருடைய மேக்கப்பும், பர்ஃபாமென்ஸும் படத்தின் திருஷ்டிப்பொட்டு.

நாஞ்சில் நாடன். படத்தின் வசனம்.

ஒரு படத்தின் திரைக்கதாசிரியரின் உணர்வை முழுமையாக புரிந்துகொண்டு இன்னொருவரால் வசனம் எழுதமுடியுமா? அது அவசியமா? அபத்தமா? ஹாலிவுட் படங்களில் அப்படியான ஒருவரே இல்லையே? தமிழில் இப்படி ஒருவரின் பங்களிப்புத் தேவைதானா? எனில், அவசியம் அது தேவைதான் என்பேன். ஏனெனில் தமிழின் மொழிச்சிறப்பு அப்படி. நம் சமூகத்தின் பல்வேறுபட்ட பழக்க வழக்கங்கள், சிந்தனையோட்டங்கள், வட்டார வழக்குகள் அவ்வாறானவை. குறிப்பாக பிற படங்களை விடவும், பரதேசி போன்ற கதைக்களங்களைக் கொண்ட படங்களுக்கு தமிழறிவும், சமூக அறிவும், வரலாற்றின் மீதான ஆர்வமும், முக்கியமாக பொறுப்பும் கொண்ட ஒருவர் தேவைப்படுகிறார் என்பதில் வேறு கருத்துக்கு இடமே இல்லை. இதை பாலாவால் செய்துவிடவே முடியாது. ”மூல வியாதிக்காரனுக்கு பேள்றதே கஷ்டம்..”, “தாயத்தை இடுப்புல கட்டுறதா, புடுக்குல கட்டுறதா..”, “பெரிப்பா, உங்க மந்திரி வெளிய தெரியுது..” போன்ற ’கிரித்துவம் புடிச்ச’ வசனங்களை மேற்கோள் காட்டி நாஞ்சிலைப் பாராட்டுவது என்பதோ, நாஞ்சிலின் வசனங்கள் பரவாயில்லை ரகம் என்பதோ, கெட்டவார்த்தைகள் அதிகம் என்று இகழ்வதோ நிச்சயம் நாஞ்சில்நாடனுக்கு நாம் இழைக்கும் துரோகமேயாகும். இதைப்போன்ற பளிச் ரக வசனங்களே ஒரு வசனகர்த்தாவை நினைவுபடுத்துபவை என்பது அநீதி.

தலைவாசல் படிக்கட்டில் சூடம் எரியவிட்டு பேரன் மீதான கந்திருஷ்டியைக் கழித்துக்கொண்டிருக்கிறாள் ஒரு ஆச்சி. படிக்கு இந்தப் புறம் அவள், அந்தப்புறம் சிறு குழந்தையான அவன். சட்டென கண்ணில் தூசு விழ, அழுதுகொண்டே அவளை நோக்கிப் பாய்கிறான் அவன். சூடம் எரிகையில் படி தாண்டக்கூடாது. அவன் தாண்டும் முன்பே, அவனுக்காக இவள் படிதாண்டி அவனை அள்ளிக்கொள்கிறாள். படி தாண்டியதற்கான பழி ஏதாகினும் அது அவளையே சாரட்டும், பேரன் மீது வேண்டாமெனும் பாசம் அது. அவ்வாறான ஒரு காட்சி இந்தப் படத்தில். ராசா, பஞ்சாயத்தில் எரியும் கற்பூரத்தட்டை அணைத்து, ’இனி அங்கம்மாவை-காதலியை- பார்க்க மாட்டேன் என் சத்தியம் செய்’ என நிர்ப்பந்திக்கப்படுகிறான். போராடும் அவனது ஆச்சியோ, விஷயம் நடக்கிறதோ, இல்லையோ சத்தியம் செய்து மீற நேர்ந்தால் அந்தப் பழி தன் பேரனை வந்தடையுமே என, அந்தச் சூழலை உழப்பி விட்டு, யாரும் கேட்குமுன்பே தானே கற்பூரத்தை அணைத்து, “சத்தியம்தானே.. அதெல்லாம் பண்ணியாச்சு பண்ணியாச்சு, போங்கடா பொழப்பப்பாத்துகிட்டு” என்று பஞ்சாயத்தை சட்டென கலைத்துவிடும் போது அவளது பொறுப்பும், பாசமும் வெளிப்படுகிறது. அப்போது அவள் பேசும் பேச்சும், அதன் தொனியும் நாஞ்சிலின் பேனா தந்தது என்பதுதான் எனக்கு முக்கியமாகப் படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும், பிரத்யேக மண் சார்ந்த, ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் அவன் குணம் முதலாக, ஒவ்வொரு சூழலில், மகிழ்ச்சியில், சோகத்தில், உணர்வுக் கொந்தளிப்பில் எதை எப்படிப் பேசுவான் என்பது உணர்ந்து எழுதப்படுவதே நல்ல வசனப்பணி. அப்படிப்பட்ட காரியத்தைத்தான் செய்திருக்கிறார் நாஞ்சில். 

தவிரவும், சரியாக இது 1939ல்தான் நடந்ததா? 1920 இல்லையா? ஏன் அப்போதே தொழிற்சங்கங்கள் தங்கள் இயக்கத்தை தொடங்கிவிடவில்லையா? அப்போதைய தமிழக அரசியல் கூறுகள் எதுவுமே கண்ணில் படவில்லையே? ஏன் 48 நாள் பயணம்? மதுரையிலிருந்து மாஞ்சோலைக்குப் பயணம் என்று கொண்டாலும் கூட இரண்டு நாள் போதுமே? 48 நாட்களில் தாடி வளர்ந்தது சரி, ஏன் முடி வளரவில்லை? வருடக்கணக்கில் அங்கே வாழ்பவர்ளுக்கு தப்பிச்செல்ல ஒரு வழியுமா கிடைக்கவில்லை? மலை முழுதும் செய்யப்பட்டிருந்த அப்பேர்ப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு எப்படிப்பட்டது? நீலக்கலர் சட்டை போட்ட நான்கைந்து அடியாட்கள் அதற்குப் போதுமா? என வாய்ப்பிருக்கும் நிறைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போகலாம்தான். இவையெல்லாமும் கவனம் கொள்ளப்பட்டிருந்தால் இன்னும் கூட முழுமையான ஒரு சினிமாவாக பரதேசி உருவாகியிருக்கலாம் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆயினும் இந்தக் குறைகள், மையக்கருத்துக்கு பங்கம் செய்வதாக இல்லை என்பதால் இவற்றைத்தவிர்த்தும் செல்லலாம்.

தன்னைத் தொடர்ந்து பாலாவும், சம கால இயக்குனர்களும் பொறுப்போடும், இன்னும் முழுமையைத் தேடியும் நெடுந்தொலைவு பயணம் செய்யவேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டிய வகையில் பரதேசி தவிர்க்க இயலாதவனாகிறான். நம் அன்பும், நன்றியும் அவனுக்கு!

.

தலையாய பிரச்சினை

$
0
0

தலைமுடியை நன்றாக நீர் போக உலர்த்திக்கொண்டு, ஸ்டைலாக சீவி தலையை உலுப்பிக்கொண்டு, ஆடைகளைத் திருத்தம் செய்துகொண்டு கண்ணாடியிலிருந்து திரும்பியபோதுதான் கவனித்தேன், என்னைச் சில நிமிடங்களாக என் மனைவி கவனித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அதில் ஒரு கீற்று கோபம் இருந்ததாக எனக்குத் தோன்றியது நிஜமா என்று தெரியவில்லை. அவளை நோக்கி லேசாக ஒரு புன்னகையை, நட்புடன் உதிர்த்துவிட்டு அலுவலகம் கிளம்பும் வேலையைப் பார்க்கத் துவங்கினேன்.

அவளைப் பொறுத்தவரை அவளுடைய கூந்தல் அலங்காரம் சற்று சிரமமான காரியம்தான். முப்பது வயதுகளின் துவக்கத்தில் இருக்கும் அவளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே நரைக்கத் துவங்கிவிட்டது. போன மாதம் வந்த மைத்துனி, ‘என்னக்கா இப்படி நரைச்சுப்போச்சு உனக்கு?’ என்று கேட்டு இவளை வெறுப்பேற்றும் அளவுக்கு அந்தப் பிரச்சினை இப்போது வெளிப்படையாகவும் ஆகிவிட்டது. கூந்தலின் அளவு இன்னொரு புறம். எந்த வகையில், எப்படிச் சீவி, ஜடை தரித்தாலும் கூந்தல் பின்புற ஜாக்கெட்டைக்கூட தொடச் சிரமப்படுகிறது. தடிமன், சட்டென யாரும் சிரித்துவிடும் அளவில்தான் இருக்கிறது.

சிறப்புத் தாவர களிம்புகள், முட்டை, அமேசான் காடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு எண்ணெய்கள் என பலவிதமான கவனிப்புகளை நிகழ்த்தியும், அவளது கூந்தல் வளர்ச்சி என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. நான் அது குறித்து அவளது மனக்கவலைகளை அதிகரிக்கும் துர்மனம் கொண்டவனல்லன். ஆனால், ‘பாப் ஸ்டைலில் நீ ஏன் முடிவெட்டிக் கொள்வது பற்றி யோசிக்கக்கூடாது?’ என்று நல்மனதோடு நான் ஒருநாள் சொன்னதை அவள் கிண்டலாக எடுத்துக்கொண்டு அது சற்று பின்விளைவுகளுக்கும் காரணமாகியதால் அவ்வாறான என் ஆலோசனைகளை நிறுத்திக்கொண்டேன்.

ஆனால், அவள் என் தலையலங்காரத்தை இன்று கூர்ந்து பார்த்தமைக்கு மேற்சொன்ன இந்தப் பிரச்சினையால் எழுந்த பொறாமை காரணமாக இல்லை என்று எனக்குத் தெரியும். அப்படியானால் அது என்ன?
பள்ளிக்காலம் கடந்த பின்பிலிருந்தே எனக்கு தலைக்கு எண்ணெய் வைத்துக்கொள்ளும் வழக்கம் இல்லை.

எண்ணெய் வைத்துக் கொள்வதென்றால், வாரம் ஒரு முறை ஊற ஊற தலையில் நன்றாக நல்லெண்ணெய் தேய்த்துக்கொண்டு பின்பு சீயக்காய் தேய்த்துக்கொண்டு குளிப்பது, தினமும் தலைவாரிக் கொள்வதற்கு முன்பாக கொஞ்சமாக தேங்காயெண்ணெய் தேய்த்துக்கொள்வது என இரண்டையுமேதான் சொல்கிறேன்.

பள்ளி செல்லும் காலங்களில் காலையில் அம்மா, என்னைப் பிடித்துவைத்து கொஞ்சம் தேங்காயெண்ணெய் தேய்த்து விடுவார். பள்ளிக்காலம் முடிந்த பிறகான என் வாழ்க்கை, என் பிள்ளை பள்ளிக்குச் செல்லத்துவங்கிவிட்ட இன்று வரை விடுதி, வெளியூர், கல்யாணம், வாடகை வீடுகள் என்றே கழிந்துவிட்டதால் அம்மாவின் தேங்காயெண்ணெய்க்கு வழியில்லாது போய்விட்டது. ஆனால் சில மாதங்களுக்கு ஒருமுறை வீடு செல்லும் பொழுதெல்லாம் மறக்காமல், இரண்டு வசவுகளுடன் அருகில் வந்து இரண்டு மூன்று மாதங்களுக்கும் சேர்த்து உள்ளங்கையளவு தேங்காயெண்ணெயை எடுத்து நன்றாக தேய்த்துவிடுவார் அம்மா. என்னதான் ஷாம்பு போட்டு குளித்தாலும் அதன் பலனாய் அடுத்த இரண்டு நாட்களுக்கு முகம் எண்ணெய் மினுமினுப்புடன் இருக்கும். ஏனெனில் எனக்கு முகப்பவுடர் பூசிக்கொள்ளும் வழக்கமும் இல்லை.

இப்படி தேங்காயெண்ணெய் தேய்த்துக்கொள்வது தவிர, தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குளிக்கும் வழக்கம் சிறு வயதில் கூட வருடம் ஒரு முறை தீபாவளிக்கு மட்டும்தான். அதுவும் கூட சின்ன வயது தீபாவளிகள் போலில்லாமல், இப்போதெல்லாம் தீபாவளிக் குளியல் என்பது சாங்கியத்துக்கு விரலில் தொட்டு, ஒற்றைச்சொட்டு எண்ணெயை உச்சந்தலையில் விட்டுக்கொண்டு, ஓடிப்போய் குளித்துவிடுவதாய் ஆயிற்று.

என் தலைமுடிப் பராமரிப்பு இந்த லட்சணத்தில் இருந்தாலும், என் முடி என்னவோ எந்தக்குறையும் இல்லாமல் செழித்து, காற்றில் அலைபாயும் வண்ணம்தான் கிடக்கிறது.

ஏன் நான் எண்ணெய் வைத்துக்கொள்வதில்லை, முகப்பவுடர் பூசிக்கொள்வதில்லை என்பது பற்றியெல்லாம் விளக்கி உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை. சுருக்கமாக சொல்லி முடிப்பதென்றால், கை, கால், நகங்கள் போன்றனவெல்லாம் வளர்வதற்கு உணவு போதுமென்றால், இந்த முடி வளர்வதற்கு மட்டும் ஏன் வெளியிலிருந்து ஒரு போஷாக்கு என்பதாய் என் மூளையில் உதித்த சிறப்பான அறிவியல் சிந்தனையாக இருக்கலாம். முகப்பவுடர் பூசிக்கொண்டால் சாக்பீஸ் பவுடர் பட்ட கைகளைப் போல கன்னத்தில் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது. மேலும் கழுத்தும், கைகளும் ஒரு நிறத்தில் இருக்கையில், முகம் மட்டும் அந்நியமாய் ஒரு வெளுப்போடு இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. அவ்வளவுதான்.

எப்போதாவது குளிர்காலங்களில் கை,கால்களும், தலையும் வறண்டு கிடப்பதாய் ஓர் உணர்வு எழுந்தால் சற்றே எண்ணெய் பூசிக்கொள்ளலாமா என்று தோன்றும். அப்படியே தோன்றினாலும் அதை செயலாக்கம் செய்வது சிரமம்தான். நான் ஒன்றும் அந்தளவில் சோம்பேறி இல்லையெனினும், இதென்ன கைகளை பிசுபிசுப்பாக்கிக்கொண்டு இப்படியொரு வேலை என்ற எண்ணம். அப்படியான ஒரு பொழுதில் மனைவியிடம் தலையை நீட்டி,

’சற்றே எண்ணை தேய்த்துவிடேன்மா’ என்றேன்.

பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும் எங்கள் புத்திரனின் தலையில் உழக்கு தேங்காயெண்ணையை அவள் தேய்த்துக்கொண்டிருந்த ஒரு அழகிய காலைப் பொழுதுதான் அது. ஆயினும்,

‘ஆமா, சின்ன நொள்ளை பாருங்க..’ என்று திட்டிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

என்னைச் சின்ன நொள்ளையாக கருதிக்கொண்டு அவள் இன்னும் கூட பல காரியங்களை எனக்காகச் செய்துவரும்போது இதற்கு ஏன் இப்படி விழுகிறாள் என்று ஆச்சரியமாக இருந்தது.

சமீபத்தில் அவளது அண்ணனும், மதினியும் எங்கள் வீட்டுக்கு வந்தபோது நான் வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்திருக்கலாம்.

‘என்ன மாப்ள, பாத்து நாலு மாசம் இருக்குமா? அதுக்குள்ள உங்களுக்கு முடி இப்படிக் கொட்டிப்போச்சு. அடாடா, கல்யாணத்துல எவ்ளோ முடி இருந்துச்சே. என்னாச்சு?’ என்றேன்.

அவர் என்னவோ, அமைதியாக ‘அதான் கல்யாணம் ஆயிடுச்சே, அதான்..’ என்று ஒரு அசட்டு ஜோக்கை அடித்து, சிரித்து மழுப்பிவிட்டுப் போய்விட்டார். ஆனால் அவர்கள் போனபின்பு இவள் என்னைப் பிடித்துக்கொண்டாள்.

‘அதென்ன கேள்வி, அவரைப் பார்த்து? ஏன் உங்களுக்கு நிறைய இருக்கேன்னு கொழுப்பா?’

‘இதிலென்னம்மா இருக்கு? இயல்பா, சும்மாதானே கேட்டேன்? வேறென்ன பேசறது நான் அவர்கிட்ட?’

‘முப்பது வயசுக்கு மேல ஆம்பளைக்கு தலையில முடி இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? என் மயினி முகத்தைப் பாத்தீங்களா?’ என்று என் தலையைப் பார்த்துக்கொண்டே அவள் கேட்டபோது கூட நான் அவளைச் சந்தேகப்படவில்லை.

பின்பொரு நாள் பக்கத்து வீட்டு நீலாவுடன் இவள் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தற்செயலாகக் காதில் விழுந்தது.

‘அன்னிக்கி நீங்களே பாத்தீங்கதானே நீலா.. இத்தனை வயசுக்குப்பிறகும் அதென்ன பழக்கம்? அவரு என்ன சின்ன நொள்ளையா? அவருக்கு தேய்ச்சுக்கத் தெரியாதா? இல்லைன்னா எனக்குத் தெரியாதா? பேச்சப்பாத்தீங்களா.. என்னாப் பேச்சுன்னு? ஊர்ல எவனுக்கெல்லாமோ வழுக்கை விழுது.. ஹும்’

போன மாதம் வீட்டுக்கு வந்திருந்த அம்மா என்னை இழுத்துப் பிடித்துவைத்து தலையில் தேங்காயெண்ணெய் தேய்த்துவிட்ட சம்பவம் நினைவிலாடியது. கூடவே, ‘இத்தனை வயசுக்குப் பிறகும் நாந்தான் பண்ணனும் உனக்கு எல்லாம்!’ என்று ஒரு டயலாக் வேறு. அப்புறம்தான் நினைவுக்கு வந்தது, நாங்கள் ஊருக்குச்செல்கிறோமோ, அல்லது அம்மா இங்கே வருகிறாரோ எங்கள் கல்யாணம் ஆன இந்த 5 வருடங்களாக வருடம் ஒரு முறையாவது இப்படி ஒரு நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது என.

அம்மா எனக்காக இன்னும் வேறென்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறார் என சிந்திக்கத் துவங்கியிருக்கிறேன் இப்போது. வழுக்கை விழுந்தால் பரவாயில்லை, போனால் போகிறது. வேறெதுவும் தலையாய பிரச்சினை என்றால்.. சமாளிக்கவேண்டாமா?

*

சூது கவ்வும் -விமர்சனம்

$
0
0
சமீப காலமாக தமிழ்சினிமா இதுவரை பார்க்காத புதிய கதைக்களங்களை (genre) புதிதாக வரும் இளைஞர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. காதலில் சொதப்புவது எப்படி, அட்டகத்தி, பீட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.. போன்ற படங்களின் வரிசையில் இதோ சூது கவ்வும்!

சின்னச்சின்ன லாஜிக் குறைபாடுகள், அவ்வப்போது கிளைக்கதைகளில் அலைபாயும் திரைக்கதை என சில பிரச்சினைகள் இருந்தாலும் இந்தப்படத்தில் பாராட்டுவதற்கும், ரசிப்பதற்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

ஒழுக்கமான விதிமுறைகளோடு இயங்கும் ஒரு காமிக்கல் கடத்தல்காரனாக விஜய் சேதுபதி. சூழல் காரணமாக அவருடன் இணையும் மூன்று இளைஞர்கள். தவிர்க்க இயலாமல் அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய, அவர்களது விதிகளை மீறிய ஒரு பிராஜக்ட்! அதன் தொடர்ச்சி, அரசியல்வாதிகள், போலீஸ்காரர்கள் என் பிற்பகுதி, நிறைய சம்பவங்களோடும், காரெக்டர்களோடும் முடிவுக்கு வருகிறது. பெண்களே இல்லாத ஒரு திரைக்கதை. ஒரு ஹீரோயினே இல்லாமல் போரடித்துவிடாது நமக்கு? நலனின் இந்த முதல் புத்திசாலித்தனமே நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறது. ஏற்கனவே காமெடியா, சீரியஸா எனப் பிரிக்க முடியாதபடியான காரெக்டர்கள், சம்பவங்கள். அதோடு கூட விஜய் சேதுபதிக்கு ஹலுசினேஷன் பிரச்சினை. கூடவே அவருடைய காதலி இருப்பதாக ஒரு பிரமை. பிறகென்ன விஜய் மொத்து வாங்கும் இடங்களில் கூட பளபளக்கும் லிப்ஸ்டிக்குடன், கசங்காத மினி ஆடைகளுடன் லாஜிக் பிரச்சினையே இல்லாமல் ஐஸ்க்ரீம் தின்றுகொண்டிருக்கிறார் ஹீரோயின்!


பெரும்பாலும் குறும்படங்களில் நாம் பார்த்த நடிகர்கள். பிரமாதமான பங்களிப்பு. சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ராதாரவியின் காரெக்டர் அட்டகாசம். எம்.எஸ். பாஸ்கரின் இடம், அவரது மகனுக்கு இடம்மாறும் போது வரும் பாடலும், காட்சிகளும் நம்மைச் சிரிக்கவைத்தாலும் கொஞ்சம் கூட நிஜம் மிகைப்படுத்தப்படாத காட்சிகள் அவை. காட்சிக்கு காட்சி வெடிச்சிரிப்பு சிரிக்கவைக்கும் வசனங்கள் இல்லை. இருப்பினும் விறுவிறுப்பில் குறைவில்லை. லாஜிக் மீறலே ஆயினும் ஹெலிகாப்டர் கடத்தல், இருட்டு அறையில் முரட்டுக்குத்து போன்ற விஷயங்கள் ரசிக்கவைக்கின்றன. அதுவும் பலான டயலாக்காக பயன்படுத்தப்பட்டுவந்த இந்த முரட்டுக்குத்துக்கு இனி அர்த்தம் மாறும். தியேட்டரே அல்லோலகல்லோலப்படுகிறது அந்தக் காட்சியில். முரட்டு போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளில் ஒரு ஆக்‌ஷன் படத்துக்கான சுவாரசியம். அவருக்கான க்யூட் முடிவும், அரசியல்வாதி கதையின் க்யூட் முடிவும், விஜய்சேதுபதிக்கான க்யூட் முடிவும் என படம் மொத்தத்தையுமே க்யூட் என்றாலும் தகும்! விஜய் சேதுபதி, தனக்கான கதைகளை தேர்ந்தெடுப்பதில் புத்திசாலியாகத் தெரிகிறார். தொடர் வெற்றி ஏதும் மிதப்பைத் தருமானால் கூடிய சீக்கிரமே விமல், விதார்த் போல மூன்று இஞ்ச் தடிமனுக்கு பகுடர் பூசிக்கொண்டு ஹீரோயினோடு டூயட் பாடக்கூடும். அப்படி ஒரு துரதிருஷ்டம் இவருக்கோ, நமக்கோ நேராமலிருப்பதாக! கடுப்பேற்றும் பாடல்களையே சினிமாவிலிருந்து மொத்தமாக தூக்கிக் கடாசிவிடும் காலம் தூரத்திலில்லை என நினைக்கிறேன். இதில் கதையோட்டத்துக்கு இடைஞ்சலில்லாத வகையில் ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே.  பின்னணி இசை, ஒளிப்பதிவு என எல்லாமே நிறைவு.

நலன் குமாரசாமியை கைகுலுக்கி வரவேற்போம்.

உண்மையைச் சொல்லவேண்டுமானால் சூது கவ்வும் மட்டுமல்லாது மேற்கூறிய அனைத்துப் படங்களிலுமே ஏதோவொரு குறை, குறிப்பாக கதையோட்டத்தில் இருப்பதை நாம் உணரமுடியும். இருப்பினும் அதையும் தாண்டி இந்தப் படங்கள் அனைத்துமே வரவேற்கபடவேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதே இயக்குனர்களின் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த படங்கள் தமிழ்ச்சூழலில் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்படவேண்டியவை. அவை இந்தப் படங்களிலிருந்த குறைகளும் கூட இல்லாமல், இன்னும் புதுமையும், விறுவிறுப்புமாக தமிழ் கமர்ஷியல் சினிமாவின் போக்கையே மாற்றியமைக்கத்தக்க படங்களாக, ரசனையை தூக்கிப்பிடிக்கும் படங்களாக அமையவேண்டும் என்பது நம் ஆசை. இவர்கள் பாக்ஸ் ஆபீஸை சிதறடிப்பதன் மூலம் இன்றைய வெற்று கமர்ஷியல் இயக்குனர்களையும், பில்டப் ஹீரோக்களையும் வான்வெளியிலிருந்து தரைக்கு இறங்கி வரவைக்க வேண்டும். இவர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள் என்று நம்புவோம்.

.

போனஸ்: உதயம் NH4

ஒரு நல்ல சுவாரசியமான படத்துக்கு திரைக்கதைதான் முக்கியம் முக்கியம் என்று பேசிக்கொண்டிருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம் இல்லையா? ஒரு இயக்குனர் நினைத்தால் எப்பேர்ப்பட்ட திரைக்கதையையும் கூட சொதப்பி, கண்கொண்டு பார்க்கவிடாமல் செய்துவிடமுடியும் என்பதற்கு உதாரணம் இந்தப்படம்.

அதையும் மீறி, படம் ஓரிரு இடங்களில் நன்றாக இருக்கிறது என்றால் இயக்குனர் நல்லவேளையாக அப்போதெல்லாம் டயர்டாகி தூங்கியிருப்பார் என நம்பலாம். இயக்குனர் மணிமாறன், வெற்றிமாறனின் மாமனோ, மச்சானோ தெரியல, ஒரு நல்ல ஆக்‌ஷன் ஸ்க்ரிப்ட் போச்சு. மேலும் இப்படி ஒரு ஹீரோயினை கண்டுபிடித்து கொண்டுவந்தவருக்கும் ஏதாவது சிறப்புப் பரிசு வழங்கலாம். முடியல..

.

இப்போதைக்கு கொஞ்சம் அப்போதை!

$
0
0

அந்த விதை அதற்கு முன்னதாகவே விழுந்துவிட்டது. இளமையின் புத்தம் புதிய சிறகுகள்! உடல் எழுதும் ஓவியம்தான். உள்ளம் செய்ததாய் ஒரு கூடுதல் கற்பனை. செய்வனவற்றுக்கான நியாயங்கள் கற்பிப்பதே.. அதில் திளைத்திருப்பதே.. சுகம்தான்.

உணர்வாய் மனமே, அவள் இன்னும் சின்னப் பெண்தான்!

உனது பதினாறே உற்சாகம் எனில், அவளது பதினாறு? அது கடலை தன்னுள் கொண்டிருக்கும் துளி. காண உனக்கு கண்களும் போதாது. உணரவும் உய்க்கவும் உனது ரசனையும் போதாது. கடுமலையின் மீது பொழியும் பெருமழையில் கொஞ்சமாய் நீ நனைந்துகொள். எத்தனை போதாமை கொண்டது இந்த வாழ்வு? நீ நூறு பேராக இருந்தால் இது சாத்தியமாகுமா?

இத்தனை அழகாகவா ஒருத்தி இருக்கமுடியும்?

உனக்கு பொறுப்பே இல்லை பெண்ணே.. கொண்டாட்டம், பரிபூரணம், வாழ்வு எதுவும் உனக்குப் புரியவே இல்லை. விடு, நீ தவறு செய்தால் கூட அது அழகுதான்!

ஒவ்வொரு முறை உன்னை எழுத முயற்சிக்கும் போதும், ஐந்து வயதிலிருக்கும் என் மகள், சொல்ல வரும் விஷயத்தைச் சொல்ல ஒரு வார்த்தையைத் தேடித் திக்கித்திணறி நிமிடங்களாக போராடி, ’என்ன மொழி இது, இத்தனைக் கடினமா.. சொல்லாமலே புரியாதா உங்களுக்கு?’ என்ற அர்த்தம் தொனிக்க “அப்பா!” என்று முடித்துவிட்டு விலகும் தருணமாகவே எனக்கும் ஆகிவிடுகிறது.



‘புரியாதா உங்களுக்கும்? இது காதல்!’ :-))

இன்று மே 8! இது எனக்கான ஏப்ரல் 14! வாழ்த்துகள் அனைவருக்கும்!
.

கலைஞர் 90

$
0
0

நமக்கு மிக அருகிலே இருக்கும் வரலாற்றைக்கூட அறியாத அறியாமையில்தான் சிக்கியிருக்கிறோம். எத்தனையெத்தனை சமூகப்பிணிகள்! அடிமைத்தனம்! சிந்தனையையும் கூட பற்றிக்கொண்ட அடிமைத்தனம்! அதில், இதில் என்றில்லாத சகலத்திலும்! உயிருக்கும், உடமைக்கும் ஆபத்தில்லாததைப்போன்ற தோற்றம் கொண்ட ஒரு மாய அடிமைத்தனத்திலிருந்து புரட்சி உருவாகுமா? உலக வரலாற்றில் எங்கேனும் உருவாகியிருக்கிறதா? வாய்ப்பு மிகக்குறைவானதுதான்.

ஆனால் இங்கு நிகழ்ந்தது.

அதை நிகழ்த்திய பெரியார் எனும் புரட்சிக்காரன் எழுப்பிய சமூக மறுமலர்ச்சிதான் எத்தகையது? பெருமூங்கில் காடொன்றைச் சடசடவென எரித்தத் தீக்குச்சி அவன்!

அப்பணியைத் தொடர்ந்த பேரறிஞரும், கலைஞரும் அதற்காகவே கொண்டாடப்படவேண்டியவர்கள்.



சோர்விலான் என்ற சொல்லின் பொருள் கலைஞர். 

எத்தனையெத்தனைப் பணிகள். பகுத்தறிவுப்பகலவனின் கொள்கைகளை, சுய சிந்தனைகளை எழுத்திலும், சொல்லிலும், ஊடகங்கள் பலவற்றிலும் தன் தங்கத்தமிழ் கொண்டு ஓயாது பரப்பியவர் அவர். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் கட்டப்பட்டிருந்த ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெறிந்தது, சுதந்திரத்தை, சுயமரியாதையை எழுத்தறிவில்லாத கடைசி மனிதனும் உணர்வுகளில் ஏந்திக்கொள்ளும்படியாக கொண்டு சேர்த்தது, கல்வியை, வாய்ப்புகளை எல்லோருக்கும் பொதுவாக்கியது, பெண்ணடிமைத்தனம் எனும் தளையை அறுத்தெறிந்தது.. என தி.மு.கவின் சாதனைகள் பட்டியலிட்டு மாளாது. அந்த வெற்றியில் பெரும்பங்கு கலைஞருக்குண்டு. 

உலகின் மூத்த மொழி தமிழ், மூத்த குடி தமிழ்க்குடி என்போர் உளர். தென்கிழக்காசிய நாடுகள் மட்டுமின்றி உலகெங்குமே தமிழர்கள் பரவியிருந்த காலமிருந்தது எனவும், ஒரு வேளை அவர்கள் உலகையே ஆண்டிருக்கவும் கூடும் என்ற கூற்றும் கலாச்சார, பண்பாட்டு ஆய்வாளர்களிடையே உள்ளது. சமீபத்தில் ஆப்பிரிக்கக்கண்டத்தின் கேமரூன் தேசத்து பழங்குடியினர் தெளிவான தமிழ் வார்த்தைகள் பலவற்றை அவர்களது மொழியில் கொண்டுள்ளனர் எனும் செய்தியை அறிகிறோம். இவை ஒருபுறமிருக்க, தமிழ் ஒரு தொல்மொழி என்பதில் நமக்கு ஐயமில்லை.

தமிழ்க் காதல் என்பதே பிறமொழி எதிர்ப்பு என்பதாக பல சமயங்களில் புரிந்துகொள்ளப்படுகிறது. ’மொழியில் என்ன இருக்கிறது?’ என்பதாக பல சமயங்களில், அறியாமையில் விளையும் கேள்விகள் எழுகின்றன. மொழி என்பது சுயம். தாய்மொழியை இழப்பதால் நாம் நம் சுயத்தை இழக்கிறோம். நம் பாரம்பரியத்தை, பண்பாட்டை, இயல்பைத் தொலைக்கிறோம். நம் இனமே இரவல் முகத்தோடு அலையப்போகும் அவலம் நேரலாம்.. சகல சாத்தியங்களையும், அழகையும் கொண்ட மொழியைத் தொலைப்பது என்பது அறிவீனம்!

இத்தகைய நவீன அறிவியல், கணினி உலகிலும் தமிழை இந்த அளவிலாவது நாம் கொண்டுவந்திருக்கிறோம் எனின், அதற்கான பெருமையைப் பெற்றுக்கொள்ளும் மூத்த அறிஞர்களுள், போராளிகளுள் கலைஞர் முதல் வரிசையில் இருப்பார். தமிழிலக்கியத்தில் பங்குபெற்றோர் மட்டும்தான் ’அவரே என் தமிழார்வத்துக்குக் காரணம்’ என்று அவரை புகழமுடியும் என்றில்லை. நம்மைப்போன்ற வாசகர்களும் கூட என் தமிழார்வத்துக்கு கலைஞரே காரணம் என்றும் சொல்லலாமில்லையா? அவரின் நகைச்சுவை இழையோடும் தமிழ்ச்சுவை அத்தகையது. எத்தனை நாவல்கள், எத்தனைக் கட்டுரைகள்!

வரலாற்றையும் கொஞ்சம் வாசித்தறிவோம். கலைஞர் அவர் காலத்தைய, தமிழ் சமூகம் எதிர்கொண்ட முக்கியத் தளைகளுக்கு எதிராக சிறப்பாக போராடினார். பத்து வயதில் தொடங்கிய அந்தப் போராட்டம் தொண்ணூறு வயதில் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் நம்மில் சிலர், ஆற்றவேண்டிய நம் பங்கும் இருக்கிறது என்பதை மறந்து இப்போதும் தொடரும் சில சமூகத் தளைகளுக்காகவும், புதிதான அவலங்களுக்காகவும் அவர் என்ன செய்தார் என்பதாக அவரையே சீண்டிக்கொண்டிருக்கிறோம்.

வாழ்த்த வயது ஒரு தடையல்ல..

மூத்த சகோதரனுக்கு என் அன்பு வாழ்த்துகள், தொண்ணூறல்ல, இன்னும் நூறாண்டுகள் காண்!

.
Viewing all 108 articles
Browse latest View live