எஸ்.எஸ்.ராஜமௌலி, ஒரு தேர்ந்த கமர்ஷியல் சினிமா நிபுணர். மேலும், கலைத்தன்மைமிக்க சினிமாவின் மீது சிறிதளவும் நம்பிக்கை கொண்டவராக அவர் தம்மை எப்போதும் காட்டிக்கொண்டதே இல்லை. நாமாக எதையாவது வரிந்து கொண்டோமேயானால் ஏமாற்றம் இயற்கைதான். ஆனால், கான்களின் கமர்ஷியல் இந்தி முகம்தான் இந்திய சினிமாவின் முகம் என உலகுக்குச் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் உலகெங்கும் கொண்டு செல்லப்படும் ஒரு தென்னிந்திய சினிமா, வேறொரு பெருமைக்குரிய அடையாளத்தை நமக்குத் தந்துவிடாதா என என்னைப்போல ஒரு சாமானிய ரசிகன் எதிர்பார்ப்பதிலும் தவறு இருக்க முடியாதுதான் இல்லையா? ஆனால், அது அத்தனை எளிதானதல்ல என்பதையும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். இந்த விஷயத்தில் பாகுபலி நம்மை ஏமாற்றியிருக்கிறது என்பதுதான் உண்மை.
ஒரு உலகளாவிய மேக்கிங் தரத்திற்கு அருகே, பாகுபலியை தெலுங்கு சினிமா உருவாக்கியது ஆச்சரியமான ஒரு கோணம். ஆனால், பாகுபலி உள்ளடக்கத்தில் தெலுங்கு சினிமாவாகவே மட்டும் நின்று போனது பரிதாபமான இன்னொரு கோணம்.
கதையிலும், திரைக்கதையிலும் எந்தப் புதுமையும் இல்லை. ஒரு பள்ளத்தாக்கில் ஷிபு எனும் சிறுவன் வளர்ப்புப் பெற்றோரால் வளர்க்கப்படுகிறான். கொட்டும் அருவியை எதிர்த்து மேலேறுவது அவன் உள்மனம் கொண்டுள்ள ஆசை. உண்மையில் அவன் அங்கிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு ராஜ வாரிசு. வாலிப வயதில் அவன் எண்ணப்படி மேலே ஏறியும் விடுகிறான். மேலே ஒருபுறம் ஹீரோயின் உள்ளிட்ட ஒரு குழு. இன்னொரு புறம் மகிழ்மதி அரசாங்கம். அங்கே இன்னும் அவனது அன்னை சிறைவைக்கப்பட்டிருக்கிறாள். மீதி கதையை நாம் எளிதில் ஊகித்துவிடமுடியும்.
போதாத குறைக்கு படுத்தி எடுக்கும் டிபிகல் தெலுங்கு சினிமா ஹீரோயிசம் வேறு. ஹீரோவின், வில்லனின் பராக்கிரமத்தை காண்பிக்கவென்றே லாஜிக் இல்லாத காட்சிகள் படம் நெடுக வந்துபோகின்றன. ஹீரோ பனிமலையில் (பனிமலையா என ஆச்சரியம் கொள்ளாதீர்கள், தேவைப்பட்டால் இப்படி பனிமலை, பேரருவி, பாலைவனம், கானகம் எல்லாம் வரும்) ஒரு பெரும் பனிச்சரிவை ஏற்படுத்திவிட்டு, ஒரு கல்லைப் பெயர்த்து பனிச்சறுக்கி, அதிலிருந்து தப்பி தன் வீரத்தைக் காண்பிக்கிறார் என்றால், வில்லன் ஆனையளவு இருக்கும் காட்டெருதுவை கையால் அடித்தே சாகடிக்கிறார். ஷிபுவின் தந்தையும், பிரதான கேரக்டருமானன பாகுபலியின் பிளாஷ்பேக்கிலும் அவர்தம் பேராற்றலைக் காண்பிக்கவென்றே கதைக்குள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு பெரும் படையே காலகேயர்கள் எனும் பெயரில் வந்து செல்கிறது. ஒரு பெண் வீரம், கொள்கை மிக்கவளாக இருக்கலாம். ஆனால், இப்படி ஒரு ஹீரோவுக்கு, ஜோடியாக இருப்பதால் பாவம், அவளது மனத்துயர், வீரம் எல்லாம் அவர் முன் செல்லாது. ஒற்றைக்கையில் கட்டிப்பிடித்து அடக்கி கண்மை போட்டுவிட்டுவிடுவார், பொறுத்துக்கொள்ள வேண்டும். படம் பூராவும் இதைப்போன்ற காட்சிகள்தான்.
மேலும் ஒரு குறையாக படம் இடைவேளையை முடிவாகக் கொண்டு முடிகிறது. இப்படித் துண்டு போட்டது போல இரண்டு படங்களாக இதற்கு முன்னர் எங்கும் எடுக்கப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை.
நடிப்புக்குப் பெரிய வேலை இல்லை எனினும் ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், அனுஷ்கா, ப்ரபாஸ், ராணா போன்றோர் திரையை நிறைக்கும் போது அவர்களின் ஆளுமையைப் புரிந்துகொள்ளமுடிகிறது. இவர்களையெல்லாம் சரிவர நம் சினிமா பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் நிஜம். இதேதான் இசை, கலை, ஒளிப்பதிவு போன்ற பிற தொழில்நுட்பக் கலைஞர்களின் நிலையாகவும் இருக்கக்கூடும். திறமைகளுக்கு இங்கே பஞ்சமில்லை, அதைப் பயன்படுத்திக்கொள்வதில்தான் நாம் சற்றுப் பின்தங்கிக்கிடக்கிறோம். போலவே இப்படத்தில் பட்ஜெட்டுக்கு ஏற்ற அளவில் சிஜி வேலைப்பாடுகளின் நல்ல தரம், சிக்கலான இடங்களைத் தவிர்த்திருக்கும் புத்திசாலித்தனம் போன்றனவற்றையும் காணமுடிகிறது. குறிப்பாக பிற்பாதியில் வரும் போர்க்களம் உண்மையில் இதுவரை இந்திய சினிமா கண்டிராததுதான். அதில் சிஜியின் பங்களிப்பை விட நிஜ கள உருவாக்கமே அதிகம் என்பதையும் உணரமுடிகிறது. அங்குதான் ராஜமௌலியின் உழைப்பு, நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொண்டு ஒரு நிஜ போர்க்களத்தையே உருவாக்கி போரை நடத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு, கலை, காஸ்ட்யூம், சிஜி என பலவும் ஒன்றிணைந்து ஒரு அட்டகாசமான காட்சியனுபவத்தைத் தருகின்றன. ஒரு ஓவியத்தைப்போன்ற, அவ்வப்போதைய ஃப்ரீஸிங் காட்சிகள் ஒரு தனி விருந்து. போஸ்டர்களில் நாம் காணும் ஷிபுவின் போர்க்கள பாய்ச்சல்கள், அலைபாயும் மேலாடையுடன் தமன்னா, நீருக்கு மேலே குழந்தையைத் தூக்கிப்பிடித்திருக்கும் கை என ஓவியத்துக்கு நிகரான ரசனைக்கு விருந்தாகும் காட்சித் துண்டுகள் இன்னும் பலவுண்டு படத்தில்.
எஸ்.எஸ்.ராஜமௌலி எனும் பெயர்தான், தென்னிந்திய சினிமாவில் இப்படி ஒரு படத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறது என்பதை நாம் மறுக்கமுடியாது. தமிழும் சளைத்ததில்லை எனினும் கூட கமர்ஷியல் மொக்கைகளில் தெலுங்கு சினிமாவை அடித்துக்கொள்ளவே முடியாது. ஆனால், பெரும்பாலான கமர்ஷியல் இயக்குநர்களைப்போல, ராஜமௌலி ரசிகர்களை முட்டாள்களாகக் கருதுவதில்லை. இந்த ஒரு விஷயத்தில்தான் அவர் வித்தியாசப்படுகிறார். அதன் பலன்தான் அவருக்குத் தரப்பட்டிருக்கும் இந்த இடமாகும். பாகுபலியை ஒரு மொக்கைப்படமாக மட்டுமே தாண்டிச் சென்றுவிட முடியாதபடிக்கு ராஜமௌலியின் அசுர உழைப்பும், நம்பிக்கையும் நம்முன்னே நிற்கின்றன.
ஆனால் பாகுபலியின் உள்ளடக்கத்தின் மூலம், தேவை, போதாமை பற்றிய கவலைகள் ராஜமௌலிக்கு இல்லை. அதில் ஒரு டிபிகல் தெலுங்கு கமர்ஷியல் இயக்குநரின் இடத்திலிருந்து ராஜமௌலி சிறிதும் வழுவினாரில்லை. இனியும் அதை அவர் செய்யக்கூடியவரில்லை என்பதும் தெளிவாகிறது. அதனால்தான் இப்படியான ஒரு ஹிஸ்டாரிகல் படத்திலும் பச்சைக்கலர் ஜிங்குச்சா என ஒரு டூயட்டும், ஐட்டம் சாங்கும் வைக்கமுடிகிறது. அதனால்தான் அவரது ஹீரோவின் கால்கள் காற்றிலேயே மிதக்கின்றன. அதனால்தான் ஹீரோயிஸம் இருக்கிறதா, அது போதும் என ஒரு தாத்தா காலத்துக் கதையை அப்படியே எந்தப் புதுமையுமில்லாது எடுத்துக்கொண்டிருக்கிறார்.
மொத்தத்தில் படம் முடிகையில், மேக்கிங்கால் ஒருவித உற்சாகமும், திரைக்கதையினால் ஒருவித சோர்வுமான கலவை உணர்வுடன்தான் அரங்கை விட்டு நாம் வெளியேறுகிறோம்.