”தா..ரா” என முதல் காட்சியில் நித்யா சொல்லும் போது விழுந்தவன்தான். சிவப்பு சேலை கட்டிக்கொண்டு நித்யா, துல்கருடன் டான்ஸாடிக்கொண்டிருக்கும் போதுதான் படம் முடியப்போகுதில்லை என்ற நினைவுக்கே வந்தேன். அழகு ஆராதிக்கப்படவேண்டிய விஷயமே இல்லைதான், ஆனால் வாழ்வென்பதே முரண்தானே? அழகால் வீழாமல் இருக்க இயலவில்லை. நித்யா மட்டுமல்ல, படமே தன் அழகால் வீழ்த்துக்கிறது நம்மை.
இங்கு மட்டுமா? உலகெங்குமேதான். ஏன் ஒரு படத்தின் எல்லாமாகவும் இருக்கும் இயக்குநரை விட இந்த நடிகை, நடிகர்களுக்கு மட்டும் இத்தனை புகழ்? இத்தனை முன்னுரிமை? என்று யோசித்தோமானால் அதில் நியாயம் ஒன்றும் இல்லாமலில்லை.
ஒரு திரைப்படத்தின் எந்த நுட்பம் அதிமுக்கியமானது என்பதை வரையறுப்பது அத்தனை எளிதல்ல, போலவே கதையை விடவும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு பிரதானமானதோ என்று சில சமயங்களில் நான் எண்ணுவதுண்டு. அத்தகைய கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டுவதும், அந்தச்சூழலில் அவர்கள் வாழ்வதாகவும் ஒரு மாயையை உருவாக்கி நம்மை ஒன்றச்செய்வதுமான இமாலயப் பணி அவர்களிடம்தானே இருக்கிறது.
‘ஓ காதல் கண்மணி’ படத்தில் காதலர்களாக வரும் துல்கரும், நித்யாவும் அத்தனை உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். பாத்திரப்படைப்பும், கதையும் அதற்கு இணையாய் நின்றிருக்கிறது. முதலாக குறிப்பிடப்படவேண்டியது அதுவே! மொத்தத்தில் பலன் நம் ரசனைக்கு. ஆதியையும், தாராவையும் செதுக்கித் தந்ததில் துல்கருக்கும், நித்யாவுக்கும் மட்டுமே பாராட்டை ஒதுக்கிவிடமுடியாது. மணிரத்னம், பிசி ஸ்ரீராம், ஏஆர்ரகுமான் எனும் மூன்று கிரியேட்டர்கள் ஆனையைப் போல பின்னணியில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அது ஆப்வியஸ். ஆனால், ஆங்கிலப்படங்களில் மட்டுமே காணக்கிடைக்கும்படியான ஒத்துழைப்பு ஒவ்வொரு பிற துறைகளிடமிருந்தும். மேக்கப், காஸ்ட்யூம், ஆர்ட் என துல்லியம் பிரமிப்பூட்டுகிறது. லைவ் ஒலிப்பதிவு என்பது என் புரிதல். அதில் நித்யாவின் குரல் மயக்குகிறது, அமைதியான அறையில் ஒலிக்கும் கிறிஸ்டல் கிளியர் குரல் போல. பொதுவாக இது மணிரத்னம் படங்களில் இருக்காதுதான். அனன்யாவின் திருமணம் நடக்கும் ஆரம்பக்காட்சியில் அனன்யா, பார்வையாளர் வரிசையிலிருக்கும் ஆதியிடம் ஏதோ சொல்கிறார். ஊஹூம், இரண்டாம் முறை உன்னிப்பாக இருந்தும் காதில் விழவில்லை. சரிதான், அது, ஆடியன்ஸுக்கு அவசியமில்லாத ஒன்றாகத்தான் இருக்கும். அதனால்தான் நித்யாவின் குரலில் இருந்த தெளிவு எனக்கு ஆரவாரமாக இருந்தது. முதல் காட்சியில், “Taa.. Rhaah” என மென்குரலில் சொல்கையில் அவரது நாக்கு மேலண்ணத்தைத் தொடாமல், சரியான இடத்தில் விரவுவதைக் கூட உணரமுடிந்தது. அப்படியான ஒலிப்பதிவு.
மேக்கப், எந்நேரமும் பளீரென இருக்கவைக்க மெனக்கெடாமல் மை கலைந்தோ, கருவளையத்தின் ஆரம்பமோ என நினைக்கவைக்கும் படியாகவும் நித்யாவை அனுமதித்திருக்கிறது. காஸ்ட்யூம், சில தருணங்களில் அவரது உடல்வாகுக்கு பொருத்தமில்லா உடைகளைத் தந்திருக்கிறது. ஆதி இரண்டு நாட்களாக தொலைந்துபோய்விட்டு மீண்டும் வருகையில் நித்யா அணிந்திருக்கும் உடை இயல்பை பிரதிபலிக்கிறது. தப்பைக்கூட பிளான் பண்ணி சரியாக பண்ண மணிரத்னம் குழுவால் மட்டும்தான் முடிகிறது.
இயக்குநரை விடுங்கள், அவரைப் பற்றிப்பேச நமக்குப் பற்றாது. இசை? வேணாஞ்சாமீ! நான் வரலை இந்த ஆட்டத்துக்கு. டயலாக் ரைட்டரை மட்டும் பிடித்துக்கொள்வோம். மணிரத்னத்தின் வசனங்கள் எப்போதும் சற்றே இயல்பு மீறியவைதான் அல்லவா? இல்லையா? ”நா உனக்கு கண்மணியா?” என்ற முகம் நிறைந்த சிரிப்பும் பூரிப்புமாக தாரா கேட்கும் இடமும், ”அழாதே கண்மணி சொல்லு..” என தாரா கேட்கும் இடமும் இப்போது நினைவுக்கு வருகிறது. ரொம்ப ட்ரமாடிக்காக இருக்கிறதோ.? யோசித்துப்பார்த்தால் என் நிஜ வாழ்வில், சில தனித்த தருணங்களில், இதை விடவும் ட்ரமாடிக்காக நான் நடந்துகொண்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ட்ராமா வாழ்க்கையின் ஒரு பகுதி. ட்ராமா ஒரு சுவை.
இன்னும், கணபதி அங்கிள், பவானி ஆண்டி, மூளையில்லாத வாசு, தாராவின் அம்மா, அவரது அஃபையரான (படத்தின் ஒரு காட்சியில் கூட வராத) கமிஷனர் என அத்தனை நிறைவான பாத்திரப்படைப்புகள். தாராவின் அம்மா, அலுவலக மீட்டிங்கில் இருக்கையில் தாரா போன் செய்கிறாள். தர்மசங்கடமான சூழலில் தயங்கும் குரலுடன் “ஸெனித், கேன் வி மீட் ஆப்டர் டூ மினிட்ஸ்?” என அனைவரையும் வெளியே அனுப்புகிறார். ஏன், வழக்கமான தொழிலதிபர் அம்மா மாதிரி அருகில் இரண்டு பிஏக்கள் கையில் பைலுடன் வர, பட்டுச்சேலையில் ஹாலிலிருந்து வாயிலுக்கு வரும் போது பேசலாமே.? மாஸ்டர் ஸ்ட்ரோக்ஸ்!
கதை? படம் இந்த நூற்றாண்டிலும், கல்யாணத்தின் அவசியத்தை நிறுவும் பழமைக்கு ஆதரவாக நிற்கிறதா என்ற கருத்துக்குள் போக வேண்டியதில்லை என நான் நினைக்கிறேன். இதை ஒரு தனிப்பட்ட காதலர்களின் கதை என்றும் அணுகலாம்! ஒரு படைப்பாளி, அதுவும் தேர்ந்த படைப்பாளி தன் கதையினூடாக சமூகத்தை பாதிக்கத்தான் செய்கிறான். ஆகவே இதை அவ்வளவு எளிதாக தாண்டிச்சென்றுவிட முடியாதுதான், கூடாதுதான். ஆனால், இந்தக் கருத்தில் நேர், எதிர் வாதங்களை வைப்பது அத்தனை சுலபமல்ல. எல்லாவற்றிலும் அபத்தங்கள் நிறைந்திருக்கும். இப்போதைக்கு, கல்யாணத்துக்கான சரியான மாற்று இன்னும் கண்டறியப்படவில்லை என்று கொண்டு அதுவரை, அதை ஏற்றுக்கொண்டுதான் தொலைய வேண்டியிருக்கிறது என்று தீர்ப்பு சொல்லிக்கொள்வோம். ஒத்து வாழ்தல், கல்யாணத்துக்கு சரியான மாற்றா என்பதை காலம் முடிவு செய்யும். செய்யட்டும்!
என்னைப் பொறுத்தவரை இந்தக்கதை ஒரு அழகான காதல் கதை அல்லது கவிதை. ஒவ்வொரு காட்சியும், காட்சித்துண்டும் காதல் கவிதைக்கான நியாயம் செய்வனவாக பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டிருக்கின்றன ஒரு ஓவியனின் நுணுக்கத்தோடு. கலையில் தேர்ந்தவனின் கரத்திலிருந்து மட்டுமே வெளிப்பட வாய்ப்புள்ள மாஸ்டர் ஸ்ட்ரோக்ஸ்! எளிய கதை, எளிய காட்சிகள்தான். ஆனால் அவற்றை இத்தனை உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்திடுவது அத்தனை எளிதல்லதான். தனது ரசனை, நீண்ட அனுபவம் வாயிலாக அதை சாத்தியப்படுத்தி, தனது அடுத்த படிக்கு முன்னேறியிருக்கிறார் மணிரத்னம்.
எவர்க்ரீன் அலைபாயுதேவை பின்னுக்குத் தள்ளி நம்மை நோக்கிச் சிரிக்கிறாள் இந்த அழகுக் கண்மணி!
*